பதிவு செய்த நாள்
16 அக்2017
00:38
பார்தி ஏர்டெல் நிறுவனம், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு பிரிவைக் கையகப்படுத்த ஒப்புக்கொண்டது, மிக முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டு வரும் ஒருங்கிணைப்பாகவும், இதனால், வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை உண்மையா?
முகேஷ் அம்பானியின் ‘ஜியோ’ சேவை அறிமுகமாகவில்லை எனில், இத்தகைய ஒருங்கிணைப்புக்கான தேவையே எழுந்திருக்காது என்ற உண்மையை ஏற்கவேண்டும். வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் பல்வேறு அதிவேக சேவைகளை இலவசமாகவே வழங்கியதன் மூலம், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் லேசாக ஆட்டம் கண்டன.
யார் ‘கிங்’:
‘ஜியோ’வினால் மற்ற தொலைத்தொடர்பு சேவையாளர்களுக்கு ஏற்பட்ட முக்கிய பிரச்னை, சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த முடியவில்லை என்பதுதான். இன்றைக்கு தொலைப் பேசி அழைப்புகளைப் போலவே, ‘டேட்டா’ எனப்படும் இணையச் சேவை மிக முக்கியமான தொழில். ‘டேட்டா’வில் தான் வருவாய் அதிகம். இங்கே தான் ரிலையன்ஸ் ‘ஜியோ’ கட்டையைப் போட்டது.வாழ்நாள் முழுக்க அழைப்புகள் இலவசம் என்பதோடு, அதிவேக இணையத்தை முதல் மூன்று மாதங்கள் இலவசமாகவே வழங்க (அது ஜூன் 2017 வரை நீட்டிக்கப்பட்டது), சந்தை படுத்துவிட்டது. விளைவு, போட்டி நிறுவனங்கள் திண்டாடத் துவங்கிவிட்டன.
இந்த நிலையில் தான், ‘ஐடியா’ நிறுவனமும் ‘வோடபோன்’ நிறுவனமும் கைகோக்க முன்வந்தன. அனில் அம்பானியின், ‘ஆர்காம்’ நிறுவனம், ‘ஏர்செல்’ நிறுவனத்தைக் கையகப்படுத்த முனைந்தது. ஆனால், அது பின் கைவிடப்பட்டது. ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் ‘டெலிநார்’ நிறுவனத்தையும் ‘டிகோனா’வின் 4ஜி பிரிவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டது. வலுவுள்ளவனே வாழ்வான் என்ற கருத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு நிறுவனமும் முட்டி மோதுகின்றன. கட்டணப் போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாமல், பல சின்ன நிறுவனங்கள் ஏற்கனவே கடையை மூடிக்கொண்டு கிளம்பி விட்டன, அல்லது பெருநிறுவனங்களோடு ஐக்கியமாகி விட்டன.
இப்போதைய ஒருங்கிணைப்புகளின் இறுதியில், ஏர்டெல், ஐடியா – வோடபோன், ஜியோ ஆகியவை மட்டுமே சந்தையில் முதல் மூன்று நிலைகளில் நிலைத்து நிற்கும் என தெரிகிறது.இத்தகைய ஒருங்கிணைப்பை, பங்கு வர்த்தக ஆய்வாளர்களும் தொழில்துறை நிபுணர்களும் வரவேற்கின்றனர். தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகளின் விலை உயரும், லாபம் பெருகும் என்பது இவர்களது கணிப்பு. ஆனால், வேறு கேள்விகள் எழாமல் இல்லை. இதனால், வாடிக்கையாளர்களுக்கு என்ன பலன்... அரசுக்கு என்ன பலன்?
ஒரு துறையில் பல போட்டியாளர்கள் இருந்தால் தான், வாடிக்கையாளருக்குத் தரமான சேவை கிடைக்கும். ஒருங்கிணைப்பு ஏற்படும்போது, வாடிக்கையாளர்களுக்கான வாய்ப்பு குறைந்து போகும். பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, ஒரு சில குறிப்பிட்ட சேவை தருபவர்களிடமே அடைபட்டுக் கிடக்கவேண்டிய நிலை ஏற்படும்.சில நிறுவனங்கள் தனித்துவமான சேவைகளை, வசதிகளை ஏற்கனவே வழங்கிக்கொண்டிருக்கலாம். ஒருங்கிணைப்பு ஏற்படும் போது, இத்தகைய தனித்துவச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, அனைவருக்கும் பொதுவான வழக்கமான சேவைகளே வழங்கப்படும். இதனாலும் வாடிக்கையாளரின் திருப்தி பாதிக்கப்படும்.
நிறுவனங்கள் பெரிதாகும் போது ஏற்படும் இன்னொரு பிரச்னை, வாடிக்கையாளர் சேவையின் தரம். அப்போது வாடிக்கையாளர்கள் வெறும் எண்ணிக்கையாகச் சுருங்கிப் போவர். அவர்களை மனிதர்களாக மதிக்கும் போக்கு மாறிவிடும். அக்கறையும் கவனமும் குறைந்து போகும். புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் போதோ, மேம்பாடுகள் செய்யப்படும் போதோ, அவற்றுக்கான கட்டணங்கள் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பன்மடங்கு வளர்ந்துவிடும் என்பதால், அன்றைக்கு புதிய போட்டி நிறுவனங்கள் தோன்றி, புதிய சேவைகளை வழங்குவதற்கு செய்ய வேண்டியமுயற்சியும் முதலீடும் முனைப்பும் பன்மடங்கு அதிகமாக இருக்கும்.
வேலையிழப்பு:
இப்போதே யோசித்துப் பாருங்கள். முகேஷ் அம்பானி போன்ற பெரு முதலீட்டாளர் ஒருவரால் தான், இங்கே ஒரு குலுக்கு குலுக்க முடிந்தது. ஜூலை 2017க்குள் 12.9 கோடி வாடிக்கையாளர்களைப் பெற முடிந்ததென்றால், அதற்கு அவர் செய்திருக்கும் முதலீடு 29 பில்லியன் டாலர்கள் (1.87 லட்சம் கோடி ரூபாய்). ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் உடனடி பாதிப்புகளில் ஒன்று, வேலையிழப்பு. இத்துறையில் பணியாற்றும் சுமார் 30 ஆயிரம் முதல், 1.5 லட்சம் பேர் வரை, நேரடியாக வேலை இழக்கலாம் என்பது ஒரு கணிப்பு. மறைமுக வேலையிழப்புகளுக்குக் கணக்கே இல்லை.
ஊன்றுகோல்:
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அலைக்கற்றை வாங்கிய போது, அதற்கான தொகையை முன்பு பத்தாண்டுகளுக்குள் அரசுக்குச் செலுத்த வேண்டும் என்ற உச்சவரம்பு இருந்தது. இப்போது அதை, 16 ஆண்டுகளுக்கு நீட்டித்து வழங்க, அமைச்சர்கள் குழு ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிறுவனங்கள் மேல் விதிக்கப்பட்ட அபராதங்கள் மீதான வட்டியும் குறைக்கப்பட்டு உள்ளது மற்றொரு சலுகை. வாராக்கடன் பிரச்னைக்குப்பின், வங்கிகள், இந்நிறுவனங்களின் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கத் தயங்குகின்றன.
தொலைத்தொடபுத் துறையின் மொத்த கடன் பாக்கி, 4.6 லட்சம் கோடி ரூபாய். இந்நிலையில், அரசு தனியே ஒரு நிதியத்தை ஏற்படுத்தி, நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறுகிறது. அரசு இதற்கும் செவிசாய்க்க வாய்ப்புண்டு. அதோடு, வருடாந்திர லைசென்ஸ் கட்டணம், அலைக்கற்றையைப் பயன்படுத்தும் கட்டணம் ஆகியவற்றையும் குறைக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை. ஒருவகையில், அரசின் வலுவான ஆதரவினால்தான், இந்த நிறுவனங்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றன. வேறு வகையில் சொல்வதென்றால், மக்களின் வரிப்பணம் தான் இவர்களைத் தாங்கிப் பிடிக்கும் ஊன்றுகோல்.
இவ்வளவையும் செய்யும் அரசின், தன் சொந்த நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., – எம்.டி.என்.எல்., ஆகியவற்றுக்கு என்ன செய்துள்ளது... அது ஏன் இந்த முதல் மூன்று இடங்களுக்கான போட்டியில் இடம்பெற முயற்சி செய்ய வில்லை... என்ற கேள்வி எழாமல் இல்லை. பதில் தான் தெரியவில்லை.
-ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|