பதிவு செய்த நாள்
13 செப்2017
23:46
மும்பை: ரிசர்வ் வங்கி, தற்போதைய காகித கரன்சிகளுடன், வலைதளத்தில், மின்னணு பரிவர்த்தனைகளுக்கு மட்டும் பயன்படும், ‘டிஜிட்டல் கரன்சி’யை வெளியிடுவது குறித்தும், பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது, காகித கரன்சிகளை, ரிசர்வ் வங்கி அச்சிட்டு, வெளியிட்டு வருகிறது. அத்துடன், பல்வேறு மதிப்புகளில் நாணயங்களும் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில், அதிகரித்து வரும் கரன்சி தயாரிப்பு செலவை குறைக்க, ரிசர்வ் வங்கி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. கரன்சி அச்சடிப்பதை மெல்ல குறைத்து, அதற்கு ஈடாக, மின்னணு பணப் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் திட்டமும், அதில் அடங்கும்.
மின்னணு தொழில்நுட்பத்தில், பணம் செலுத்துவது அதிகரித்தால், கரன்சி புழக்கமும், பயன்பாடும் ஓரளவு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், ‘டெபிட், கிரெடிட் கார்டு, இ – வாலட்’ உள்ளிட்ட, வலைதளம் சார்ந்த பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகின்றன. இந்நிலையில், வலைதளங்களில் மட்டும் புழங்கும், ‘விர்ச்சுவல் கரன்சி’ எனப்படும், மெய்நிகர் கரன்சிகளை வெளியிடுவது குறித்தும், ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி செயல் இயக்குனர், சுதாகரன் சென் கூறியதாவது: வலைதளங்களில், ‘பிட்காய்ன், எரித்ரியா’ போன்ற பல வகையான மெய்நிகர் கரன்சிகள் புழங்குகின்றன. தனியார் வெளியிடும் இந்த வகை கரன்சிகளுக்கு, சட்டபூர்வ மதிப்பு கிடையாது. இந்த கரன்சிகளின் பரிவர்த்தனையை கட்டுப்படுத்த, எந்தவொரு ஒழுங்குமுறை அமைப்பும் இல்லை. இருந்த போதிலும், சில ஆண்டுகளாக, வலைதளங்களில், ‘பிட்காய்ன்’ போன்ற, அங்கீகாரமற்ற மின்னணு கரன்சிகளில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
‘இந்த கரன்சிகளில் செய்யும் முதலீடுகள், பரிவர்த்தனைகள் ஆகியவை ஆபத்தானவை; எத்தகைய இடர்ப்பாடு ஏற்பட்டாலும், அது, இத்தகைய கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுவோரையே சாரும்’ என, ரிசர்வ் வங்கி ஏற்கனவே எச்சரித்துள்ளது. அதனால், ‘பிட்காய்ன்’ போன்ற தனியார் கரன்சிகளின் பாதுகாப்பற்ற பரிவர்த்தனைகள், நம் நாட்டிற்கு ஏற்றதல்ல.அதே சமயம், சட்டபூர்வ மதிப்புடன், மின்னணு கரன்சிகளை வெளியிடுவது குறித்து, ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.
தற்போதைய காகித கரன்சிகளுக்கு மாற்றாக, மின்னணு கரன்சி வெளியிடப்படும் துவக்க நிலையில் உள்ள இத்திட்டத்தின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து, ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில், மின்னணு கரன்சி பரிவர்த்தனைகள், மிகுந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
2 மடங்கு உயர்வு:
ரிசர்வ் வங்கி, 2016 – 17 ஜூலை – ஜூன் வரையிலான நிதியாண்டில், கரன்சி நோட்டுகளை அச்சடிக்க, 7,965 கோடி ரூபாய் செலவிட்டு உள்ளது. இது, முந்தைய, 2015 – 16ம் நிதியாண்டில் செலவிட்ட, 3,420 கோடி ரூபாயை விட, இரு மடங்கு அதிகம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|