பதிவு செய்த நாள்
24 ஜூன்2017
00:22
மும்பை : நொறுக்குத் தீனிக்கு விதிக்கப்பட்டிருக்கும், சரக்கு மற்றும் சேவை வரியை, 5 சதவீதமாக குறைக்குமாறு, அதன் உற்பத்தியாளர்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு, ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை, நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளது. அதில், நொறுக்குத் தீனிகளுக்கு, 12 சதவீத வரி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதை குறைக்குமாறு உற்பத்தியாளர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, நொறுக்குத் தீனி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் அஜித் மோட்டா கூறியதாவது: இந்தியாவில், நொறுக்குத் தீனி உற்பத்தியில், 95 சதவீத அளவுக்கு, அமைப்புசாரா நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதில், பல குடிசை, சிறு தொழில்களை சேர்ந்தவை. மத்திய அரசு அமல்படுத்த உள்ள, ஜி.எஸ்.டி.,யில், நொறுக்குத் தீனி தயாரிப்புக்கு பயன்படுத்தும் உருளை கிழங்கு, வாழைப்பழம், மைதாவுக்கு வரி விதிக்கவில்லை. ஆனால், மசாலா பொருட்களுக்கு வரி உள்ளது. ஒட்டுமொத்தமாக, ஜி.எஸ்.டி.,யில், நம்கீன், மிக்சர், உருளை சிப்ஸ், வாழைப்பழ சிப்ஸ் உள்ளிட்ட, நொறுக்குத் தீனி வகைகளுக்கு, 12 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அவற்றின் விலையை உயர்த்த வேண்டி வரும். எனவே, வரியை, 5 சதவீதமாக குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|