பதிவு செய்த நாள்
24 ஜூன்2017
00:24
புதுடில்லி : ‘‘புதிய, ஜி.எஸ்.டி., முறைக்கு மாறும் போது, துவக்க காலத்தில், கணக்கு விபரங்களை தாக்கல் செய்வதில் நேரும் தவறுகளுக்கு, கருணை அடிப்படையில், சட்ட நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்,’’ என, மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: வணிகர்கள், சங்கடங்களை சந்திக்காமல், சுலபமாக புதிய வரி விதிப்புக்கு மாற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அது போல, ஜி.எஸ்.டி.,யில், எந்தவொரு வர்த்தகரும், அநாவசிய துன்புறுத்தலுக்கு ஆளாகக் கூடாது என்பதிலும், அரசு மிகக் கவனமாக உள்ளது. அதனால், துவக்க காலத்தில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலின் போது ஏற்படும் நியாயமான தவறுகள், மிகுந்த கருணையோடு பரிசீலிக்கப்படும்.
பொருந்தாத கணக்கு விபரங்கள் உள்ளிட்ட தவறுகளுக்கு, அபராதம் விதிப்பதற்கான சட்ட விதிகளை, குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்தி வைக்கும் அதிகாரம், ஜி.எஸ்.டி., குழுவிற்கு உள்ளது. ஜி.எஸ்.டி., ஒரு சிக்கலான நடைமுறை என்ற கருத்து நிலவுகிறது; அது தவறு. இந்த வரி விதிப்பில், பெரும்பாலான வர்த்தகர்கள், மாதம் ஒரு கணக்கு விபரத்தை மட்டும் தாக்கல் செய்யும் பிரிவின் கீழ் வருகின்றனர். எந்தவொரு புதிய தொழிற்நுட்பமும், அறிமுக நிலையில் ஒருசில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதன்படி, எதிர்கொண்ட சில சிக்கல்களுக்கு, ஜி.எஸ்.டி., அறிமுகத்திற்கு முன்பாகவே தீர்வு காணப்பட்டுவிட்டது.
மூன்றாவது முறையாக, நாளை மீண்டும், ஜி.எஸ்.டி., பதிவு துவங்குகிறது. இதில், எஞ்சியுள்ள அனைத்து நிறுவனங்களும் பதிவு செய்ய, 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி.,யில், வரி ஆதாயத்தை நுகர்வோருக்கு வழங்காமல் ஏமாற்றும் நிறுவனங்கள் மீது, அதிக லாப தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இது, நுகர்வோருக்கு பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகளுக்கு பொருந்தாது. உள்ளீட்டு வரி ஆதாயத்தை, நுகர்வோருக்கு அளிக்காத தயாரிப்பு நிறுவனங்கள் மீது மட்டுமே, சட்ட நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் கூறினார்.
சுலபமான வரி நடைமுறை:
தற்போதைய வரி விதிப்பின் கீழ், 80 லட்சம் வணிகர்கள் உள்ளனர். இதில், 65 லட்சம் பேர், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ளனர். அவற்றில், 70 – 80 சதவீதம் பேர், நுகர்வோருக்கு நேரடியாக பொருட்களை விற்பனை செய்யும் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள், மாதம் ஒரு முறை, மொத்த விற்றுமுதல் கணக்கை மட்டும் தாக்கல் செய்தால் போதும். ஒரு நிறுவனத்திற்கும், மற்றொரு நிறுவனத்திற்கும் இடையிலான வர்த்தகத்தில் மட்டும், விலைப் பட்டியல்கள் அடிப்படையில் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். இப்பிரிவினருக்கு கூட, அனைத்து விலைப் பட்டியல்களையும் தன்னிச்சையாக மாற்றித் தரும் சாப்ட்வேர்களை, ஜி.எஸ்.டி.என்., வழங்கி உள்ளது. அதனால், புதிய வரி விதிப்பு முறையில், கணக்குகளை சிரமமின்றி சுலபமாக தாக்கல் செய்யலாம்.
-ஹஷ்முக் ஆதியா, மத்திய வருவாய் துறை செயலர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|