பதிவு செய்த நாள்
24 மே2017
03:35
புதுடில்லி : ‘தொலை தொடர்பு சேவை உரிமத்திற்கான முன்கூட்டிய தவணைத் தொகையை, குறைவாக செலுத்தியதன் மூலம், ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்கள், மத்திய அரசுக்கு, 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது’ என, முகேஷ் அம்பானியின், ‘ஆர்ஜியோ’ நிறுவனம், தொலை தொடர்பு அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.
அதன் விபரம்: தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், ஒவ்வொரு காலாண்டிலும், மொத்தம் ஈட்டப்படும் உத்தேச வருவாயை மதிப்பிட்டு, அதன் அடிப்படையில், தொலை தொடர்பு சேவை உரிமத்திற்கான தவணையை, முன்கூட்டியே செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் தொகை, முந்தைய காலாண்டை விட, குறைவாக இருக்கக் கூடாது என, தொலை தொடர்பு சட்டம் கூறுகிறது. ஆனால், ஏர்டெல் நிறுவனம், 2016 – 17ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், உரிம கட்டணமாக, 950 கோடி ரூபாய் தான் செலுத்தி உள்ளது. இது, மூன்றாவது காலாண்டில் செலுத்தப்பட்ட, 1,099.50 கோடி ரூபாயை விட, 150 கோடி ரூபாய் குறைவாகும்.
இதே காலத்தில், வோடபோன் நிறுவனம், 746.80 கோடி ரூபாயில் இருந்து, 200 கோடி ரூபாய் குறைத்து, 550 கோடி ரூபாய் என்ற அளவிற்கே உரிம கட்டணம் செலுத்தி உள்ளது. ஐடியா செல்லுலார் நிறுவனமும், மூன்றாவது காலாண்டில் செலுத்திய தொகையை விட, 60 கோடி ரூபாய் குறைத்து, 609.40 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தி உள்ளது. ஆக, இந்த மூன்று நிறுவனங்களும், ஒருதலைபட்சமாக, வேண்டுமென்றே திட்டமிட்டு, முன்கூட்டி செலுத்த வேண்டிய உரிம கட்டணத்தை குறைவாக செலுத்தி உள்ளன. இதன் மூலம், இந்நிறுவனங்கள், மத்திய அரசுக்கு, 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு உள்ளது.
ஆர்ஜியோ நிறுவனம், விதிமுறைப்படி, உரிய உரிம கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி உள்ளது. ஆகவே, தொலை தொடர்பு சேவை உரிம கட்டண விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், தாமதம் காட்டுவது, தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மறுப்பு:ஆர்ஜியோ குசும்புத்தனமாக, அடிப்படையற்ற குற்றச் சாட்டை சுமத்தியுள்ளது. தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், தற்போது நெருக்கடியில் உள்ளன. அவற்றின் நிதி நிலவரம் காரணமாக, மூன்றாம் காலாண்டை விட, நான்காம் காலாண்டு வருவாயை அதிகம் மதிப்பிடாமல், உள்ளபடியே மதிப்பிட்டு, அதன் அடிப்படையில், உரிம கட்டணத்தை செலுத்த அனுமதி கோரி, தொலை தொடர்பு துறையிடம் விண்ணப்பித்தோம்; அதற்கான ஆதாரங்களையும் அளித்துள்ளோம். அந்த கோரிக்கையில், நடப்பு காலாண்டிற்கான உரிம கட்டணத்தை, ஏப்., 15க்குள் செலுத்தி விடுவதாகவும், உறுதி அளித்திருந்தோம். அசல் வருவாய் அடிப்படையில், உரிம கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளது. இதில், மத்திய அரசுக்கு எந்தவித இழப்பும் இல்லை.-ராஜன் எஸ்.மேத்யூஸ், தலைமை இயக்குனர், இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|