பதிவு செய்த நாள்
04 ஜன2018
00:13
புதுடில்லி:‘‘சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் அறிமுகமாகி உள்ள, ‘வாட்’ வரியால், அங்கு பணியாற்றும் பெரும்பாலான இந்தியர்கள் பாதிக்கப்படுவர்,’’ என, அந்நாடுகளுக்கான இந்தியாவின் முன்னாள் துாதர், தல்மிஸ் அகமது தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது:சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில், இந்த ஆண்டு முதல், சரக்கு மற்றும் சேவைகளுக்கு, ‘வாட்’ வரி அமலுக்கு வந்துள்ளது.இதனால், அந்நாடுகளில், வாழ்க்கைச் செலவினம் உயர்ந்து விட்டது. வீட்டு வாடகை, மருத்துவ சேவை, பள்ளி கட்டணம், போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு, மக்கள் அதிகம் செலவிட நேர்ந்துள்ளது.
இரு ஆண்டுகளாகவே, கச்சா எண்ணெய் விலை குறைவின் தாக்கத்தால், வேலைவாய்ப்பும், ஊதிய விகிதமும் குறைந்துள்ளது. இதனால், அந்நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், தாயகத்திற்கு அனுப்பும் தொகையும் குறைந்து வருகிறது.வளைகுடா நாடுகளில் இருந்து, இந்தியர்கள், ஆண்டுக்கு, 3,500 கோடி டாலர், தாயகத்திற்கு அனுப்பி வந்த நிலையில், இது, 3,000 கோடி டாலராக குறைந்திருக்கும் என, தெரிகிறது.
தற்போது, புதிய வரிச்சுமையும் சேர்ந்து உள்ளதால், அந்நாடுகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் இந்தியர்களால், தாயகத்திற்கு பணம் அனுப்ப முடியாத நிலை ஏற்படும்.அதே சமயம், வசிப்பிட வசதி வழங்கும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, இந்த பாதிப்பு குறைவாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
30 லட்சம்
சவுதி அரேபியாவில், 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். துபாய், அஜ்மன், அபுதாபி உள்ளிட்ட, ஏழு குட்டி நாடுகளை உள்ளடக்கிய, ஐக்கிய அரபு எமிரேட்சில், 28 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|