பதிவு செய்த நாள்
17 ஜூன்2017
15:43
புதுடில்லி : ஜூலை 1 ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி.,யில் புதிதாக வீடு வாங்குவோருக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மாதாந்திர தவணை முறையில் வீடு வாங்குவோர் அதற்கு சேவை கட்டணமாக 4.5 சதவீதம் செலுத்தி வருகிறார்கள். இந்த வரி ஜி.எஸ்.டி.யில் 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாதாந்திர தவணை தொகை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது வீடு வாங்குவோரை கடுமையாக பாதிக்கும். இந்த வரி விதிப்பு முறை பற்றி ஆடிட்டர் சுந்தரராஜன் கூறியதாவது:
நம்நாட்டில் தவணை முறையில்தான் அதிகம் பேர் வீடு வாங்குகிறார்கள். இதற்காக பில்டரிடம் முன் பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்தி விட்டு மீதி தொகையை மாதாந்திர தவணை முறையில் வங்கியில் செலுத்துகிறார்கள். இதற்கு தற்போது 4.5 சதவீதம் சேவை வரி மட்டும் வசூலிக்கப்படுகிறது. இது 12 சதவீதமாக ஜி.எஸ்.டி.யில் உயர்த்தபட்டு உள்ளது. அதாவது ஒரு புது வீட்டின் மொத்த விலைக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 12 சதவீதம் வரி விதிக்கப்படும். அந்த வரியுடன் சேர்த்து தான் மாத தவணை தொகையை செலுத்த வேண்டும்.
இதனால் தற்போது செலுத்தப்பட்டு வரும் மாதாந்திர தவணை தொகை இனி அதிகரிக்கும். ஏற்கனவே வீடு வாங்கி தவணை செலுத்தி வருபவர்களும் ஜூலை 1-ந்தேதி முதல் மீதம் உள்ள தவணை தொகையை கூடுதலாக செலுத்த வேண்டி வரும். இதுதவிர வங்கிகளிலும் கடன் பெறும் போது சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வங்கியில் கடன் பெற்றவர்கள் மீதம் உள்ள தொகையை தவணை முறையில் திருப்பிச் செலுத்தும் போது அதற்கும் வரி விதிக்கப்படுவதால் தவணை தொகை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது புதிதாக வீடு வாங்குவோரையும், தவணை முறையில் திருப்பி செலுத்துவோரையும் கடுமையாக பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|