பதிவு செய்த நாள்
19 ஜூன்2017
00:16
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட பீம் செயலியின் பயன்பாடு தொடர்பான தகவல்களை அளித்து வழிகாட்டுவதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ரொக்க பரிவர்த்தனைக்கு பதிலாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை அரசால் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்கு உதவும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான பீம் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்மார்ட்போன் மூலம் வங்கி கணக்குகளுக்கு இடையே பண பரிவர்த்தனைக்கான யு.பி.ஐ., இணைய மேடையை அடிப்படையாக கொண்டு பீம் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் தனி இணையதளத்தை அமைத்துள்ளது.
பீம் செயலியை பயன்படுத்தும் வழிகளை இந்த இணையதளம் எளிய முறையில் விளக்குகிறது. எளிமையான, விரைவான டிஜிட்டல் பண பரிவர்த்தனை தீர்வான இந்த செயலியை வங்கி கணக்கு விபரங்களை பகிர்ந்து கொள்ளாமலேயே பயன்படுத்தலாம் என்பது உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தொடர்ந்து, பீம் செயலியை யார் பயன்படுத்தலாம்; எப்போது எல்லாம் பயன்படுத்தலாம்; பீம் செயலி மூலம் எப்படி பணம் அனுப்புவது போன்றவற்றை இந்த தளம் எளிதாக விளக்குகிறது. இந்த செயலியை பயன்படுத்துவதன் அனுகூலங்களும் விளக்கப்பட்டுள்ளன.
பீம் செயலியில் பரிவர்த்தனை செய்வது தொடர்பான விளக்க வீடியோவும் இடம்பெற்றுள்ளது. பீம் செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கான விரிவான விளக்கமும் இடம்பெற்றுள்ளது.பீம் செயலி தொடர்பாக பொதுமக்களின் கேள்விகள், சந்தேகங்கள் அனைத்தும் பொதுத்தன்மை கொண்டிருப்பதை அடுத்து அவற்றுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த வழிகாட்டி இணையதளத்தை தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் அமைத்துள்ளது.
பீம் செயலி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பரிசு திட்டங்கள் தொடர்பான தகவல்களையும் இந்த தளத்தின் மூலம் பெறலாம். இந்த தளம் மூலம் பயனாளிகள் பீம் செயலியை பயன்படுத்தும் விதம் குறித்து தாங்களாகவே எளிதாக, கற்றுக்கொள்ளலாம். பீம் செயலி 20 மில்லியனுக்கு மேற்பட்ட பயனாளிகளால் தரவிறக்கம் செய்யப்பட்டு, 832 கோடி ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|