பதிவு செய்த நாள்
21 ஜன2018
04:37
நவி மும்பை, ஜன. 21-''அடுத்த ஐந்து ஆண்டுகளில், 'டிஜிட்டல்' கட்டமைப்பு வசதிகள், மூன்று மடங்கு உயர்ந்தால், அதற்கு நிகராக, நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி காணும்,'' என, மத்திய தொலை தொடர்பு துறை செயலர், அருணா சுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.நவி மும்பையில், 'ஆர்ஜியோ' நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள, ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில், 'இந்திய டிஜிட்டல் மாநாடு' நடைபெற்றது.இதில், அருணா சுந்தரராஜன் பேசியதாவது:இது, 'டிஜிட்டல்' எனப்படும், மின்னணு யுகம். மின்னணு தொழில்நுட்பத்தை மையமாக வைத்து, அனைத்து வகை பயன்பாடுகளும் மாறி வருகின்றன. அதற்கேற்ப, மின்னணு தொழில்நுட்பத்திற்கான, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது கட்டாயமாகி உள்ளது.இத்தகைய வசதிகளை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், மூன்று மடங்கு பெருக்க வேண்டும். இதை இலக்காக வைத்து செயல்பட்டால், இதே காலத்தில், நாட்டின் பொருளாதாரமும், மூன்று மடங்கு உயர்ந்து, 750 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும்.தனியார் துறை முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், மின்னணு தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில், அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அத்துடன், தகவல் பாதுகாப்பு மற்றும் தகவல் திருட்டை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.இது குறித்த விபரங்கள், இந்தாண்டு வெளியாகும் தொலை தொடர்பு துறையின், புதிய கொள்கையில் இடம் பெறும்.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பரந்த மனப்பான்மையுடன், 'ஓபன் சோர்ஸ்' முறையை பின்பற்ற வேண்டும். இத்தகைய முறையில் தான், 'ஆதார்' உள்ளிட்ட திட்டங்களின் செயலாக்கம் நடக்கிறது.பலருக்கு, மின்னணு தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த தெரியவில்லை. இன்னும் சிலர், இவ்வசதியை முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளனர்.இத்தகையோர் தான், மின்னணு தொழில்நுட்ப துறையின், தற்போதைய வளர்ச்சி வாய்ப்பிற்கு வித்திடுபவர்களாக உள்ளனர். மின்னணு தொழில்நுட்ப வசதிகளை, அனைத்து மக்களும் பயன்படுத்தும் பட்சத்தில், சர்வதேச மின்னணு தொழில்நுட்ப பயன்பாட்டின் தலைமை பீடம் என்ற சிறப்பை, இந்தியா பெறும்.அதற்கேற்ப, ஐந்தாம் தலைமுறைக்கான, '5ஜி' தொலை தொடர்பு ஒருங்கிணைப்பு வசதிகளை உருவாக்குவதில், மத்தியஅரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.தொலை தொடர்பு சேவை துறையில், புதிதாக நுழைந்துள்ள, ஆர்ஜியோ நிறுவனம், புதுமையான திட்டங்கள், சேவைகள் போன்றவற்றின் மூலம், மின்னணு தொழில்நுட்ப வசதியை, நன்கு பயன்படுத்திக் கொண்டதுடன்,ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
பிரகாசமான எதிர்காலம்இந்தியாவில், 'விர்ச்சுவல் ரியலிட்டி' எனப்படும், மெய்நிகர் காட்சி வடிவம் போன்ற, வளரும் தொழில்நுட்பங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இப்பிரிவில், 50 சதவீத வளர்ச்சி காண, ஆர்ஜியோ திட்டமிட்டு உள்ளது. தற்போது, 260 கோடி டாலராக உள்ள, 'கிளவுட் கம்ப்யூட்டிங்' எனப்படும், மேகக் கணினி தொழில்நுட்ப சந்தை மதிப்பு, 400 கோடி டாலராக உயரும்.ஆகாஷ் அம்பானி தலைவர், செயல் திட்டப் பிரிவு, 'ஆர்ஜியோ'
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|