பதிவு செய்த நாள்
17 ஜன2018
00:53
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி, 2017 டிசம்பரில் அதிகரித்துள்ளது. ஏற்றுமதியை விஞ்சி இறக்குமதி உயர்ந்து உள்ளதால், மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, வர்த்தக பற்றாக்குறை உயர்ந்துள்ளது.
ஏற்றுமதி வளர்ச்சிக்கு, பொறியியல் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் பெரும் பங்கு வகித்துள்ளன. டிசம்பரில், ஏற்றுமதி, 12.36 சதவீதம் உயர்ந்து, 2,703 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதே மாதத்தில், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் வரத்து அதிகரித்ததால், இறக்குமதி, 21.12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,191 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 41 சதவீதம் ஏற்றம் பெற்று, 1,488 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, மூன்று ஆண்டுகளில் காணாத உயர்வாகும்.
பொறியியல் சாதனங்கள்:
கடந்த, 2017 அக்டோபரில் ஏற்பட்ட, 1.1 சதவீத சரிவை தவிர்த்து, 2016 ஆக., முதல், நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோலிய பொருட்கள், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 25 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதே சமயம், ஆடைகள் ஏற்றுமதி, 8 சதவீதம் குறைந்து, 133 கோடி டாலராக சரிவடைந்து உள்ளது. ஏற்றுமதியில், 30 முக்கிய பிரிவுகளில், பொறியியல் சாதனங்கள், பெட்ரோலிய பொருட்கள், தங்கம் மற்றும் நவரத்தினங்கள், மருந்துகள், ரசாயனங்கள் உள்ளிட்ட, 21 பிரிவுகள் வளர்ச்சி கண்டுள்ளன.
கச்சா எண்ணெய்:
தங்கம் இறக்குமதி, 71.5 சதவீதம் உயர்ந்து, 339 கோடி டாலராக ஏற்றம் கண்டுள்ளது. இது, 2016 டிசம்பரில், 197 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி, 35 சதவீதம் உயர்ந்து, 766 கோடி டாலரில் இருந்து, 1,034 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்., – டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், ஏற்றுமதி, 12.05 சதவீதம் வளர்ச்சி கண்டு, 22,351 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 19,946 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில், இறக்குமதி, 21.76 சதவீதம் உயர்ந்து, 27,789 கோடி டாலரில் இருந்து, 33,836 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இலக்கு எட்டப்படும்:
நடப்பு, 2017 -– 18ம் நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி டாலர் ஏற்றுமதிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், ஏப்., – டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், 22,351 கோடி டாலர் அளவிற்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. அதனால், ஏற்றுமதி இலக்கு சுலபமாக எட்டப்படும். தங்கம் மற்றும் நவரத்தின கற்கள் இறக்குமதி அதிகரித்து உள்ளதால், வரும் மாதங்களில், அவற்றின் ஏற்றுமதி உயர வாய்ப்புள்ளது.
எனினும், வர்த்தகப் பற்றாக்குறை உயர்ந்திருப்பதை எச்சரிக்கை மணியாக கருதி, இறக்குமதி பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அவை, உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுகிறதா அல்லது அச்சுறுத்தலாக உள்ளதா என்பதை கவனிப்பது அவசியம்.
-கணேஷ் குமார் குப்தா ,தலைவர், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|