பதிவு செய்த நாள்
18 அக்2017
23:54
சிங்கப்பூர் : ‘இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, சாதனை அளவாக, செப்டம்பரில், 40,250 கோடி டாலராக உயர்ந்து உள்ளதால், எத்தகைய அன்னிய இடர்ப்பாடுகளையும், அந்நாடு சுலபமாக சமாளிக்கும்’ என, ‘டெவலப்மென்ட் பேங்க் ஆப் சிங்கப்பூர்’ தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2013ல், அமெரிக்க அரசு, ‘பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கை படிப்படியாக குறைக்கப்படும்’ என, அறிவித்தது. இதன் தாக்கம், இந்தியாவிலும் எதிரொலித்தது. அப்போது, நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, 27,500 கோடி டாலராக குறைந்து இருந்தது. அடுத்து வந்த ஆண்டுகளில், இந்தியாவில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்தது. நிகர அளவில், அன்னிய நேரடி முதலீடுகள் அதிகம் குவிய துவங்கின. இதனால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்தது. இது போன்ற சாதகமான அம்சங்கள் காரணமாக, செப்., நிலவரப்படி, நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, 40,250 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
ஜன., – ஜூன் வரையிலான அரையாண்டில், டாலர் வரத்து வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருந்தது. அதன்பின், இந்த வளர்ச்சியில் சற்று தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடுகள் மந்தமாக உள்ளன; நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. அதனால், அன்னிய செலாவணி கையிருப்பின் வளர்ச்சியும், மிதமாகவே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, முதல் அரையாண்டில், மாதம் சராசரியாக, 380 கோடி டாலர் குவிந்தது; இது, ஆகஸ்டில், 40 கோடி டாலராக சரிவடைந்தது. இந்நிலையில், செப்டம்பரில், 150 கோடி டாலர் வெளியேறி உள்ளது. இத்தகைய சூழலில், சர்வதேச அளவில், டாலருக்கான தேவை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், அது, உள்நாட்டு நிதிச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அன்னிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில், அதிக ஏற்றத்தாழ்வு உண்டாகும். அத்தகைய சூழலில், ரிசர்வ் வங்கி, பெருமளவு டாலரை புழக்கத்தில் விட்டு, நிலைமையை சமாளிக்க முற்படும். இதன் மூலம், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை கட்டுக்குள் கொண்டு வர, ரிசர்வ் வங்கி முயலும். இதன்படி, ரிசர்வ் வங்கி, அதிகளவில் டாலரை புழக்கத்தில் விடும்பட்சத்தில், அதனிடம் உள்ள, அன்னிய செலாவணி கையிருப்பு குறையும். அத்தகைய சூழல் ஏற்பட்டாலும், அதை சுலபமாக சமாளிக்கும் ஆற்றல், இந்தியாவிற்கு உள்ளது. சர்வதேச நிலவரம் காரணமாக ஏற்படும், எத்தகைய தாக்கத்தையும் சமாளிக்கும் வகையில், இந்தியாவிடம், போதுமான அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில்:
அமெரிக்க மத்திய வங்கி, பொருளாதார ஊக்குவிப்பை படிப்படியாக குறைக்க உள்ளதாக, 2013 மே மாதம் அறிவித்தது. அது முதல், ஆசிய நாடுகளில், ஜப்பான் நீங்கலாக, இந்தியாவில் மட்டுமே, அன்னிய செலாவணி கையிருப்பு, மிக அதிகளவில் உயர்ந்துள்ளது.-டி.பி.எஸ்., சிங்கப்பூர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|