பதிவு செய்த நாள்
13 அக்2017
05:56
புதுடில்லி : ‘‘ஜப்பானில், வேலைவாய்ப்புடன் தொழில்நுட்ப பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ், இந்தியாவில் இருந்து, மூன்று லட்சம் இளைஞர்கள் அனுப்பி வைக்கப்படுவர்,’’ என, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார். அவர், மேலும் கூறியதாவது:
மத்திய அரசு ஒப்புதல்:
இளைஞர்களுக்கு, நவீன தொழில்நுட்பங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவற்றுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கும், ‘சங்கல்ப், ஸ்ட்ரைவ்’ என்ற இரு வகை திட்டங்களுக்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டங்கள், நிறுவன அமைப்புகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தி, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களின் தரத்தை உயர்த்த துணை புரியும். மேலும், ‘டி.ஐ.டி.பி.,’ என்ற திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் இளைஞர்களுக்கு, ஜப்பானில், 3 – 5 ஆண்டுகள், வேலைவாய்ப்புடன் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்.
சர்வதேச திறன் பயிற்சி:
இவர்களில், 50 ஆயிரம் பேருக்கு, ஜப்பானில் வேலைவாய்ப்பும் கிடைக்கும். இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் பணி, ஒளிவுமறைவின்றி, வெளிப்படையாக நடைபெறும். இதற்கான ஒப்பந்தம், விரைவில், நான் மேற்கொள்ள உள்ள, ஜப்பான் பயணத்தின் போது கையெழுத்தாக உள்ளது. இத்துடன், பெலாரஸ் நாட்டுடன், தொழிற்கல்வி மற்றும் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கும், அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. குறிப்பாக, தயாரிப்புத் துறையில், தொழில்நுட்பத் திறனை வழங்குதல், திறன் வளர்ப்பு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட சேவைகளை, பெலாரஸ் வழங்கும். இந்தியாவில், 66 சர்வதேச திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|