பதிவு செய்த நாள்
28 ஏப்2017
23:56
புதுடில்லி : ‘ரியல் எஸ்டேட் துறை, மந்தகதியில் இருந்து மீண்டு வரும் அறிகுறிகள் தோன்றி உள்ளதால், இந்தாண்டு, இத்துறையில், 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு குவியும்’ என, சி.பி.ஆர்.இ., நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களால், இந்தியா மீது முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், ‘ஜி 20’ நாடுகளில், தொடர்ந்து வேகமான பொருளாதார வளர்ச்சியை கண்டு வரும் நாடு என்ற சிறப்பை, இந்தியா தக்கவைத்துக் கொள்ளும். கடந்த ஆண்டு, இந்திய ரியல் எஸ்டேட் துறையில், வரலாற்று சிறப்புமிக்க கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன. வெளிப்படையான செயல்பாடுகளுக்கு வழி செய்யப்பட்டு உள்ளது. இது, குறிப்பாக, குடியிருப்பு சந்தையில் நம்பகத்தன்மையை அதிகரித்து, முதலீடுகளை ஈர்க்க வழிவகுத்து உள்ளது. இதன் காரணமாக, இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், 30 ஆயிரம் குடியிருப்பு திட்டங்கள் அறிமுகமாகி உள்ளன. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 18 ஆயிரமாக இருந்தது.
குறிப்பாக, சென்னை, ஐதராபாத், கோல்கட்டா, பெங்களூரு ஆகிய நகரங்களில், குடியிருப்பு திட்டங்கள் அதிகரித்துள்ளன. இதே காலத்தில், வீடுகள் விற்பனை, 70 சதவீதம் உயர்ந்து, 14 ஆயிரத்தில் இருந்து, 23 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதில், சென்னை, புனே, பெங்களூரு, ஐதராபாத் நகரங்கள் முன்னிலை வகிக்கின்றன. வீடுகள் விற்பனையில், குறைந்த விலையில் உள்ள, நடுத்தர வருவாயினருக்கான பிரிவு, சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதனால், இந்தாண்டு இத்துறையில், 700 கோடி டாலர், அதாவது, 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, முதலீடு குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|