பதிவு செய்த நாள்
21 ஜூலை2017
14:02
மும்பை : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தி உள்ள ரூ.0 விலையிலான, அதாவது இலவச ஸ்மார்ட்போனால், இந்திய பங்குச்சந்தைகளில் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நேற்று தனது காலாண்டு நிகரலாப விபரத்தை வெளியிட்டது. இதில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.9108 கோடி நிகரலாபத்தை ஈட்டி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் நேற்று சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சி பெற்றன. இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பும் 2.03 சதவீதம் உயர்ந்து ரூ.1559.75 ஆக இருந்தது.
இந்நிலையில் காலை 11.15 மணியளவில் நடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில், ரூ.0 விலையிலான ஸ்மார்ட்போனை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த கூட்டம் துவங்கிய போது, பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் 2.2 சதவீதமும், ஐடியா செல்லுலர் நிறுவன பங்குகள் 2 சதவீதமும் சரிவடைந்திருந்தன.
அதே சமயம், ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் பங்குகள் 16 சதவீதமும், டெல்டா கார்ப் பங்குகள் 5.9 சதவீதமும், வெல்கார்ப் பங்குகள் 5.64 சதவீதமும் உயர்ந்திருந்தன. காலை 11.55 மணியளவில் ஜியோபோன் அறிமுகத்திற்கு பிறகு ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 2 சதவீதம் உயர்ந்து, ரூ.1557.50 ஆக இருந்தது.
ஜியோபோன் அறிமுகம் மற்றும் அதன் சிறப்பம்ச வெளியீட்டிற்கு பிறகு பகல் 12.50 மணியளவில் ஐடியா செல்லுலார் பங்குகள் 5 சதவீதத்திற்கு மேலும், ஏர்டெல் பங்குகள் 3 சதவீதத்திற்கு மேலும் சரிந்தது. ஜியோ இலவசங்களால் தங்களின் காலாண்டு வருமானம் பாதிக்கப்படுவதாகவும், ரூ.500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் குற்றம்சாட்டி வந்த நிலையில், ஜியோபோன் அறிமுகம், ஏர்டெல் மட்டுமின்றி மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|