பதிவு செய்த நாள்
23 செப்2017
00:31
புதுடில்லி : மத்திய அரசு, நாட்டின் பொருளாதார மந்த நிலையை கருத்தில் வைத்து, 40 – 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை, ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, பரிசீலித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி., அமல் காரணமாக, இரண்டாவது காலாண்டிலும், வளர்ச்சி குறித்து உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் தாக்கத்தை தடுக்க, ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.இத்திட்டங்களை செயல்படுத்தினால், நடப்பு நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை, இலக்கு அளவான, 3.2 சதவீதத்தில் இருந்து, 3.5 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
வங்கி, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான, பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டதும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துவார். இதையடுத்து, ஊக்குவிப்பு திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சில தினங்களுக்கு முன், அருண் ஜெட்லி, வர்த்தகத் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், ‘நிடி ஆயோக்’ துணைத் தலைவர், ராஜிவ் குமார் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நடப்பு பட்ஜெட்டில், மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட, 3.10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, செலவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கான நிதியை, கடன் அல்லது பொதுத் துறை நிறுவனங்களின், பங்கு விற்பனை மூலம் திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
72,500 கோடி ரூபாய் திரட்ட திட்டம்:
நடப்பு நிதியாண்டில், மொத்த கடன் இலக்கு, 5.80 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட அளவிலான பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், 72,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இது, முன்னெப்போதும் நிர்ணயிக்கப்படாத இலக்காகும்.
வங்கி துறைக்கு அரசு ஆதரவு: அருண் ஜெட்லி:
மும்பையில், இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: வங்கிகளின் பிரச்னைகளுக்கு எத்தகைய தீர்வு தேவைப்பட்டாலும், அதை அரசு வழங்கும். வங்கி துறை, ‘பேசல் – 3’ விதிகளை பின்பற்ற, தேவையான நிதியாதாரங்கள் உருவாக்கப்படும். வங்கி துறைக்கு, அரசு ஆதரவு தொடரும். ஜி.எஸ்.டி., அமலாக்கம், முதற்கட்டத்தில் எதிர்பார்த்ததை விட, சுமுகமாக நடந்தது. ஏராளமானோர், தற்போது வரி வரம்பிற்குள் வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|