பதிவு செய்த நாள்
19 பிப்2018
02:32
பஞ்சாப் நேஷனல் வங்கியில், 11 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் நிதி மோசடி என்ற தகவல் வெளியானதும், இந்திய வங்கிகள் மீது நம்பிக்கை வைத்திருந்த கோடானுகோடி மத்தியமர்கள் துவண்டு போய்விட்டனர். அதுவும், 2011 முதல், நிதி மோசடி நடந்து வந்தது என, அந்த வங்கியின் தலைவர் சொன்னபோது, அதிர்ச்சியே ஏற்பட்டது. எவ்வளவு தான் மனதைத் தேற்றிக் கொண்டாலும், கேள்விகளும், சந்தேகங்களும் எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன.
ஒரு தவறு நடந்து, அதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு, பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானால் தான், அனைவரும் விழித்துக் கொள்கின்றனர்; தவறு நடந்த விதத்தை ஆராய்கின்றனர். ஒரு வகையில் இதெல்லாம், ‘போஸ்ட்மார்ட்டம்’ தான். பாதிப்பு பாதிப்பு தான்; இழப்பு இழப்பு தான்.
முன்னெச்சரிக்கை:
குறைந்தபட்சம், இந்தத் தவறிலிருந்து என்ன புரிந்து கொள்கிறோம் என்பதே முக்கியம். முதலில், இத்தகைய மோசடியை முன்னெச்சரிக்கையோடு தடுத்திருக்க முடியாதா? மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் காப்பாற்றி இருக்க முடியாதா?
முடியும்... பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற தவறையே எடுத்துக் கொள்ளுங்களேன். நிரவ் மோடியைச் சார்ந்த நிறுவனங்கள், தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளாக, பி.என்.பி.,யில் இருந்து கடன் பொறுப்பேற்புக் கடிதங்கள் (லெட்டர் ஆப் அண்டர்டேக்கிங்) பெற்றுள்ளன. அதற்கு அடமானமாகவோ, மார்ஜின் பணமாகவோ, எந்தச் சொத்தும் கோரப்படவில்லை அல்லது இணைக்கப்படவில்லை.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நீங்கள் ஒரு வீடோ, காரோ வாங்கினால், முதல் வேலையாக, அந்தச் சொத்துகளை அடமானமாக பெற்றுக்கொண்டு தானே, பணம் கொடுக்கின்றனர். ஆனால், அந்த நடைமுறை இங்கே ஏன் பின்பற்றப்படவில்லை?
கடன் பொறுப்பேற்புக் கடிதங்கள் வழங்கப்பட்டது, அந்த வங்கியின் மேல்மட்ட அதிகாரிகளுக்கே தெரியாதாம். மும்பை கிளை ஒன்றில் பணியாற்றிய, இரு பணியாளர் மட்டுமே இதில் தவறு செய்தவர்களாம். இக்கடிதங்களின் விபரங்கள், அவர்களுடைய கோர் பேங்கிங் சிஸ்டத்தில் தெரிவிக்கப்படவில்லை. அதனால், அவ்வங்கியின் உள் தணிக்கையிலோ, வெளித் தணிக்கையிலோ இத்தகைய மோசடி நடந்திருப்பதே வெளியே வரவில்லையாம். இதெல்லாம் எப்படி சாத்தியம்? அப்படியென்றால், உண்மையில் நடைபெற்றது உள்தணிக்கையா என்ற சந்தேகமே எழுகிறது.
அந்தக் கடிதங்களை நிரவ் மோடி குழுமத்துக்கு வழங்கிய நபர், தொடர்ச்சியாக பல ஆண்டுகள், அதே வங்கி கிளையில் பணியாற்றியுள்ளார். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய இடமாறுதல், அவர் விஷயத்தில் கடைபிடிக்கப்படவில்லை. ஏன்?
அவர், ஒவ்வொரு முறை கடன் பொறுப்பேற்புக் கடிதம் கொடுத்தபோதும், அவருக்கு மேலே இருந்த அதிகாரிகளுக்கோ, நிர்வாகத்துக்கோ, அதன் மீது சந்தேகமே எழவில்லையாம். ஒன்றல்ல இரண்டல்ல, 150க்கும் மேற்பட்ட பொறுப்புக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச வங்கி கிளைகளுக்கு இடையேயுள்ள, ‘ஸ்விப்ட்’ செய்தி தெரிவிக்கும் முறையில், வெளிநாட்டு வங்கிகளுக்கு, அந்த நபர், கடன் பொறுப்பேற்புக் கடிதங்கள் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதை வேறு யாருமே பார்க்கவில்லை; மறு ஆய்வு செய்யவில்லை; கேள்வி கேட்கவில்லை. அது, பி.என்.பி.,யின் தலைமை அலுவலகத்துக்கே தெரியவில்லை. அதுவும் பற்பல கோடிகளில் வழங்கப்பட்ட கடன் பொறுப்பேற்புக் கடிதங்கள் அவை என்பது ஞாபகமிருக்கட்டும்.அந்தக் கடிதங்களில் பொறுப்பேற்புக் காலம் அதிகபட்சம், 90 முதல், -180 நாட்கள் தான் இருக்க முடியும். ஆனால், அது ஓராண்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும், அது அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டதாக செய்தி.
பொறுப்பேற்புக் கடிதம் என்பது வங்கி வழங்கும் உத்தரவாதம். அது வழங்கப்பட்டபோது தெரியவில்லை என்றாலும், நீட்டிக்கப்பட்ட போதாவது மத்திய அலுவலகத்துக்கு உறைத்திருக்க வேண்டாமா?வெளிநாட்டில் இருக்கும் இந்திய வங்கிகளிடம், பி.என்.பி.,யின் கடன் பொறுப்பேற்புக் கடிதங்கள் கொடுக்கப்பட்டு, நிரவ் மோடி நிறுவனங்கள் கடன் பெற்றுள்ளன. அந்த வங்கி கிளைகளுக்கு துளிகூட சந்தேகம் எழவில்லையா என்ன? இது ஒரிஜினல் தானா என்று ஏன் ஒரு முறை கூட அவை சரிபார்க்க துணியவில்லை?
இதில் ஒவ்வொரு இடத்திலும் இடைவெளி, ஓட்டை. அதைச் சிறப்பாக பயன்படுத்தி, இந்திய மக்களின் வியர்வைத் துளியால் உருவான சேமிப்பில், சகட்டுமேனிக்கு விளையாடியுள்ளன பெரு நிறுவனங்களும், வங்கிகளும்.
இன்னும் இரண்டு செய்திகள்:
இதோடு சேர்த்துப் பாக்கும்படி செய்திருக்கின்றன, இன்னும் இரண்டு செய்திகள். ஒன்று, தென் ஆப்ரிக்காவில், 21 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பாங்க் ஆப் பரோடா, தன் செயல்பாடுகளை விலக்கிக்கொண்டு, அந்த நாட்டில் இருந்தே விலகி விட முடிவு செய்திருக்கிறது. அதற்காக அந்நாட்டு வங்கித் துறையிடம் அனுமதியும் கோரியுள்ளது.அந்நாட்டின் அதிபராக இருந்த, ஜேக்கப் ஜுமாவோடு நெருக்கமாக இருந்தனர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குப்தா சகோதரர்கள். தென் ஆப்ரிக்காவில், குப்தா சகோதரர்கள் பல தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடைய வங்கியாகச் செயல்பட்டது பாங்க் ஆப் பரோடா.
அதிபர் தொடர்ச்சியாக செய்த தவறுகளுக்கு, குப்தா சகோதரர்கள் தோள் கொடுத்ததாக குற்றச்சாட்டு; அதற்குத் துணை நின்றதாம் வங்கி. விளைவு, இன்று அதிபர் பதவி விலகிவிட, பாங்க் ஆப் பரோடாவால் அங்கே தொடர முடியவில்லை. நாட்டை விட்டே வெளியேற முடிவு செய்துள்ளது. இன்னொரு செய்தி இன்னும் முக்கியமானது. கடந்த ஐந்து நிதியாண்டுகளில், இந்திய வங்கிகளில் நடைபெற்ற, ‘கடன் மோசடி’களின் மொத்த எண்ணிக்கை மட்டும், 8,670. இதில் சம்பந்தப்பட்டுள்ள தொகை, 61 ஆயிரத்து, 260 கோடி ரூபாய். இதில், பி.என்.பி.,யின் சமீபத்திய மோசடி தொகை சேரவில்லை என்பது கூடுதல் தகவல்.
வருமுன் காப்பது:
இன்றைக்கு, ரிசர்வ் வங்கி விழித்து, இதர வங்கிகளில் ஏதேனும் தவறுகள் நடந்திருக்கின்றனவா என்று ஆராயச் சொல்லியிருக்கிறது. ஒவ்வொரு வங்கியும் நிரவ் மோடியின் குழுமத்துக்கு ஏதேனும் கடன் கொடுத்திருக்கின்றனவா என்பதைத் தெரிவிக்கவும் சொல்லியிருக்கிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.இவையெல்லாம் வந்தபின் மேற்கொள்ளப்படும் தீயணைப்பு நடவடிக்கைகள். வங்கிகள் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையால் செய்யப்படுவது.
ஆனால், நமக்குத் தேவை முன்னெச்சரிக்கை, எதிர்பாராததை எதிர்பார்ப்பது, நடப்பதற்கு முன் தடுப்பது, வருமுன் காப்பது. பி.என்.பி., விஷயத்தில் இவை நடைபெறவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.
-ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|