பதிவு செய்த நாள்
20 மே2017
07:20
சண்டிகர்:‘சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து பிரிவுகளின் வளர்ச்சியை உள்ளடக்கிய தொழில் கொள்கையை உருவாக்க வேண்டும்’ என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான, ‘அசோசெம்’ தெரிவித்து உள்ளது.
இந்த கூட்டமைப்பு, ‘டாரி’ என்ற அமைப்புடன் இணைந்து, பஞ்சாப் தொழில் வளர்ச்சிக்காக வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கை:விவசாயம், ஜவுளி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, மிகவும் இன்றியமையாதவை என்பதால், அவற்றை உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த தொழில் கொள்கையை உருவாக்க வேண்டும்.
விவசாயம்:நெல் பயிரிடும் பரப்பை குறைத்து, தற்போது, 3.4 சதவீதமாக உள்ள, அதிக மதிப்புமிக்க பருத்தி, பழங்கள், காய்கறிகள், மஞ்சள் உள்ளிட்டவற்றின் பயிர் பரப்பை அதிகரிக்க வேண்டும். குறைந்த நீர் தேவைப்படும் பருப்பு, எண்ணெய் வித்து, பருத்தி, சோளம், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும்.
தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி, சந்தை சார்ந்த செயல் திட்டம் மூலம், அவர்களின் விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்க ஆவன செய்தால், விவசாயிகள் பயன் பெறுவர். மின் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.ஆயத் தீர்வை, பசு வரி போன்றவற்றை நீக்கி, குறைந்த விலையில் புதிய தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும்.இச்சலுகை, தற்போதுள்ள தொழிற்சாலைகளுக்கும் கிடைக்க வேண்டும். அமிர்தசரஸ், ஜலந்தர், லுாதியானா நகரங்களில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை உருவாக்கும் திட்டத்தை, விரைவுபடுத்த வேண்டும்.
பதிந்தா சுத்திகரிப்பு பகுதியைச் சுற்றி, பெட்ரோகெமிக்கல் தொழில் மையத்தை ஏற்படுத்தி, மொகாலிக்கு வெளியே, உயிரி தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கான வளர்ப்பகங்களை அமைப்பது, மாநில வளர்ச்சிக்கு துணை நிற்கும்.சேவை துறை:அனைத்து நிர்வாக ரீதியிலான அனுமதிகளை, தகவல் தொழில்நுட்ப வசதி மூலம், ஒற்றை சாளர முறையில், விரைந்து பெறும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். சேவை துறையில், வங்கி மற்றும் நிதிச் சேவை பிரிவுகளின் வளர்ச்சிக்கு நிகராக, 23.5 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள, வர்த்தகம், ஓட்டல் உள்ளிட்ட பிரிவுகளில், வளர்ச்சி குறைந்துள்ளது.
ஏராளமான வர்த்தக வாய்ப்புகளை கொண்டுள்ள சுற்றுலா துறை, தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில், புற்றுநோய், போதை பழக்கம் ஆகியவை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளன. விண்ணை முட்டும் அளவிற்கு, மருத்துவச் செலவு உயர்ந்துள்ளது.
இப்பிரச்னைகளை எல்லாம் தீர்க்க, தெளிவான ஆரோக்கிய பராமரிப்பு கொள்கை, அரசிடம் இல்லை. இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில், ஒருங்கிணைந்த தொழில் கொள்கையை, அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|