பதிவு செய்த நாள்
23 அக்2017
00:08
சில நாட்களாக வெளிவரும் வேலைவாய்ப்புகள் பற்றிய செய்திகள், மீண்டும் கவனத்தைக் கவருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மூன்றாண்டுகள் ஆட்சி நிறைவு பெற்றபோது, போதுமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக முன்வைத்தன. அரசியல் பழிசுமத்தல்கள் அடங்கிய பிறகு, இப்போது நிதானமாக இதன் உண்மைத் தன்மையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.
இந்தியாவில், 50 கோடி பேர் வேலை செய்கின்றனர். இதில், 22 கோடி பேர் விவசாயத் துறையில் இருக்கின்றனர். இந்தத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதற்கான வாய்ப்பு இல்லை. விவசாயம் அல்லாத பிற துறைகளில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேர் வேலைச் சந்தைக்கு வருகின்றனர். இவர்களுக்குத்தான் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய சூழல் இருக்கிறது.
இதுவும் தோராயமான கணக்குதான். இந்தியாவில் உண்மையில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பவர்கள் பற்றிய கணக்கு தெளிவில்லாமல் இருக்கிறது. ஒருவிஷயம் மட்டும் தெளிவு. முறைசாரா தொழில்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை மட்டும் மிக அதிகம். மொத்த வேலைவாய்ப்பில் அது, 80 சதவீதம் வரை இருக்கலாம் என்பது மற்றொரு தோராயமான கணக்கு.
வழிமுறைகள்:
இந்தச் சூழ்நிலையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதில், முறைசாரா மற்றும் முறையான பொருளாதாரத்தை இணைப்பதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் அதன்மூலம், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடைமுறைகள் வகுக்கப்படும் என, தெரிவித்தது அக்குழு. இதேபோல், பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியமும் இந்த திசையில் இன்னொரு முனையில் வேலை செய்கிறார்.
நமது பொருளாதாரத்தைப் பாதிக்கும் முக்கியமான பிரச்னைகள் என்னென்ன, அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதைப் பற்றிய அறிக்கையை அரவிந்த் உருவாக்கி வருகிறார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்த அரசின் முன்னுரிமை என்பதை சமீபத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். ஆக, அனைவர் கவனத்தையும் வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற சிந்தனையே ஆக்கிரமித்துள்ளது என்பது நல்லதொரு முன்னேற்றம்.
சரி, என்ன செய்ய வேண்டும்?
முதலில், நமது தொழில், வர்த்தக கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். தாராளமயக் கொள்கையைப் பின்பற்றத் துவங்கிய 1990களில் உருவாக்கப்பட்ட அணுகுமுறையோடு இப்போது இந்திய தொழில்கள் செயல்பட முடியாது. பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒட்டியே நமது அணுகுமுறை மாற வேண்டும்.இந்தியாவில், புதிய தொழில், வர்த்தக கொள்கை வகுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவது நம் கவனத்தை ஈர்க்கிறது. இதில் தனியார் நிறுவனங்கள் இங்கே லாபகரமான தொழில் செய்ய முடியும், எந்தவிதமான இடர்களும் இருக்காது, தலையீடுகளும் இருக்காது என்பதற்கான உறுதி வழங்கப்பட வேண்டும்.
தொடர்ச்சியாக அரசின் சட்ட திட்டங்கள், வரி விதிப்பு முறைகள் மாறுதல் அடையுமானால், அதனால், தொழில்களின் வளர்ச்சி தேங்கிப் போகவே செய்யும்.இரண்டாவது, ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய தொழில்களுக்கு அரசாங்கத்தின் கடைக்கண் பார்வை தேவை. உதாரணமாக, ஆயத்த ஆடை தயாரிப்பு, தோல் ஆடைகள் தயாரிப்பு, மரச்சாமான்கள் உற்பத்தி, ஆபரணங்கள் தயாரிப்பு ஆகிய துறைகளுக்குத் தனிக்கவனம் கொடுக்கப்பட வேண்டும். அந்தத் தொழில்களுக்குத் தேவைப்படும் இடுபொருட்களுக்கு மானியம், தேவையான சலுகைகள் ஆகியவை அளிக்கப்பட்டால், இந்தத் துறைகள் சற்றே தலைநிமிரும். அதனால், வேலைவாய்ப்புகள் அங்கே பெருகும்.
புதிய சந்தைகள்:
மூன்றாவது, நாடெங்கும் இருக்கும் பல்வேறு சின்னச் சின்ன தொழில் நகரங்களுக்கு ஊக்கமளிப்பது. இந்தியாவில் 1,350 சிறு தொழில் நகரங்கள் இருக்கின்றன. அதேபோல், கைத்தறி, கைவினைப் பொருள்கள், அபூர்வமான கலைப்பொருள்கள் தயாரிக்கும் சுமார் 4,000 மையங்கள் இருக்கின்றன. இவை, நம் கவனத்தை அதிகம் ஈர்ப்பதில்லை. ஆனால், இங்கேதான் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இவர்களுக்கு புதிய சந்தைகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம், வேலைவாய்ப்புகளை உயர்த்த முடியும்.
நான்காவது, பெரும் வேலைவாய்ப்புகளை இன்றைய தேதியில் உருவாக்குவது கட்டுமானத் துறைதான். வங்கிகளில் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம், மத்திய வர்க்கத்தினர் புதிய வீடுகளை வாங்குவதற்கு முன்வருவர். அதன் மூலம், அடுக்ககங்கள் தேவை அதிகரிக்கும். இதன் விளைவாக, வேலைவாய்ப்புகள் பெருகும்.அரசாங்க வேலைவாய்ப்புகளை உயர்த்துவது இன்னொரு பெரிய முன்னேற்றமாக இருக்கும். ரயில்வே துறை ஏற்கெனவே இந்த விஷயத்தில் முந்திக்கொண்டிருக்கிறது. அதேபோல், காவல்துறை, நீதித் துறை, வருவாய்த் துறை ஆகியவற்றில் ஏராளமான நபர்களின் தேவை இருக்கிறது.
நமது மக்கள் தொகையின் அளவுக்கு ஏற்ப போதுமான காவலர்களோ, நீதிமன்றப் பணியாளர்களோ, மருத்துவர்களோ, ஆசிரியர்களோ இல்லை என்பதை பல ஆய்வுகள் எடுத்து வைக்கின்றன. மத்திய, மாநில அரசுகள், இத்துறைகளில் நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்பினாலே, நன்கு படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும்.
தொழிலாளர் சட்டங்கள்:
தனியார் துறையினர் முன்வைக்கும் மற்றொரு முக்கிய பிரச்னை, இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள். அதில் தேவையான இடங்களில் தளர்வு செய்யப்படுமானால், பல தொழிலகங்கள் முன்னேற வாய்ப்புள்ளது. வழக்கமான துறைகளில் வேலைவாய்ப்புகளை உயர்த்துவதோடு, புதிய துறைகளில் கவனம் செலுத்துவதும் அவசியம். உதாரணமாக, இந்தியாவின் பண்பாட்டு வளம், ஏராளமான சுற்றுலா பயணிகளை இங்கே ஈர்க்கிறது. அதேபோல், மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இங்கே உயர் கல்வி கற்பதற்கான செலவு குறைவு. மருத்துவ வசதிகளும் அதற்கான செலவும் இங்கே குறைவு.
இந்நிலையில், சுற்றுலாவையும், உயர் கல்விக் கூடங்களையும், மருத்துவ சுற்றுலாவையும் மையப்படுத்துவோமானால், அடுத்த பத்தாண்டுகளுக்கு நமக்குத் தேவையான வேலைவாய்ப்புகள் கிடைத்துவிடும் என்றே நம்பலாம்.
– ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|