பதிவு செய்த நாள்
28 ஏப்2017
01:26
லண்டன் : பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்கள், தொடர்ந்து முதலீடுகளை மேற்கொண்டு, சிறப்பான வருவாய் ஈட்டி வருவது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இந்திய தொழிலக கூட்டமைப்பும், கிரான்ட் தார்ன்டன் நிறுவனமும் இணைந்து, பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை: பிரிட்டனில், இந்தியாவைச் சேர்ந்த, 800 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், 1.10 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். 2016ல், பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்கத் திட்டங்களுக்காக, 425 கோடி பவுண்டு முதலீடு செய்துள்ளன; 4,750 கோடி பவுண்டு வருவாய் ஈட்டியுள்ளன.
வரி விதிப்பு குறைவாக உள்ளதாலும், எளிய நடைமுறைகள் மூலம், சுலபமாக தொழில் துவங்க முடிவதாலும், இந்திய தொழிலதிபர்கள், பிரிட்டனில் ஆர்வமுடன் முதலீடு செய்கின்றனர். இந்த வகையில், பிரிட்டன் பொருளாதார வளர்ச்சிக்கு, இந்திய நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்திய நிறுவனங்களில், தகவல் தொழில்நுட்பம், தொலை தொடர்பு துறை சார்ந்தவை, முன்னணியில் உள்ளன. இருந்த போதிலும், மருந்து, வர்த்தக சேவைகள், நிதிச் சேவைகள், பொறியியல் மற்றும் எரிசக்தி துறைகளிலும், இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.
மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் இந்திய நிறுவனங்களில், இந்தாண்டு பிப்., நிலவரப்படி, 50 நிறுவனங்கள், குறைந்தபட்சம், 50 லட்சம் பவுண்டு வருவாய் ஈட்டி, 10 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளன. இந்நிறுவனங்கள், ஆண்டுக்கு சராசரியாக, 31 சதவீதம் வளர்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. விரைவான வளர்ச்சியில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அயல் பணி சேவைகளில் ஈடுபட்டுள்ள டாடாமேட்டிகா இன்போடெக் நிறுவனம், 103 சதவீத வருவாய் வளர்ச்சியுடன், முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில், மின் உற்பத்தித் துறையைச் சேர்ந்த, கே.எஸ்.கே.பவர் வென்டர் நிறுவனம் உள்ளது. பார்தி ஏர்டெல் குழுமத்தின், பிரிட்டன் நிறுவனம், பயோ ஏஜன்சி நிறுவனம் ஆகியவையும் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றன.
பாதிப்பு இருக்காது:
பிரிட்டனில், இந்திய நிறுவனங்கள் வலுவாக காலுான்றி வருகின்றன. வரும் ஆண்டுகளில், உலகளவில் மிக சக்தி வாய்ந்ததாக, இந்திய பொருளாதாரம் உருவெடுக்கும். அப்போது, பிரிட்டனில், இந்தியாவின் முதலீடு மேலும் அதிகரிக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய பின், பிரிட்டன் எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எந்த வகையிலும், பிரிட்டன் அரசு, அங்குள்ள இந்திய நிறுவனங்களை பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது.அனுஜ் சந்தே, தெற்காசிய பிரிவு தலைவர், கிரான்ட் தார்ன்டன் நிறுவனம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|