பதிவு செய்த நாள்
19 ஜூன்2017
00:19
நிதி திட்டமிடலில் அவசர நிதியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. ஆறு மாத காலத்திற்கான அடிப்படை செலவுகளுக்கு தேவையான தொகையை அவசர கால நிதியாக சேமித்து வைத்திருக்க வேண்டும். எதிர்பாராமல் ஏற்படும் நெருக்கடியின் போது இந்த நிதி பாதுகாப்பாக அமையும். நிதி திட்டமிடலில் முதல் தேவையாக இது அமைகிறது. சரி, அவசர கால நிதியை சேமித்த பின் என்ன செய்ய வேண்டும்…
ஓய்வூதிய பாதுகாப்பு:
அவசர கால நிதியை வெற்றிகரமாக உருவாக்கியதற்காக, முதலில் உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள். இனி மற்ற நிதி தேவைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சேமிப்பின் ஒரு பகுதியை ஓய்வூதிய நிதியில் செலுத்துங்கள். ஏற்கனவே ஓய்வூதிய திட்டத்தில் இணைந்திருந்தால் அதற்கான பங்களிப்பை அதிகமாக்கவும். இல்லை எனில், பொருத்தமான ஓய்வூதிய திட்டம் ஒன்றில் இணையவும்.
இல்லம் சங்கீதம்!
சொந்த வீடு வாங்கும் திட்டம் இருந்தால், அதற்கான திட்டமிடலை துவங்கி, சேமிக்கத் துவங்குங்கள். வீட்டுக்கடன் பெறும் போது செலுத்த வேண்டிய முன் பணத்திற்காக சேமிக்கவும். ஏற்கனவே வீட்டுக்கடன் பெற்றிருந்தால், முன் கூட்டியே ஒரு பகுதியை செலுத்தி, கடன் சுமையை குறைப்பதில் கவனம் செலுத்தலாம். சிறுக சேமித்து ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவதன் மூலம் வட்டியை குறைக்கலாம்.
பிள்ளைகள் கல்வி:
உங்கள் பிள்ளைகள் உயர் கல்விக்கான திட்டமிடலை ஆரம்பத்திலேயே துவக்குவது நல்லது. உங்களால் முடிந்த தொகையை, உயர் கல்வி நிதியாக சேமிக்கவும். இதற்கேற்ற முதலீட்டு வாய்ப்புகளையும் நாடலாம். உயர் கல்விக்கு தேவைப்படக்கூடிய தொகையை, துல்லியமாக கணக்கிட முடியாது என்றாலும், பணவீக்கத்தின் பாதிப்பை மனதில் கொண்டு சேமிப்பது நல்லது.
உங்கள் இலக்கு:
சேமிப்பு முக்கியம் என்றாலும், உங்களுக்கான உற்சாகமும் அவசியம். உள்ளம் விரும்பியபடி செயல்பட வேண்டும் என, உங்களிடம் சில விருப்பங்கள் இருக்கலாம். வெளிநாட்டு விடுமுறை சுற்றுலா செல்வது, கார் வாங்குவது போன்ற விருப்பங்கள் இருக்கலாம். இதற்கென குறுகிய கால இலக்கு நிர்ணயித்துக் கொண்டு சேமிக்கத் துவங்குங்கள். விருப்பங்களுக்கு ஏற்ப நீண்ட கால இலக்கிற்காகவும் சேமிக்கலாம்.
முதலீடு செய்யுங்கள்!
இனி சேமிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. சேமிக்கும் பணத்தை முறையாக முதலீடு செய்ய வேண்டும். முதலீடு செய்வதன் மூலமே உங்களுக்கான செல்வத்தை சேர்க்க முடியும். அதோடு வேலையில் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வுக்கு ஏற்ப சேமிப்பை அதிகமாக்கி முதலீட்டையும் அதிகமாக்க வேண்டும். செழிப்பான காலத்தில் அதிகம் முதலீடு செய்வது முக்கியம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|