பதிவு செய்த நாள்
19 டிச2017
00:32
புதுடில்லி : ‘‘நியாயமான பிரீமியத்தில் மருத்துவக் காப்பீடு வழங்க, காப்பீட்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்,’’ என, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான – ‘இரிடா’ தலைவர், டி.எஸ். விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர், டில்லியில், ‘பிக்கி’ அமைப்பின், மருத்துவக் காப்பீட்டு மாநாட்டில் கூறியதாவது: மருத்துவக் காப்பீட்டு பாலிசிகள், எளிமையான விதிமுறைகளுடன், நியாயமான பிரீமியம் கொண்டவையாக இருக்க வேண்டும். இதன் மூலம், அதிகமானோர், மருத்துவக் காப்பீடு வசதி பெற முடியும். மருத்துவக் காப்பீட்டு துறையில், குறைந்தபட்சம், மருத்துவமனைகள் கடைபிடிக்கும் விதிமுறைகள், காப்பீட்டு தாரர், குறைந்த செலவில், சிறந்த சிகிச்சை பெறும் வகையில் இருக்க வேண்டும்.
ஒரு நகரில் உள்ள மருத்துவமனை, கடைபிடிக்கும் மருத்துவக் காப்பீட்டு நெறிமுறைகள், அதே நகரில் உள்ள வேறொரு மருத்துவமனையுடன், ஒப்பிடக்கூடிய வகையில், ஓரளவாவது இயைந்திருக்க வேண்டும். சமூகத்தில் உள்ள அனைவருக்கும், மருத்துவக் காப்பீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பது, அரசின் கொள்கை. அதற்கேற்ப எடுக்கப்படும் நடவடிக்கைகள், மருத்துவக் காப்பீட்டு துறையின் சீரிய வளர்ச்சிக்கு உதவும்.
மேற்கத்திய நாடுகள் மற்றும் இதர, ‘பிரிக்ஸ்’ நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில், ஆரோக்கிய பராமரிப்பிற்கான செலவு, 60 சதவீதம் அதிகமாக உள்ளது. மருத்துவக் காப்பீட்டு துறையில், சிறப்பான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. மருத்துவக் காப்பீட்டு துறை வளர்ச்சிக்கு, ‘இரிடா’ அமைப்பும், மத்திய அரசும் இணைந்து, பல்வேறு செயல் திட்டங்களை வகுத்து வருகின்றன. இந்த வகையில், மாநில அரசுகளுடன் மேற்கொண்டு வரும், ‘ராஷ்டிரிய சுவஸ்தய பீமா யோஜனா’ திட்டம், மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|