பதிவு செய்த நாள்
18 டிச2017
00:00
நீண்ட கால இலக்குகளுக்கு திட்டமிடுவது போலவே, குறுகிய கால இலக்குகளுக்கும் திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். அதற்கேற்ற முதலீட்டு வாய்ப்புகள் பற்றி ஒரு பார்வை:
நிதி திட்டமிடலில், இலக்குகள் முக்கியம் என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு விதமான இலக்கிற்கும் ஏற்ற முதலீட்டு வாய்ப்பை தேர்வு செய்வதும் அவசியம். ஓய்வு காலம் மற்றும் பிள்ளைகள் கல்வி போன்ற, நீண்ட கால நிதி இலக்குகளை மனதில் கொள்ளும் போது, அதற்கேற்ற முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்ய வேண்டும். ஒருவரின் ரிஸ்க் தன்மை, நிதி சூழல் போன்றவற்றுக்கு ஏற்ப, பி.எப்., – பி.பி.எப்., – என்.பி.எஸ்., போன்றவற்றை, ஓய்வு கால திட்டமிடலுக்கு நாடலாம். இதே போல, பிள்ளைகள் கல்விக்கும், தொடர் வைப்பு நிதி, மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் போன்றவற்றை நாடலாம்.
வைப்பு நிதிகள்:
சொந்த வாகனம் வாங்குவது, விடுமுறை பயணம் செல்வது என, குறுகிய கால இலக்குகள் பலவிதமாக அமையலாம். இவற்றுக்கும், சரியான முறையில் திட்டமிட்டு, முதலீடு செய்வது அவசியமாகும். குறுகிய கால முதலீட்டிற்கு ஏற்ற பல நிதி வாய்ப்புகள் இருக்கின்றன. இவற்றில் பரவலாக அறியப்பட்ட வாய்ப்பாக, வைப்பு நிதிகள் அமைகின்றன. பாதுகாப்பை விரும்பும் மற்றும் ரிஸ்க் குறைவாக இருக்க வேண்டும் என, நினைக்கும் முதலீட்டாளர்களின் முதல் தேர்வாகவும் இது அமைகிறது. 1 – 3 ஆண்டு இலக்கு எனில், வைப்பு நிதியை நாடலாம்.
சேமிப்பு கணக்கை விட, இவை அதிக வட்டியை அளிக்கின்றன. ஆனால், வைப்பு நிதியில் முதலீட்டு காலம் குறைவு எனில், அதற்கேற்ப வட்டியும் குறைவாக இருக்கும். வழக்கமான வங்கிகளை விட, ‘ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’ எனப்படும், புதிய வகை சிறிய வங்கிகள், வைப்பு நிதிக்கு அதிக வட்டி அளிக்கின்றன. வைப்பு நிதிகள் போலவே, தொடர் வைப்பு நிதிகளும், குறுகிய கால இலக்குகளுக்கு ஏற்றவை. எவ்வளவு தொகை தேவை எனக் கணக்கிட்டு, அதற்கேற்ப மாதாமாதம், குறிப்பிட்ட தொகையை தொடர் வைப்பு நிதி கணக்கில் செலுத்தி வர வேண்டும்.
‘லிக்விட் பண்ட்’:
‘நெட் பேங்கிங்’ வசதி இருந்தால், இதை எளிதாக துவங்கி விடலாம். ஒரே நேரத்தில் தொகையை முதலீடு செய்ய முடியாதவர்கள், இந்த வசதியை தேர்வு செய்யலாம். ஆறு மாதங்கள் முதல், 10 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன் தொகையை எடுத்தால், அதற்கான அபராதம் விதிக்கப்படும். மாதத் தவணை செலுத்த தாமதமானாலும் அபராதம் உண்டு. முதல் முறை சேமிப்பவர்கள் மற்றும் குறைந்த வரி பிரிவில் உள்ளவர்களுக்கு ஏற்றது.
மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் பரிட்சயம் உள்ளவர்கள், குறுகிய கால இலக்குகளுக்கு ஏற்ற நிதிகளை நாடலாம். மூன்று மாதங்களில் பணம் தேவையெனில், ‘லிக்விட் பண்ட்’ ரக மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் ஏற்றவையாக இருக்கும். 3 – 6 மாத காலத்தில் தேவைப்படக்கூடிய தொகை எனில், ‘அல்ட்ரா ஷார்ட் டெர்ம்’ நிதிகளில் முதலீடு செய்யலாம். இந்த வகையான கடன் சார் நிதிகளில், 36 மாதங்களுக்கு குறைவான முதலீடு எனில், வரி வரம்பிற்கு ஏற்ப வரி விதிப்பு பொருந்தும். நிதியை தேர்வு செய்யும் முன், நிதி ஆலோசகர் உதவியை நாடுவதும் ஏற்றதாக இருக்கும்.
நிறுவனங்கள் வழங்கும் வாய்ப்பான, கம்பெனிகள் டிபாசிட்டிலும் முதலீடு செய்யலாம். இவற்றுக்கான வட்டி, வைப்பு நிதி வட்டியை விட அதிகம் என்றாலும், ரிஸ்கும் அதிகம் என, நினைவில் கொள்ள வேண்டும். முதலீடு செய்யும் முன், நிறுவனத்திற்கான தரச்சான்றிதழை கவனிக்க வேண்டும். மேலும், ஒரு நிறுவனத்தில் அதிக பணத்தை முதலீடு செய்யாமல், ஒன்றுக்கு மேல் நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்யலாம். எதையும், நினைத்தவுடன் செலவு செய்யாமல், இலக்குகளை நிர்ணயித்து செயல்படுவது, அதற்கேற்ப சேமிக்கவும், முதலீடு செய்யவும் வழி செய்வதோடு, முதலீட்டின் மீதான பலனை பெறவும் உதவும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|