பதிவு செய்த நாள்
24 ஏப்2017
04:28
புதுடில்லி : மொபைல் போனில், ‘இ – வாலட்’ மூலம், மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிப்பது குறித்து, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான, ‘செபி’ பரிசீலித்து வருகிறது. இது குறித்து, இந்த வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது.
சிறிய முதலீட்டாளர்கள், குறிப்பாக இளைய சமுதாயத்தினர், அதிக அளவில் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்ய, மொபைல் போன் வாயிலான, ‘இ – வாலட்’ வசதி உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, மியூச்சுவல் பண்டுகளில் வலைதளம் மூலம் முதலீடு செய்யும் வசதி இருந்தாலும், பணம் கைமாறுவதில் சில சமயம், சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இ – வாலட் எனப்படும் மின்னணு பணப்பை வசதி, மொபைல் போன் மூலம், திரைப்படம் டிக்கெட், ரயில் டிக்கெட் போன்ற பல்வேறு சேவைகளை பெற உதவுகிறது. இவற்றுடன், மியூச்சுவல் பண்டு திட்டங்களையும் சேர்த்தால், அவற்றுக்கு முதலீட்டாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என, செபி கருதுகிறது. அதனால், இ – வாலட் மூலம், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய அனுமதிப்பது குறித்து, செபி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இது குறித்து, செபி அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதலீட்டாளர் நலன் கருதி, பல்வேறு கட்டுப்பாடுகளுடன், இ – வாலட் மூலம் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும் வசதி, விரைவில் அறிமுகமாகும் என, தெரிகிறது. ரொக்கம், டெபிட் கார்டு, ‘நெட் பேங்கிங்’ போன்றவற்றின் மூலமாக, மின்னணு பணப்பைக்கு, தொகையை மாற்றி, அதன் மூலம் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். ஆனால், கிரெடிட் கார்டு மூலம், மின்னணு பணப்பையில் பணத்தை போட்டு, அதன் மூலம் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. அதுபோல, ‘கேஷ் பேக்’ போன்ற ஊக்கச் சலுகை திட்டங்களில் ஈட்டிய பரிசுப் புள்ளிகள் அடிப்படையிலும் முதலீடு செய்ய முடியாது. மின்னணு பணப்பை நிறுவனங்கள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, ‘கேஷ்பேக்’ போன்ற ஊக்கச் சலுகை திட்டங்களை, மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கக் கூடாது.
‘லிக்யுட் பண்டு’களில் செய்யும் முதலீட்டை, எந்த நேரத்திலும், உடனடியாக திரும்பப் பெறும் வசதி ஏற்படுத்தப்படும். ஒரு நிதியாண்டில், ஒருவர் மின்னணு பணப்பை மூலம், 50 ஆயிரம் ரூபாய் வரை மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம். ஒரு முதலீட்டாளர், மின்னணு பணப்பை மூலம், ஒரு நாளைக்கு, ஒரு மியூச்சுவல் பண்டு திட்டத்தில், 50 ஆயிரம் ரூபாய் அல்லது முதலீட்டில், 90 சதவீதம் வரை வரை, பணத்தை திரும்பப் பெற அனுமதிக்கப்படும். மின்னணு பணப்பை சேவையை வழங்குவதற்கு, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், அவற்றின் இயக்குனர் குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மொபைல் போனில் மின்னணு பணப்பை மூலம் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும் திட்டம், சிறிய அளவில் சேமிக்க விரும்புவோரிடம் பெரும் வரவேற்பை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், 41 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், 5 கோடிக்கும் அதிகமான கணக்குகளின் கீழ், 18.30 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை நிர்வகித்து வருகின்றன.
மியூச்சுவல் பண்டு திட்டங்களில் திரட்டப்படும் நிதி, நிறுவன பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் இதர நிதி இனங்களில் முதலீடு செய்யப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|