பதிவு செய்த நாள்
13 பிப்2018
02:31
மும்பை:மத்திய அரசின் சீர்திருத்த திட்டங்களால், ரியல் எஸ்டேட் துறை, மந்த நிலையில் இருந்து மீண்டு, எழுச்சி பெற்று வருவது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.ரியல் எஸ்டேட் துறை குறித்து, ‘99 ஏக்கர்ஸ் டாட் காம்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.,அமலாக்கம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் போன்ற, மத்திய அரசின் சீர்திருத்தங்களால், பெரும்பாலான முக்கிய நகரங்களில், வீடு, பிளாட் ஆகியவற்றின் விலை, குறைந்தோ அல்லது அதிகரிக்காமலோ உள்ளது.
சில நகரங்களில், சொத்து விற்பனை அதிகரித்துள்ளது.புனே, மும்பை, பெங்களூரில், வீடு, பிளாட் ஆகியவற்றின் விலை குறைந்து உள்ளதால், அவற்றின் விற்பனை உயர்ந்துள்ளது.தலைநகர், டில்லி பிராந்தியத்தில், கூர்கான், நொய்டா மற்றும் மும்பையின், நவி மும்பை பகுதிகளில், வீடு, பிளாட் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது. அதிகளவில், ரியல் எஸ்டேட் சொத்துகள் உள்ள பிரபலமான இப்பகுதிகளில், விலை உயர்வும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் அமலுக்கு வந்தது தான் முக்கிய காரணம்.இந்த சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், அசையா சொத்துகள் வாங்கு வோருக்கு, முழுமையான பாதுகாப்பை அளிக்கிறது. அத்துடன், கட்டுமான நிறுவனங்களின் செயல்பாடுகளில், ஒழுங்குத்தன்மை ஏற்படுத்தவும் துணை புரிந்துள்ளது.அதனால், ரியல் எஸ்டேட் துறையில், ஆர்வம் காட்டாமல் இருந்தோரும், நம்பிக்கையுடன் முதலீடு செய்ய துவங்கி உள்ளனர்.வீடு, பிளாட் வாங்குவோரிடம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
இதன் காரணமாக, 2017ல், முதல் அரையாண்டில், சரிந்திருந்த ரியல் எஸ்டேட் துறை, பின்பாதியில் நிமிர்ந்துள்ளது.இந்தாண்டு, மிகவும் ஆடம்பரமான, பெருந்தொகையுள்ள குடியிருப்புகளுக்கு, வரவேற்பு குறைவாக இருக்கும் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதனால் இப்பிரிவில், விலை மேலும் குறையக்கூடும். இதர பிரிவுகளில், மார்ச் வரை, மிகப்பெரிய அளவில் விலை குறைய வாய்ப்பில்லை.ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், கட்டுமான நிலையில் உள்ள குடியிருப்புகளின் பதிவு மெதுவாக நடைபெறுவதால், சாதாரண குடியிருப்புகள் விற்பனைக்கு வருவது, சற்று மந்தமாக உள்ளது.புதிய கட்டுமான திட்டங்களும், அவற்றின் பதிவும் அதிகரித்து உள்ளதால், வரும் மாதங்களில், இப்பிரிவில் விற்பனைக்கு வரும் குடியிருப்புகள் அதிகரிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், ரியல் எஸ்டேட் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஜி.எஸ்.டி., நடைமுறையிலும் தெளிவு மேம்பட்டு உள்ளது. அதனால், பட்ஜெட் குடியிருப்புகள் உட்பட, அனைத்து பிரிவுகளில் விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நரசிம்ம ஜெயகுமார் தலைமை வணிக அதிகாரி, ‘99 ஏக்கர்ஸ் டாட் காம்’
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|