பதிவு செய்த நாள்
24 நவ2017
23:55
புதுடில்லி : இந்தியாவில், வெளிநாட்டு சட்ட நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்கிறது. 2018 ஜனவரியில், இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் கூட, மத்திய அரசு எதிர்பார்ப்பது போல, அதிகளவில், வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள், இந்தியாவில் கிளைகளை துவக்காது என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, ஆர்.எஸ்.ஜி., கன்சல்ட்டிங் நிறுவனம், இந்திய சட்ட நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை, இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடுகிறது. பெரும்பாலான வழக்கறிஞர்கள், இந்த பட்டியலின் அடிப்படையில், சட்ட நிறுவனங்களை தேர்வு செய்கின்றனர். இந்த வகையில், விரைவில் வெளியாக உள்ள, ஆர்.எஸ்.ஜி., கன்சல்ட்டிங் நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் சாராம்சம், தற்போது வெளியாகி உள்ளது.
அதன் விபரம்: இந்தியாவில், ஜி.எஸ்.டி., நிறுவன திவால் சட்டம், ரியல் எஸ்டேட் சட்டம் போன்ற சீர்திருத்த திட்டங்களின் அறிமுகம் காரணமாக, சட்ட சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும். அதன்படி, இந்திய சட்ட சேவைகள் சந்தை மதிப்பு, 130 கோடி டாலர், அதாவது, 8,400 கோடி ரூபாயாக உயர வாய்ப்பு உள்ளது.இதில், 50 சதவீதத்திற்கு சற்று அதிகமான அளவிற்கே, இந்திய சட்ட ஆலோசனை நிறுவனங்களின் பங்கு இருக்கும். எஞ்சிய பங்கை, இந்தியாவில் கிளைகளை திறக்க முடியாமல், அதே சமயம், சட்ட ஆலோசனைகளை மட்டும் வழங்கி வரும், வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் கைப்பற்றும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சட்ட சேவைகளின் மூலம், இத்தகைய பங்களிப்பை, வெளிநாட்டு சட்ட ஆலோசனை நிறுவனங்கள் பெறும். பொது சட்ட சேவைக்காக, இந்திய வழக்கறிஞர்கள் பெறுவதை விட, வெளிநாட்டு வழக்கறிஞர்கள் அதிக கட்டணம் பெறுகின்றனர். சட்ட சேவையில் ஈடுபடும் முன்னணி நிறுவனங்கள், ஒரு வழக்கில் வாதாட, ஒரு மூத்த வழக்கறிஞருக்கு, ஒரு மணி நேரத்திற்கு, சராசரியாக, 992 டாலர் வழங்குகின்றன. இது, இளநிலை வழக்கறிஞருக்கு, 615 டாலர் என்ற அளவில் உள்ளது. இதில், சில நிறுவனங்கள் தள்ளுபடி வழங்கினாலும், முன்னணியில் உள்ள, ஆறு நிறுவனங்களில், ஏ.இசட்.பி., மற்றும் டிரைலீகல் நிறுவனங்கள், தள்ளுபடி வழங்குவதில்லை. ஒருசில நிறுவனங்கள், ஒரு வழக்கை முடிக்க, குறிப்பிட்ட தொகையை வசூலிக்கின்றன.
இத்தகைய சூழலில், இந்தியாவில், வெளிநாட்டு சட்ட சேவை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கினாலும், இங்கு கிளைகள் அமைத்து, லாபமீட்ட சாத்தியமில்லை. எனவே, இந்தியாவில் களமிறங்க ஆர்வமில்லை என, ஆய்வில் பங்கேற்ற, வெளிநாடுகளைச் சேர்ந்த, 75 சதவீத சட்ட சேவை நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச வழக்குகள்:
இந்திய வழக்கறிஞர்கள் சட்டத்தில், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் சட்ட சேவை வழங்க முடியாது. சர்வதேச வழக்குகள் தொடர்பாக, வெளிநாட்டு வழக்கறிஞர்கள் சட்ட ஆலோசனை வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|