பதிவு செய்த நாள்
20 நவ2017
01:30
எதிர்பாராத நெருக்கடிகளை எதிர்கொள்ள உதவும், அவசர கால நிதியை உருவாக்கி கொள்வதோடு, அந்த நிதியை, சரியான முறையில் முதலீடு செய்வதும் முக்கியம்.
நிதி திட்டமிடலில் இலக்கு, முதலீடு பற்றி எல்லாம் பேசப்படும் போது, ‘எமர்ஜன்ஸி பண்டு’ எனக் குறிப்பிடப்படும், அவசர கால நிதி பற்றியும் தவறாமல் குறிப்பிடப்படுகிறது. ஒருவர், தனக்கான முதலீட்டு உத்தியை வகுக்கும் முன், இந்த வகை நிதியை உருவாக்கி கொள்வது அவசியம் என்றும், நிதி திட்டமிடல் ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர். எதிர்பாராமல் ஏற்படக்கூடிய நெருக்கடியான சூழலில், குடும்பத்தின் அடிப்படை செலவை சமாளிக்க கூடிய நிதியை, கைவசம் வைத்திருப்பதை தான், அவசர கால நிதி என்கின்றனர். மழைக் காலத்திற்கான சேமிப்பு என்றும், இதை புரிந்து கொள்ளலாம். பணி இழப்பு, விபத்து அல்லது மருத்துவ பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், ஏற்படக்கூடிய நெருக்கடியை சமாளிக்க, இந்த நிதி கைகொடுக்கும்.
எவ்வளவு நிதி?அவசர கால நிதியாக, 3 – 6 மாத கால அடிப்படை செலவுக்கான தொகை, கையில் இருக்க வேண்டும். அடிப்படை செலவு என்பது, மளிகை, மாதத் தவணை உள்ளிட்ட, தவிர்க்க இயலாத செலவுகளை உள்ளடக்கியது. இந்த நிதிக்கான தொகையை தீர்மானிக்கும் போது, ஒருவர் தன் சூழலுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். இரு வருமானம் கொண்ட குடும்பம் எனில், 3 மாத அடிப்படை செலவுக்கான தொகை கூட, போதுமானதாக இருக்கலாம். ஒரு நபர் மட்டும் சம்பாதிக்கும் குடும்பம் எனில், ஆறு மாத தொகை அவசியம்.
அதே நேரத்தில், வயதான பெற்றோரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இருந்தால், ஓராண்டுக்கான தொகையை சேர்த்து வைத்திருப்பதும் சரியாக அமையும். ஏற்ற முதலீடுஅவசர கால முதலீட்டிற்கான தொகையை தீர்மானித்து, அதை உருவாக்கி கொண்ட பின், இரு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ஒன்று, எக்காரணம் கொண்டும், அத்தொகையை வேறு தேவைக்காக எடுத்து செலவிடக் கூடாது என்பதில், கவனமாக இருக்க வேண்டும்.
இரண்டாவது, இந்த நிதியை பொருத்தமான வழிகளில் முதலீடு செய்வதும் அவசியம். அவசர கால நிதி என்பது, எதிர்பாரா சூழலுக்காக எடுத்து வைப்பதாகும். அத்தகைய ஒரு சூழல் வராமலே போகலாம். எனவே, அந்த நிதியை முதலீடு செய்து வைத்திருந்தால், அதன் மீதான பலனை பெறலாம். அதோடு தேவையில்லாமல், அந்த நிதியில் கை வைப்பதையும் தவிர்க்கலாம். அவசர கால நிதியை முதலீடு செய்யும் போது, கவனமாக இருக்க வேண்டும். அதிக, ‘ரிஸ்க்’ தரும் முதலீடுகளை நாடக் கூடாது. அவசர தேவை ஏற்படும் போது, பணத்தை உடனடியாக எடுக்கக் கூடிய சாத்தியம் இருக்க வேண்டும்.
எனவே, இத்தகைய முதலீடு வாய்ப்புகளையே நாட வேண்டும். இதில், முதலீட்டின் மீதான பலனை விட, உடனடியாக எடுக்கும் தன்மையே முக்கியம்.சேமிப்பு கணக்குவழக்கமாக, பலரும், அவசர தேவைக்கான தொகையை, வங்கி சேமிப்பு கணக்கில் வைத்திருப்பது வழக்கம். கையில் ரொக்கமாக வைத்திருப்பதை விட, இது ஏற்றது தான். ஆனால், சேமிப்பு கணக்கிற்கு கிடைக்கும் வட்டி குறைவு என்பதை, மனதில் கொள்ள வேண்டும். எனவே, சேமிப்பு கணக்கை விட, குறுகிய கால முதலீடு வாய்ப்புகளான, ‘லிக்விட் பண்டு அல்லது ஷார்ட் டெர்ம் பண்டு’ போன்ற, மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம் என, கருதப்படுகிறது.
லிக்விட் பண்டுகள், மிகவும் ஏற்றதாக நிதி ஆலோசகர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. சேமிப்பு கணக்கை விட அதிக பலன் தருவதோடு, தேவை எனில், 24 மணி நேரத்தில், இவற்றை பணமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
சேமிப்பு கணக்கில் வைக்கப்படும் தொகையில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை, வரி கிடையாது என்பதையும் பரிசீலிக்க வேண்டும். ஐந்து ஆண்டு கால வைப்பு நிதிகளிலும், முதலீடு செய்யலாம். தேவை எனில், வைப்பு நிதியை உடைத்து எடுத்துக் கொள்ளலாம். அதனால், பெரிய அளவில் இழப்பு இருக்காது. சேமிப்பு கணக்குடன் இணைந்த வைப்பு நிதி வசதியையும் நாடலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|