பதிவு செய்த நாள்
24 ஏப்2017
04:28
இது, நிறுவனங்கள் ஆண்டு கணக்குகளை அறிவிக்கும் காலம். ஆண்டின் லாபக் கணக்குகள் முதலீட்டாளர்களுக்கு முக்கிய அறிகுறிகளை தருகின்றன. முதலில், முடிந்த ஆண்டின் லாபம் எந்த அளவு எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தது என்ற தெளிவை அது தரும். அடுத்து, வரும் ஆண்டிற்கான லாபம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்படும்.
ஒரு நிதியாண்டின் நிறைவு, முதலீட்டாளர்கள் மனதில் எந்த அளவு நிறைவையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன என்பதன் மூலமாக, சந்தையின் போக்கை தீர்மானிக்கக்கூடிய வல்லமை கொண்டது. அடுத்த ஆண்டு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள், ஆண்டு லாபக் கணக்கைப் பார்த்த பின் முடிவு செய்வது மரபு. இதுவரை, சில பெருநிறுவனங்களின் முடிவுகள் மட்டுமே வெளிவந்து உள்ளன. தனியார் வங்கிகள் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை அறிவித்து உள்ளன. இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் யெஸ் வங்கியின் முடிவுகள் எதிர்பார்ப்பை விஞ்சவில்லை. மாறாக, இந்த வங்கிகளின் வாராக்கடன்கள் அதிகரிக்குமோ என்ற அச்சம் தொடர்கிறது.
எச்.டி.எப்.சி., வங்கியின் முடிவுகள் எதிர்பார்ப்பை விஞ்சின. இந்த நிறுவனம் தொடர்ந்து சந்தையின் எதிர்பார்ப்பை விஞ்சும் என்றே முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு அமைந்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து இந்திய சந்தையின் தலைமை நிறுவனமாக விளங்கும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். முக்கிய மென்பொருள் நிறுவனங்களான இன்போசிஸ் மற்றும் டி.சி.எஸ்., முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டன என்றால் அது மிகையல்ல. எதிர்காலத்தைப் பற்றி ஒரு நம்பிக்கையான நிலைப்பாட்டை ஏற்படுத்த இந்த இரு பெருநிறுவனங்களும் தவறியது பெரும் ஏமாற்றத்தை விதைத்துவிட்டது. எதிர்காலம் பற்றிய சந்தேகங்கள் வலுக்கத் துவங்கிவிட்டன. இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கோடு டிவிடெண்டு மற்றும் ‘பைபேக்’ நடவடிக்கைகளை, இவ்விரு நிறுவனங்களும் அதிகரித்துள்ளன. முதலீட்டாளர்களின் மனநிலை மீது இந்த முடிவுகள் ஏற்படுத்தும் தாக்கம் போகப்போகத்தான் புரியும்.
ஆனால், இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து பல இடர்களை மீறி வெற்றிகரமாக பயணித்த இந்த துறை, இந்த முறை பெரும்பாடு படும் என்பது சந்தையின் மதிப்பீடு. இந்த பங்குகள் மீது இருந்த நம்பிக்கையை அவை இழந்து நிற்பதன் மூலகாரணம், நிறுவன தலைமை சந்தையின் எதிர்பார்ப்புகளை ஏற்றி, பின் அவற்றை நிறைவு செய்யத் தவறியதே ஆகும். வரும் ஆண்டில், இந்த நிலை மாறுமா என்று சந்தை கூர்ந்து கவனிக்கும். பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்ற வண்ணம் உள்ளனர். ஆனால், உள்நாட்டு முதலீட்டாளர்களின் அபரிமிதமான நம்பிக்கை நகர்வுகளை உதறித்தள்ளும் வண்ணம் அமைந்தன. இந்த வாரத்தில், தொடர்ந்து வெளிவரும் ஆண்டு லாபக் கணக்குகளும், பன்னாட்டு முதலீட்டாளர்களின் தொடர்முடிவுகளும் சந்தையின் போக்கை முடிவு செய்யும்.
பொதுவாக, பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்றால், இந்திய முதலீட்டாளர்களும் தயக்கம் காட்டுவர். அந்த தயக்கம் தற்போது இல்லை. ஆனால், தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|