பதிவு செய்த நாள்
23 ஆக2017
23:53
மும்பை : டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாக, அதன் பங்கு முதலீட்டாளர்கள் பகிரங்கமாக தெரிவித்து உள்ளனர்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், 72வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், மும்பையில் நடைபெற்றது. இதில், பங்கு முதலீட்டாளர்கள், நிறுவனம் மீது பல்வேறு புகார்களை தெரிவித்தனர். பயணியர் கார் பிரிவின் வருவாய் குறைந்தது; புதிய கார்களின் அறிமுகத்தில் ஏற்பட்டுள்ள தொய்வு; இழப்பில் உள்ள, ‘நானோ’ கார் தயாரிப்பை இன்னும் தொடர்வது; ‘டிவிடெண்டு’ வழங்காதது உட்பட, பல கேள்விகளை சரமாரியாக எழுப்பினர்.
அவற்றுக்கு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர், என்.சந்திரசேகரன் அளித்த பதில்: டாடா மோட்டார்ஸ் வருவாயில், பயணியர் கார் பிரிவு, 3 – 4 சதவீதம், அதாவது, 9,000 கோடி ரூபாய் அளவிற்கே உள்ளது. இப்பிரிவில், விற்பனை மற்றும் வருவாயை உயர்த்த வேண்டியது அவசியம். சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய கார்களின் விற்பனை நன்றாக உள்ளது. எனினும், புதிய கார்களை குறித்த காலத்தில் அறிமுகப்படுத்தினால், கூடுதல் செலவுகளை தவிர்க்கலாம்; அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கார் தயாரிப்பிலும், அதை கைவிடுவதிலும், பலதரப்பட்ட அம்சங்களை கவனத்தில் வைத்து தான் முடிவெடுக்க வேண்டும். அவ்வப்போது, முடிவை மாற்றுவதும் சரியாக இருக்காது. இழப்பில் உள்ள துணை நிறுவனங்கள் குறித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும். நடப்பு நிதியாண்டில், வாகன உற்பத்தி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக, 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. முதலீட்டிற்கு ஏற்ற வருவாய் கிடைக்குமா என்பதை, பல வகையில் ஆய்வு செய்த பின்னே, முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. அதனால், ‘டிவிடெண்டு’ அளிக்கும் நிறுவனமாக, டாடா மோட்டார்ஸ் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. டாடா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி, குன்டெர் பட்சக் உடன், எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அது, வெறும் வதந்தி.
நிறுவனத்தின் மணி மகுடமாக, பிரிட்டனில் செயல்படும் ஜாகுவார் லேண்டுரோவர் பிரிவு உள்ளது. கடந்த ஆண்டு, இதன் விற்பனை, 6 லட்சத்தை தாண்டியது. எனினும், மெர்சிடஸ் மற்றும் பி.எம்.டபிள்யு., நிறுவனங்கள் கடும் போட்டியாக உள்ளன. இதை சமாளித்து, விற்பனை வளர்ச்சியை இரட்டை இலக்கத்திற்கு கொண்டு செல்ல, மூலதனம், நவீன கண்டுபிடிப்புகள், புதிய அறிமுகங்கள் தேவை. இதையொட்டி, ஜாகுவார் லேண்டுரோவரில், கடந்த ஆண்டு, அதிக முதலீடு செய்யப்பட்டது. இந்த முதலீட்டிற்கான டிவிடெண்டு, 15 கோடி பவுண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதனால், இப்பிரிவில் செய்து வரும் முதலீட்டில், வருவாய் கிடைக்கவில்லை என்ற புகாரில் உண்மையில்லை. அது போல, ஜே.எல்.ஆர்., தலைவர், ரால்ப் ஸ்பெத்துக்கு அதிக ஊதியம் வழங்குவதாக கூறப்படுவதும் தவறு. பிற நிறுவனங்களின் தலைவர்களுடன் ஒப்பிடும் போது, அது குறைவு. அவருக்கு, 70 லட்சம் பவுண்டுகள் தான் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|