பதிவு செய்த நாள்
20 அக்2017
23:51
ஜூன் மாதத்தோடு முடிந்த காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5.7 சதவீதத்தை தொட்டது என்று சொன்னவுடன், நம் பொருளாதார வல்லுனர்கள், எப்படி பதறினரோ, அப்படிப்பட்ட ஒரு பதற்றம், பிரிட்டனில் ஏற்பட்டு உள்ளது. அங்கே, அந்நாட்டு நாணயமான, பவுண்டு ஸ்டெர்லிங், படிப்படியாக வலுவிழந்து வருவதே, இதற்கு முக்கிய காரணம்.
என்ன நடக்கிறது பிரிட்டனில்?
முதலில், செப்டம்பரில் என்ன நடந்தது என, பார்த்து விடுவோம். நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஆக., மாதத்தோடு ஒப்பிடும் போது, செப்டம்பரில், பிரிட்டனின் சில்லரை வணிகம், 0.8 சதவீதம் சரிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், பணவீக்கம். அதற்கு முக்கியமாக பங்களித்துள்ளது, பவுண்டு ஸ்டெர்லிங்கின் மதிப்பு வீழ்ச்சி. மக்களின் வாங்கும் சக்தி, படிப்படியாக குறைந்துள்ளது. மக்கள், பல பொருட்களை உடனடியாக வாங்காமல், தள்ளிப் போடுகின்றனர் அல்லது பொருட்களின் விலையேற்றத்தால், அவர்களால் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இவை இரண்டுமே நல்லதில்லை. எங்கோ கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதே, இதற்கு அர்த்தம்.
சில்லரை வணிக வீழ்ச்சியில், அதிகம் பாதிப்படைந்தது, சூப்பர் மார்கெட்டுகளும், உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் சந்தைகளும், பெட்ரோல், ‘பங்க்’குகளும் தான். கம்ப்யூட்டர் கேம்கள், மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகளின் விற்பனை அளவும், செப்டம்பரில் சரிந்துள்ளன.அந்நாட்டின் பணவீக்கம், 3 சதவீத அளவை தொட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பணவீக்கம் அதிகரித்துள்ளது, கவலையை ஏற்படுத்தி உள்ளது. சில்லரை வணிகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும், பணவீக்கமும், ஏன் இவ்வளவு துாரம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த வேண்டும்?
முதலில், பிரிட்டனின் வர்த்தக பாங்கை புரிந்து கொள்ள வேண்டும். அந்நாட்டின் மொத்த வருவாயில், தொழிற்சாலைகளின் பங்கு, வெறும், 10 சதவீதம் தான். சேவை துறையின் பங்களிப்பு, 80 சதவீதம். அந்நாட்டில் விற்பனையாகும் பெரும்பாலான பொருட்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. அவற்றின் விற்பனை அதிகரித்தால் தான், பொருளாதாரம் உயரும். இந்நிலையில், சில்லரை விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவு, பொருளாதாரத்துக்கு ஏற்பட்டு உள்ள பெரும் பின்னடைவு.
ஏன் இந்த பின்னடைவு ஏற்பட வேண்டும்?
அதற்கு பவுண்டு ஸ்டெர்லிங்கின் வீழ்ச்சி, முக்கியமான காரணம். 2016 ஜூனில், பிரிட்டன், ‘பிரெக்சிட்’ முடிவை எடுத்தது. அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, பிரிட்டன் தனியே பிரிந்துவிடலாம் என்பதை, பொது ஓட்டெடுப்பின் மூலம், அந்நாட்டு மக்கள் உறுதி செய்தனர். இப்போது, பிரிட்டன் பிரதமராக இருக்கும், தெரசா மே, இந்த பிரியும் முடிவை செயல்படுத்த முனைந்து வருகிறார். அதில் எண்ணற்ற சிக்கல்கள், உடன்பாடுகள், குறைகள், ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறார்.
இத்தகைய தடுமாற்றமான சூழலில், பவுண்டு ஸ்டெர்லிங் தொடர்ந்து அடிவாங்கி வருகிறது. சில்லரை விற்பனை சரிவு விபரம் வெளியானவுடன், ஒரு யூரோவுக்கு இணையான பவுண்டின் மதிப்பு, மேலும் சரிந்து போனது. ஒரு யூரோவை வாங்குவதற்கு, 89.90 பென்ஸ் போதும். அதே போல், அமெரிக்க டாலருக்கு இணையாகவும், பவுண்டின் விலை அரை சதவீதம் குறைந்தது.
‘பிரெக்சிட்’ பொது ஓட்டெடுப்புக்கு முந்தைய நிலையோடு ஒப்பிடும் போது, யூரோவுக்கு இணையான பவுண்டின் மதிப்பு, 14 சதவீதம்; அமெரிக்க டாலருக்கு இணையான பவுண்டின் மதிப்பு, 10 சதவீதம் குறைந்துள்ளது. இதையெல்லாம் விட முக்கியம், பிரிட்டனில் வாழ்பவர்களின் வாழ்க்கை நிலை, செல்வ நிலை படிப்படியாக குறைந்து வருவது, அந்நாட்டு மக்களுக்கு கவலை அளிக்கிறது. அவர்களுடைய வருவாய் குறைவு; விலைவாசியோ அதிகம். இந்நிலையில், இங்கிலாந்து மத்திய வங்கி, ‘வட்டி விகிதங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டிய தேவை ஏற்படலாம்’ என, தெரிவித்திருக்கிறது.
அதாவது, வங்கியின் வட்டி விகிதம் கூட்டப்படலாம் என்பது செய்தி. இப்படி செய்தால், தொழிற்கடன்களின் வட்டி விகிதமும், இதர கடன்களின் வட்டி விகிதங்களும் உயர்ந்துவிடும். அதனாலும், அங்கே பாதிப்புகள் தொடரும் வாய்ப்புண்டு. இதெல்லாவற்றுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் முடிவு தானே? அதை, ஏன் மீண்டும் மறுபரிசீலனை செய்யக் கூடாது என்ற கருத்தும், பிரிட்டனில் முன்வைக்கப்படுகிறது. வரும், 2019க்குள், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, முழுமையாக பிரிய வேண்டும். அதற்குள், உலக பொருளாதாரத்தில், ஒரு பூகம்பத்தை கிளப்பி விடாமல் இருக்க வேண்டும்.
பரவுமா?
பவுண்டின் மதிப்பு சரிவு என்பது, பணவீக்கம், வருவாய் பெருக்கமின்மை, சில்லரை வர்த்தகத்தில் உயர்வின்மை என, சகலவிதமான இடர்களுக்கும், ஆதியும், அந்தமுமாக இருக்கிறது. அதன் பாதிப்புகள், பிரிட்டனில் மட்டும் இருக்க போவதில்லை. அது, பிற நாடுகளுக்கும் பரவக்கூடிய தொற்றுநோய். இதனால், மொத்த ஐரோப்பிய ஒன்றியத்திலும், பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டு விடலாமோ என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
பவுண்டு மதிப்பு சரிவால் சாதகம்:
* பிரிட்டன் வரும் சுற்றுலா பயணியருக்கு, கொஞ்சம் செலவு குறையும்* பிரிட்டனில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, கொஞ்சம் சிரமம் குறையும்* பிரிட்டனில் கல்வி பயிலும் மாணவர்களின் செலவுகள் குறையும்* வெளிநாடுகளில், குறிப்பாக, அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள பிரிட்டிஷ் நிறுவனங்கள், கூடுதல் லாபம் பார்க்கும்.
பாதகம்:
* பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பாதிப்படையும். ஏனெனில், அவர்களுடைய சரக்குக்கு கிடைக்கும் வருவாய் குறைந்து போகும். நாணய மாற்று மதிப்பு குறைந்து போவதால், லாபம் குறையும்* பிரிட்டனில் இருந்து, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வோர், கூடுதலாக செலவு செய்ய வேண்டும்* பிரிட்டனில் உள்ள, வெளிநாட்டு பணியாளர்களின் வருவாயும், அதன் நாணய மாற்று மதிப்பும் குறைந்து போவதால், அந்நாட்டில் வேலை செய்வது, அவ்வளவு கவர்ச்சிகரமாக இராது.
– ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|