பதிவு செய்த நாள்
18 ஜூலை2017
01:12
புதுடில்லி : ‘‘நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள், ஜூலை, 24 முதல், ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில், தங்கள் வர்த்தக பரிவர்த்தனை கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய துவங்கலாம்,’’ என, ஜி.எஸ்.டி.என்., நிறுவனத்தின் தலைவர் நவின் குமார் தெரிவித்து உள்ளார்.
பல முனை வரிகளுக்கு மாற்றாக, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, கடந்த, 1ல், அமலுக்கு வந்தது.ஜி.எஸ்.டி., பதிவு, கணக்கு தாக்கல் உள்ளிட்டவற்றுக்கான தகவல் தொழிற்நுட்ப வசதிகளை, ஜி.எஸ்.டி.என்., நிறுவனம் அளிக்கிறது.
அரை நிமிடத்தில்:
இதுவரை, முந்தைய வரி விதிப்பின் கீழ் உள்ளோரில், 69 லட்சம் பேர், ஜி.எஸ்.டி.என்., வலைதளம் மூலம், ஜி.எஸ்.டி.,க்கு மாறி உள்ளனர். புதிதாக, ஐந்து லட்சம் பேர், ஜி.எஸ்.டி.,யில் இணைந்து உள்ளனர்.‘‘ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ளோர், வர்த்தகம் தொடர்பான கணக்குகளை தாக்கல் செய்வதற்கான வசதி, ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில் செய்யப்பட்டு உள்ளது,’’ என, நவின் குமார் தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: வணிகர்கள், தங்கள் விற்பனை தொடர்பான கணக்குகளை பராமரிக்க, ஏற்கனவே, ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில், ‘எக்செல்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில், இணைய இணைப்பு இல்லாமலேயே, வியாபாரிகள், தங்களின் அன்றாட விற்பனை விபரங்களை பதிவு செய்து வரலாம். இந்த பதிவுகளை, 24 முதல், ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில் பதிவேற்றலாம். ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் விலைப் பட்டியல்கள் வரை தயாரிக்கும் நிறுவனங்கள், கடைசி நேரத்தில் கணக்கு தாக்கல் செய்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, அன்றாடம் அல்லது வாரம் ஒருமுறை கணக்கு தாக்கல் செய்யலாம்.
ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில், 19 ஆயிரம் விலைப் பட்டியல்களை, அரை நிமிடத்தில் பதிவேற்றும் வசதி செய்யப்பட்டு உள்ளது. விலைப் பட்டியலை பதிவேற்றம் செய்யும் நிறுவனங்கள், வியாபாரிகள் ஆகியோர், விலைப் பட்டியல் எண், தேதி, வாடிக்கையாளர் பெயர், சரக்கு போக்குவரத்து விபரம், சரக்கு பெறுவோர் முகவரி, பொருட்களுக்கான, ‘எச்.எஸ்.என்., கோடு’ உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட வேண்டும்.
மேலும், பொருட்களின் மதிப்பு, அளிக்கப்பட்ட சலுகைகள், ‘சி.ஜி.எஸ்.டி., – எஸ்.ஜி.எஸ்.டி., – ஐ.ஜி.எஸ்.டி.,’ ஆகியவற்றின் கீழ், வசூலித்த வரி ஆகிய விபரங்களை குறிப்பிட வேண்டும். விரைவாக கணக்கு தாக்கல் செய்தால், விரைவாக, உள்ளீட்டு வரிப் பயனை பெறலாம்.
உதவி மையம்:
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் தொடர்பாக, வணிகர்களுக்கு உதவ, ‘கால் சென்டர்’ உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், கணக்கு தாக்கல் செய்வது குறித்த பயிற்சி, ‘வீடியோ’ படம், ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில் உள்ளது. அதை பின்பற்றி, வணிகர்கள் சுலபமாக கணக்குகளை பதிவேற்றம் செய்யலாம். கம்ப்யூட்டரை பயன்படுத்தாத வணிகர்களும், 200 ரூபாய்க்கு மேற்பட்ட விலைப் பட்டியல்களை, தேதி வாரியாக பராமரித்து வந்தால், அவற்றுக்கான உள்ளீட்டு வரிப் பயனை விரைவாக பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|