பதிவு செய்த நாள்
20 ஜூலை2017
00:09
ஐயா, நாங்கள், ‘டிபார்ட்மென்ட்டல்’ ஸ்டோர் நடத்தி வருகிறோம். மாதம், 5 லட்சம் ரூபாய் – 6 லட்சம் ரூபாய் வரை விற்பனை இருக்கும். ஆண்டு முடிவில், எங்களது கணக்குகள், ஜி.எஸ்.டி., சட்டத்திற்காக தணிக்கை செய்யப்பட வேண்டுமா?– பாஸ்கரன், ஆவடிஜி.எஸ்.டி., சட்டத்தில், சுய மதிப்பீட்டின் முறையில் கணக்குகள் கையாளப்படுகின்றன. உங்களுக்கு, ஆண்டின் மொத்த விற்பனை, 1 கோடி ரூபாயை தாண்டினால் மட்டுமே தணிக்கை பொருந்தும். இல்லையெனில், உங்களின் கணக்குகள், ஜி.எஸ்.டி., சட்டத்திற்காக தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை.
நான், கோவையில் கணினி சேவை மையம் வைத்துள்ளேன். எங்களது ஆண்டு விற்பனை, 18 லட்சம் ரூபாய் வரை இருக்கும். என் பெயரில், ஓர் அடுக்குமாடி குடியிருப்பும் உள்ளது. அதன் மூலம், ஆண்டுக்கு, 3 லட்சம் ரூபாய் வாடகையாக வருகிறது. நான், ஜி.எஸ்.டி., சட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டுமா? நான் பெறும் வாடகைக்கு, ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டுமா?– முகமது அலி, கோவைஜி.எஸ்.டி., சட்டத்தில் பதிவு செய்வதற்கு வரம்பான, 20 லட்சம் ரூபாயை கணக்கிடும் போது, உங்களுடைய வரி விதிப்புக்கு உட்பட்ட சப்ளை மற்றும் விலக்கு பெற்ற சப்ளை அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள், ஜி.எஸ்.டி., பதிவை பெற வேண்டும். ஆனால், குடியிருப்பிற்கான வாடகையில், ஜி.எஸ்.டி., வசூலிக்க வேண்டாம். அதற்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
தற்போது, ‘வாட்’ திட்டத்தின் படி, எங்களுடைய ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ‘வாட்’ வரியை ரத்து செய்த காரணத்தால், நிலுவையில் உள்ள எங்கள் வழக்கும் ரத்தாகுமா?– ராமசாமி, விருத்தாசலம்நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும், அந்தந்த சட்டப்படி தொடர்ந்து நடைபெறும். ‘வாட்’ வரி விதிப்பு ரத்து செய்யப்பட்ட காரணத்தால், உங்களது வழக்கில் எந்த பாதிப்பும் இருக்காது.
ஜி.எஸ்.டி., ‘ரிட்டர்ன்’ தாக்கலின் போது, நாம் கொள்முதல் செய்த விபரங்கள், ஜி.எஸ்.டி.ஆர்., 2 படிவத்தில் வரும் என, கூறுகின்றனர். அந்த படிவத்தில் தவறு ஏதேனும் இருந்தால்,அதை திருத்தி கொள்ள முடியுமா? முடியாது என்றால், எங்களுக்கு உள்ளீட்டு வரி பயன் குறைவாக கிடைக்கும் அல்லவா?– மேகநாதன், ஸ்ரீவாஞ்சியம்நீங்கள் கொள்முதல் செய்த விபரங்கள், உங்களுக்கு வழங்கல் செய்த விற்பனையாளரின், ‘ரிட்டர்ன்’ ஜி.எஸ்.டி.ஆர்., 1 பதிவின் படி, உங்களது கணக்கில் வந்து சேரும். அதில் பிழை ஏதேனும் இருந்தால், அதை உங்களால் சரி செய்ய முடியும்.
நாங்கள், துணிக் கடை வைத்துள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் போது, அவர்களின் முகவரியை எங்களது விலைப் பட்டியலில் அவசியம் குறிப்பிட வேண்டுமா?– ஸ்ரீராம், நாமக்கல்அவ்வாறு குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை.
நாங்கள், எங்கள் நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு செலுத்தி வருகிறோம். அதிலுள்ள, ஜி.எஸ்.டி.,யை உள்ளீட்டு வரி பயனாக பெறலாம் என, சிலர் கூறுகின்றனர். பெற முடியாது என்றும் சிலர் கூறுகின்றனர். இதை விளக்கவும்.– புருஷோத்தமன், சென்னைநீங்கள் பணியாளர்களுக்கு எடுக்கும் மருத்துவ காப்பீட்டில் உள்ள, ஜி.எஸ்.டி.,யை உள்ளீட்டு வரி பயனாக பெற இயலாது. இதற்கென, ஜி.எஸ்.டி., சட்டத்தில் தனி விதி உள்ளது.
வெளி மாநிலத்திலிருந்து பதிவு செய்யப்படாத நபரிடம் பொருட்களை வாங்கும் போது, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில், எத்தனை சதவீதம் வரி செலுத்த வேண்டும்?– முருகேசன், துாத்துக்குடிஜி.எஸ்.டி., சட்டப்படி, பதிவு செய்யப்படாத நபர், வெளி மாநில வழங்கல்களில் ஈடுபட முடியாது. எனவே, வெளி மாநிலத்திலிருந்து பதிவு செய்யப்படாத நபரிடம், நீங்கள் கொள்முதல் செய்வதை தவிர்க்க வேண்டும்.
நாங்கள், சென்னையில் மேலாண்மை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறோம். பல நேரங்களில் கார்களை வாடகைக்கு எடுத்து, எங்களது ஊழியர்கள் வேலை நிமித்தமாக வெளியிடங்களுக்கு சென்று வருவர். அதில் செலுத்திய, ஜி.எஸ்.டி.,யை உள்ளீட்டு வரி பயனாக பெற இயலுமா?– இஸ்மாயில், சென்னைமேற்கூறிய பரிவர்த்தனை வேலை நிமித்தமாக இருந்தாலும் கூட, அதில் உள்ள, உள்ளீட்டு வரி பயன் கிடைக்க பெறாது.
நாங்கள், அச்சகம் வைத்து நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள பல இடங்களுக்கு, வாழ்த்து அட்டைகளை அச்சடித்து தருகிறோம். நாங்கள் எத்தனை சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும்?– மோகன், சிவகாசிநீங்கள், உங்கள் சேவையின் தொகையில், 12 சதவீதம் வரி வசூல் செய்து, அரசுக்கு செலுத்த வேண்டும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|