பதிவு செய்த நாள்
12 டிச2017
01:00
புதுடில்லி:‘உணவுப் பொருட்கள் விலை உயர்வால், நவம்பரில், சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள, 4 சதவீத இலக்கை விஞ்சியிருக்கும்’ என, ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இந்நிறுவனம், பொருளாதார வல்லுனர்கள், 30 பேரிடம், சில்லரை விலை பணவீக்கம் குறித்து, கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன்படி, நவம்பரில், சில்லரை விலை பணவீக்கம், 0.62 சதவீதம் உயர்ந்து, 4.20 சதவீதமாக அதிகரித்திருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, அக்டோபரில், 3.58 சதவீதமாக இருந்தது.கடந்த, 13 மாதங்களில் இல்லாத அளவிற்கு, நவம்பரில், சில்லரை விலை பணவீக்கம் அதிகரிக்க, பல பகுதிகளில் பெய்த கன மழை, முக்கிய காரணம் எனலாம்.கன மழையால், பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகும் பொருட்கள் பாதிக்கப்பட்டன. இதனால், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை அதிகரித்துள்ளது.
இத்துடன், அரசு ஊழியர்களின் வீட்டுப் படி உயர்வு, கச்சா எண்ணெய் விலையேற்றம், ஜி.எஸ்.டி.,யால் உயர்ந்துள்ள மூலப்பொருட்கள் விலை ஆகியவற்றின் தாக்கம் காரணமாகவும், சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்திருக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.கடந்த, 2015 ஜனவரி முதல், நடப்பாண்டு ஆகஸ்ட் வரை, வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி, 2 சதவீதம் குறைக்கப்பட்டு, தற்போது, 6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்க இலக்கை, 4 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. 2018 மார்ச் வரையிலான ஆறு மாதங்களில், சில்லரை விலை பணவீக்கம், 4.3 மற்றும் 4.7 சதவீதத்திற்குள் இருக்கும் என, ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.இதனால், 6ம் தேதி, ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதிக் கொள்கையில், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ‘நவம்பரில், மொத்த விலை பணவீக்கம், 3.78 சதவீதமாக இருக்கும்’ என, ‘ராய்ட்டர்ஸ்’ மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, அக்டோபரில், 3.59 சதவீதமாக இருந்தது.
வட்டி விகிதம் குறையாது:கன மழையால், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட, வேளாண் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியும், பலவீனமாகவே உள்ளது. செப்டம்பரில் காணப்பட்ட, 3.8 சதவீத வளர்ச்சி, அக்டோபரில், 3 சதவீதமாக குறைந்துள்ளது. தேவை குறைவு, ஜி.எஸ்.டி., போன்றவற்றால் ஏற்பட்ட தாக்கம் இது. எனினும், ஒருசில துறைகள், மந்த நிலையில் இருந்து விடுபட்டு வருகின்றன. இருந்தும், அனைத்து துறைகளிலும் இத்தகைய நிலை காணப்படவில்லை. தனியார் முதலீடுகளும், மிகக் குறைவாகவே உள்ளன. இத்தகைய சூழலில், ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை குறைப்பது சாத்தியமில்லை.ரூபா ரீகி நிட்ஸ்யூர் பொருளாதார குழு தலைவர், ‘லார்சன் அண்டு டூப்ரோ’
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|