பதிவு செய்த நாள்
28 ஜூலை2017
00:48
புதுடில்லி : ‘‘ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால், சரக்கு போக்குவரத்து துறைக்கு அதிக பயன் கிட்டும்; இத்துறையின் செலவினம், 20 சதவீதம் குறையும்,’’ என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவரது அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜி.எஸ்.டி., அமலுக்கு முன், சரக்கு போக்குவரத்து துறை, பல வகை ஆவணங்களுடன், பல்வேறு வரிகளை செலுத்தி வந்தது. வேறு மாநில எல்லைக்குள்நுழையும் போது, சோதனைச் சாவடியில் விற்பனை வரியை, ‘டிபாசிட்’ செய்ய வேண்டியிருந்தது. இதனால், சரக்கு போக்குவரத்து தாமதமாகி, செலவினம் உயர்ந்தது; சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரித்தது.
அமெரிக்காவில், ஒரு சரக்கு லாரி, ஓராண்டில், 3 லட்சம் கி.மீ., பயணிக்கிறது; இது, இந்தியாவில், 50 ஆயிரத்தில் இருந்து, 60 ஆயிரம் கி.மீ., என்ற அளவிற்கே உள்ளது. இந்த இடர்ப்பாடுகளுக்கு எல்லாம் தீர்வாக, ஜி.எஸ்.டி., என்ற ஒரே வரி விதிப்பு முறை அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும், ஒரே வரி விதிப்பு உள்ளதால், சோதனைச்சாவடிகள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வின்றி, சரக்குகளை விரைவாக கொண்டு செல்ல முடிகிறது. இதனால், நீண்ட துாரம் செல்லும் சரக்கு லாரிகளின் பயண நேரம், ஐந்தில் ஒரு பங்கு குறைந்து, சரக்கு போக்குவரத்து செலவினம் குறைய வழிவகுத்துள்ளது.
நாடு முழுவதும், பல்வேறு இடங்களில் சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை, வெளிமாநில சரக்கை கொள்முதல் செய்து, வினியோகிக்க உதவுகின்றன. இந்த மையங்கள் இடையே, மிகப்பெரிய டிரக்குகள், ரயில்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து மூலம், சரக்கு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும். இதனால், மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் வரிகள் காரணமாக, ஒவ்வொரு மாநிலத்திலும் கிடங்கு அமைத்து, நிர்வகித்து வந்த நிறுவனங்களுக்கு, அவ்வகை செலவுகள் மிச்சமாகும்.
சரக்கு பூங்காக்கள் மூலம், ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும்; சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும். இது போன்ற சரக்கு பூங்காக்கள் அமைப்பது உட்பட, சரக்கு போக்குவரத்து துறையில், 2 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய, பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. பழைய வரி விதிப்பில், பெரும்பான்மை சரக்குகளுக்கு, 26.5 சதவீத வரி வரம்பு இருந்த நிலையில், அது, ஜி.எஸ்.டி.,யில், 18 சதவீதமாக குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.அதனால், சரக்கு மதிப்பின் அடிப்படையிலான, போக்குவரத்து செலவும் குறையும்.
பிற முன்னணி நாடுகளில், சரக்கு மதிப்பின் அடிப்படையிலான போக்குவரத்து செலவினம், 6 – 8 சதவீதமாக உள்ளது; இது, இந்தியாவில், 14 சதவீதமாக உள்ளது. தற்போது, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின், நாடு முழுவதும் தடையின்றி சரக்குகள் விரைவாக கொண்டு செல்லப்படுவதால், அவற்றுக்கான போக்குவரத்து செலவினம், 10 – 12 சதவீதமாக குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|