பதிவு செய்த நாள்
18 டிச2017
00:15
அமெரிக்க மத்திய வங்கி, அந்நாட்டில் நிலவும் வட்டி விகிதத்தை, சமீபத்தில் உயர்த்தி உள்ளது. எல்லாரும் எதிர்பார்த்தது தான் என்றாலும், அதன் பாதிப்பு சர்வதேச அளவில், குறிப்பாக, இந்திய சந்தையில் எப்படி இருக்கும்? முதலில், இதை பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா?
பொருளாதார முன்னேற்றம் :
கடந்த, 2008 பொருளாதார தேக்கத்துக்கு பின், அமெரிக்கா படிப்படியாக மீண்டு வருகிறது. அங்கே, வேலைவாய்ப்புகள் உயர்ந்துள்ளன; தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு ஆகியவை பெருகி உள்ளன. இந்நிலையில், 2015 முதல், அமெரிக்க மத்திய வங்கியான, பெடரல் ரிசர்வ், அந்நாட்டில் நிலவும் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. அவர்களுடைய பொருளாதாரம், வலுவடைந்து வருவதற்கான அத்தாட்சியே இது.
மேலும், 2015 டிச., முதல், நான்கு முறை, கால் சதவீத அளவுக்கு, வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டன. டிச., 13 அன்றும், மற்றொரு கால் சதவீதம் உயர்த்தப்படும் அறிவிப்பு வெளியானது. தற்சமயம், அங்கே வட்டி விகிதம், 1.5 சதவீத அளவுக்கு உள்ளது. அடுத்த ஆண்டு, இன்னும் மூன்று முறை வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என, எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
டொனால்டு டிரம்ப் ஆட்சி பொறுப்பேற்ற பின், அமெரிக்காவின் பொருளாதாரத்தை முன்னேற்றும் முனைப்பில் ஈடுபட்டு உள்ளதால், அடுத்த மூன்று ஆண்டுகளில், அவர்களுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி, 3 சதவீதத்தை எட்ட வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்சமயம் அது, 1.8 சதவீதமாக உள்ளது.
5 கவலைகள்:
அமெரிக்கா வளர்ந்தால் நல்லது தானே? நாம், ஏன் அதை பற்றி கவலைப்பட வேண்டும் என்கிறீர்களா? பின்வரும் ஐந்து காரணங்களுக்காகவே, கவலைப்பட வேண்டி இருக்கிறது.
1. இந்த ஆண்டு, அக்., மாதம் வரை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், 31 ஆயிரத்து, 399 கோடி ரூபாயை, இந்திய பங்குச் சந்தைகளிலும், 1.39 லட்சம் கோடி ரூபாயை, கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்திருக்கின்றனர். அமெரிக்காவில், போதுமான வருவாய் இல்லாததால் தான், முதலீட்டாளர்கள், நல்ல வளர்ச்சி தரும் இந்தியச் சந்தையில், முதலீடு செய்ய முன்வந்தனர். அமெரிக்காவிலேயே வளர்ச்சி சாத்தியம் எனும் போது, அவர்கள் தங்கள் முதலீடுகளை திரும்ப எடுத்துக் கொண்டு போவதற்கான வாய்ப்பு அதிகம்.
2. இதனால், இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்படலாம். அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு, சமீபகாலத்தில் வலுப்பெற்று வந்தது; அந்த நிலை மாறலாம். இதனால், அமெரிக்க கடன் பத்திரங்கள் லாபகரமானதாகலாம். இது, நம் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தும்.
3. சர்வதேச சந்தைகளில், அமெரிக்க டாலர்களை கொடுத்தே, நாம் கச்சா எண்ணெயை வாங்குகிறோம். இன்னும் சொல்லப் போனால், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில், 82.4 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதற்காக, இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், நாம் செய்திருக்கும் செலவு, 2.4 லட்சம் கோடி ரூபாய். இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் செய்யப்பட்ட செலவை விட, 17 சதவீதம் அதிகம்.
சர்வதேச எண்ணெய் சந்தைகளில், தொடர்ச்சியாக கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால், நம் செலவுகள் கூடப்போவது நிச்சயம். இதில், டாலரின் மதிப்பும் உயரும் போது, டபுள் இடி நிச்சயம்.
4. அமெரிக்காவிலேயே வருவாய் பெருகும் போது, அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய கடன் பத்திரங்களில் செய்து வரும் முதலீடுகளும் குறைந்து போகும். அவர்கள் கையிலிருக்கும் பத்திரங்களை விற்கத் துவங்கினால், கடன் சந்தை சரியும். இந்தியாவின், பத்தாண்டு கடன் பத்திரங்கள் ஈட்டும் வருவாய் படிப்படியாக குறையும்.
5. தங்கள் வளர்ச்சிக்கு தேவையான நிதியை, தனியார் பெரு நிறுவனங்களும், வங்கிகளும், வெளிநாடுகளில் இருந்து தான் கடன்களாக பெறுகின்றன. இதற்கு, ‘அன்னிய வணிகக் கடன்’ (எக்ஸ்டர்னல் கமர்ஷியல் பாரோயிங்) என, பெயர். டாலரின் மதிப்பு உயருமென்பதால், அன்னிய வணிகக் கடன்களின் செலவு அதிகமாகும். அது, அவர்களுடைய நிகர லாபத்தை பதம் பார்த்து விடும்.
ருசி கண்ட பூனைகள்:
இதெல்லாம் சரி தான். நாம் உண்மையிலேயே, இதற்காக கவலைப்பட வேண்டுமா? வேண்டாம் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. ஏனெனில், என்ன தான் அமெரிக்கச் சந்தை லாபம் ஈட்டும் வகையில் முன்னேறுவதாக இருந்தாலும், இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்கள் ஈட்டித் தரும் வருவாயோடு ஒப்பிடும் போது, அது மிகப்பெரியது அல்ல. அதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், அவ்வளவு சீக்கிரத்தில் இந்தியச் சந்தைகளிலிருந்து வெளியேறிவிட மாட்டார்கள். அவர்கள், வளர்ச்சியின் உண்மையான ருசியை கண்ட பூனைகள்.
மேலும், படிப்படியாகவே வட்டி விகிதங்கள் உயரப் போகின்றன. அதனால், உடனடியாக பணத்தை எடுத்துச் செல்லும் அபாயமும் இல்லை. இந்திய பங்குச் சந்தைகளில், இந்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் முதலீடு தொடர்ந்து பெருகி வருவதால், அன்னிய முதலீட்டாளர்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கும் நிலைமை, படிப்படியாக மாறி வருகிறது.டிச., 13 அன்று, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பு வெளியானது.
ஆனால், இந்திய பங்குச் சந்தைகளில், எந்த விதமான பாதிப்பும் இல்லை. சொல்லப் போனால், கடந்த வாரம், இரண்டு பங்குச் சந்தைகளும் லாபத்துடனேயே முடிந்துள்ளன.நாம், நம்மை மட்டுமே சார்ந்திருக்கத் துவங்கி இருக்கிறோம் என்பதற்கான நிரூபணம் இது. குஜராத் இரண்டாம் கட்ட தேர்தலும், அதன்பின் வெளியான கருத்துக் கணிப்புகளும், பங்குச் சந்தையின் உற்சாகத்தை உயர்த்தவே செய்தது. அமெரிக்க வட்டி விகித உயர்வு, இங்கே கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்பட்டது மாதிரி தெரியவில்லை.
இவை, தற்காலிக உற்சாகங்கள். உண்மையான பிரச்னை, பட்டியலிடப்பட்ட பெரு நிறுவனங்களின், முழு ஆண்டு அறிக்கைகள் வெளி வரும் போதும், இந்தியாவின், நிதிநிலை அறிக்கை வெளி வரும் போதும் தெரிய வரும் என, எச்சரிக்கை செய்கிறவர்களும் இருக்கின்றனர். இந்த எச்சரிக்கை தேவை தான். நாம் டாலரின் தள்ளாட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல், அதையும் மீறி வளர வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளதையே, இந்த எச்சரிக்கை உணர்த்துகிறது.
– ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|