பதிவு செய்த நாள்
01 மே2017
04:18
இந்திய பங்குச் சந்தை, எக்காலத்திலும் இல்லாத உயர் அளவை, கடந்த வாரம் தொட்டு, சாதனை படைத்தது. இந்த சாதனைக்கு முக்கிய காரணம், உள்நாட்டு முதலீட்டாளர்களே ஆவர். எப்.ஐ.ஐ.,கள் கடந்த வாரமும் தொடர்ந்து இந்திய பங்குகளை, 1,926 கோடி ரூபாய்க்கு விற்றனர்.
அவர்களின் விற்பனையையும் விஞ்சும் அளவில், உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்கு முதலீடு, 4,911 கோடி ரூபாயாக அமைந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து, மூன்று வாரங்களாக, இந்திய பங்குகளை விற்றும், சந்தை தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குகள் மீதுள்ள அபரிமிதமான உள்நாட்டு நம்பிக்கை, சந்தைக்கு பக்கபலமாக தொடருமா என்பதற்கு, வரும் வாரங்கள் விடை தரும். ஆனால், இந்த நம்பிக்கைக்கான அடிப்படை காரணம், பிற சொத்து முதலீடுகள் வலுவிழந்ததே ஆகும். வங்கி வைப்பு கணக்குகள், தங்கம், நிலம் மற்றும் வீடுகளில் செய்யும் முதலீடுகள், இனி தேவையான லாபம் ஈட்டாது என்ற அளவீடே, இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம்.
ஒரு சொத்து வகையில் இருந்து, இன்னொரு சொத்து வகைக்கு மாறும் போது, அந்த மாற்றம் தங்களுக்கு உகந்தது தானா என, ஆய்வு செய்த பின்னரே, பண ஒதுக்கீடுகள் செய்ய, முதலீட்டாளர்கள் முனைய வேண்டும். ஆனால், பெருவாரியான முதலீட்டு முடிவுகள், இந்த ஆய்வின்றியே எடுக்கப்படுகின்றன. அப்படி எடுக்கப்பட்ட முடிவுகள், சந்தை ஒருவேளை தற்காலிக சரிவை சந்தித்தால், அவை நிலையானவையாக தொடர்வதில்லை என்பதே, நம் சமீபகால வரலாறு. இந்த ஆண்டின், முக்கிய முதலீட்டு தேவையே முதிர்ச்சியும், பொறுமையும் தான். பன்னாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குகளை தொடர்ந்து விற்றாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பொறுமை காத்து, மேலும், அதிகமான முதலீடுகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
சந்தை வீழ்ந்தாலும், பொறுமையும், நம்பிக்கையும் சிறிதும் குறையாமல், நம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும். பருவமழை துவங்க, இன்னும் ஒரு மாதம் இருக்கும் நேரத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்களின் இந்த புதிய வேகமும், நம்பிக்கையும் எப்படி பயணிக்கின்றன என்பதை, நாம் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டியது மிக அவசியம். அதே நேரத்தில், சொந்த நம்பிக்கையை வளர்த்து, பொறுமை குணத்தை தொடர்ந்து கடைபிடிப்பது, ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் அதைவிடவும் மிகவும் அவசியம்.
நிறுவனங்கள் தொடர்ந்து கடந்த ஆண்டுக்கான லாபக்கணக்குகளை அறிவித்த வண்ணம் உள்ளன. முதலில் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களின் முடிவுகளில் விற்பனை உயர்ந்த அளவிற்கு, லாபம் உயரவில்லை என்பதே முக்கிய அம்சம். பொதுவாக, முடிவுகளை முதலில் அறிவிக்கும் நிறுவனங்கள் சிறப்பான லாப வளர்ச்சி காட்டும். இந்த ஆண்டு முதலில் வந்த அறிவிப்புகளில் நிலவும் மந்த வளர்ச்சி கவலை அளிக்கிறது. இனி வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் நிறுவனங்களின் ஆண்டு முடிவுகள், சிறந்த லாப வளர்ச்சி காட்ட வேண்டும். அப்படி இன்றி, அந்த முடிவுகள் ஏமாற்றம் தரும் வகையில் அமைந்தால், அவை சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இன்னும் பெருவாரியான நிறுவனங்கள் ஆண்டு முடிவுகளை அறிவிக்க வேண்டிய சூழலில், அந்த முடிவுகளை சீரான ஆய்வுக்கு உட்படுத்தி, அதன்பின் முதலீட்டு முடிவுகளை எடுப்பது நல்லது. முடிவுகளை இறுதியாக அறிவிக்கும் நிறுவனங்களின் முடிவுகள், பொதுவாக மோசமாக அமையும். ஆகவே, முடிவுகளை எதிர்பார்த்து முதலீடு செய்வதை விட, அவற்றை ஆய்வு செய்தபின் முதலீடு குறித்து முடிவெடுப்பது நல்லது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|