பதிவு செய்த நாள்
20 நவ2017
01:28
டிஜிட்டல் வாலெட்களின் பயன்பாட்டை மேலும் பரவலாக்கும் வகையில், டிஜிட்டல் வாலெட் சேவை வழங்கும் நிறுவனங்கள், தங்கள் செயலியில் விர்ச்சுவல் ப்ரீபைடு கார்டு வசதியை அளிக்கத் துவங்கியுள்ளன.
அண்மையில் ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் வாலெட்களுக்கான புதிய நெறிமுறைகளை வெளியிட்டது. இதன்படி இவற்றை பயன்படுத்துவதற்கான, கே-.ஒய்.சி., நடைமுறைகள் மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளதோடு, மற்ற வாலெட்கள் இடையிலான பரிவர்த்தனையும் சாத்தியமாக வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், ஒரு வாலெட் வாடிக்கையாளர்கள், இன்னொரு வாலெட் வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்ப முடியாது; இது மாற உள்ளது.
அதே போல, டிஜிட்டல் வாலெட்களை எல்லா வர்த்தக மற்றும் மின் வணிக நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதனால், எல்லா இடங்களிலும் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், டிஜிட்டல் வாலெட்கள் பயன்பாட்டை மேலும் அதிகமாக்கும் வகையில், இந்நிறுவனங்கள் விர்ச்சுவல் ப்ரீபைடு கார்டு வசதியை வழங்கத் துவங்கியுள்ளன. பெரும்பாலான வர்த்தகர்களால் ஏற்கப்படும் விசா அல்லது மாஸ்டர் கார்டு சார்ந்த, ப்ரீபைடு கார்டு வசதியை அளிப்பதன் மூலம், எல்லா இடங்களிலும் பரிவர்த்தனையை சாத்தியமாக்க முடியும்.டிஜிட்டல் வாலெட் நிறுவனங்களால், தன்னிச்சையாக இத்தகைய கார்டுகளை வழங்க முடியாது என்பதால், இவை வங்கிகளுடன் இணைந்து, இந்த வசதியை அளிக்கின்றன. ஆர்.பி.எல்., வங்கி மற்றும் ஐ.டி.எப்.சி., வங்கிகள் வாலெட்களுடன் இணைந்த கார்டை அளிக்கத் துவங்கியுள்ளன.
இந்த கார்டுகளும் டெபிட் கார்டுகள் போன்றவை தான். ஆனால் இவை விர்ச்சுவல் வடிவில் வாலெட் செயலியில் இருக்கும். வழக்கமான டெபிட் கார்டு போல, 16 இலக்க எண், சி.வி.வி., எண் மற்றும் காலாவதியாகும் காலம் ஆகியவற்றை இவை கொண்டிருக்கும்.
ஆன்லைனில் பணம் செலுத்த, டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வாய்ப்பை, ‘கிளிக்’ செய்து, 16 இலக்க எண் உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்து, பின் எண்ணை சமர்ப்பித்தால், பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|