பதிவு செய்த நாள்
25 பிப்2018
04:34
புதுடில்லி : வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மீதான, முதலீட்டாளர்களின் புகார்களை விசாரிக்க, மத்தியஸ்த அமைப்பு ஏற்படுத்தப்படுவதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.தற்போது, வங்கி வாடிக்கையாளர் புகாரை விசாரிக்க, மத்தியஸ்த அமைப்பு உள்ளது. ஆனால், வங்கி சாரா நிதி நிறுவனம் மீது புகார் தெரிவிக்க, மத்தியஸ்த அமைப்பு இல்லை.இதன் காரணமாக, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் சேவை குறைபாடுகளுக்கு தீர்வு காண முடியாமல், வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர்.அதனால், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மீதான புகார்களை விசாரிக்க, மத்தியஸ்த அமைப்பை, ரிசர்வ் வங்கி ஏற்படுத்த உள்ளது. இது குறித்து, இவ்வங்கி வெளியிட்டு உள்ள அறிக்கை:ரிசர்வ் வங்கியில், 11,500 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றில், 168 நிறுவனங்களுக்கு மட்டும், ‘டிபாசிட்’ திரட்டுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.இத்தகைய நிறுவனங்கள் மீது, வட்டித் தொகையை சரிவர வழங்காதது; முதிர்ச்சிக்கு பின்னும் டிபாசிட்டை திரும்ப தராமல் இழுத்தடிப்பது; ஒருசில சேவைகளுக்கு, முறையற்ற வகையில் அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற புகார்கள் உள்ளன.மேலும், வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில், பிராந்திய மொழியில், நிதிச் சேவை சார்ந்த தகவல்களை தெரிவிப்பதில்லை என்ற புகாரும் உள்ளது.இது போன்ற புகார்களை விசாரிக்க, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு என, பிரத்தேயக மத்தியஸ்த மையம் அமைக்கப்படுகிறது.வாடிக்கையாளர், வங்கி சாரா நிதி நிறுவனத்தின் சேவையில் குறைபாடு இருந்தால், முதலில், அந்நிறுவனத்தில் புகார் அளிக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் புகாருக்கு தீர்வு காணாவிட்டால், வாடிக்கையாளர், மத்தியஸ்த மையத்தில் புகார் அளிக்கலாம்.வாடிக்கையாளர்கள், இச்சேவையை இலவசமாக பெறலாம். சமரச தீர்வில் உடன்பாடு ஏற்படாதபட்சத்தில், மேல் முறையீடு செய்வதற்கான வசதியும் ஏற்படுத்தப் படும்.முதற்கட்டமாக, டிபாசிட் திரட்டும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மட்டும், இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதையடுத்து, 1 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்து மதிப்புடன், குறிப்பிட்ட வாடிக்கையாளர் எண்ணிக்கைக்கு மேல் உள்ள நிறுவனங்களும் இணைக்கப்படும்.அடிப்படை கட்டமைப்பு துறை சார்ந்த மற்றும் திவால் நடவடிக்கைக்கு உள்ளான, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, இத்திட்டம் பொருந்தாது. சென்னை, கோல்கட்டா, மும்பை மற்றும் டில்லியில், மத்தியஸ்த மையங்கள் செயல்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எதற்கு புகார் அளிக்கலாம்? டிபாசிட் மீது வட்டி வழங்க தவறினால் அல்லது தேவையின்றி தாமதப்படுத்தினால் ரிசர்வ் வங்கி விதிகளுக்கு மாறான வட்டி விகிதம் நிர்ணயித்தால் டிபாசிட்டை திரும்பத் தருவதை தாமதப்படுத்தினால் வாடிக்கையாளரின் முன்தேதியிட்ட காசோலையை, வங்கியில் செலுத்தாமல் அல்லது செலுத்த தாமதித்தால் ஆண்டு வட்டி உள்ளிட்ட விபரங்களுடன், ஒப்புதல் அளித்த கடன் தொகையை, எழுத்துப்பூர்வமாக வழங்கத் தவறினால் ஒப்புதல் அளித்த அல்லது மறுக்கப்பட்ட கடன் மற்றும் விதிமுறைகளை, கடன் பெறுவோர் புரிந்து கொள்ளும் வகையில், தாய்மொழியில் வழங்காமல் இருந்தால் ஒப்புதல் அளித்த கடன் தொடர்பான விதிமுறைகளில் செய்யும் மாற்றங்களை, வாடிக்கையாளரின் தாய்மொழி அல்லது அவருக்கு புரியும் மொழியில் வழங்க தவறினால் கடன் தொகையை திரும்ப செலுத்திய பின்னும், உத்தரவாத ஆவணங்களை திரும்ப வழங்காமல் இருந்தால் முன்னறிவிப்பின்றி கடன்தாரர் அல்லது வாடிக்கையாளருக்கு கட்டண மாற்றங்களை அறிவிக்க தவறினால் கடனை திரும்பச் செலுத்த தவறுவோரின் பிணைச் சொத்துகளை கையகப்படுத்துவது; அதற்கான நடைமுறை; கடன்தாரருக்கு வழங்கப்படும் கால அவகாசம்; கடனை திரும்பச் செலுத்த அளிக்கப்படும் இறுதி வாய்ப்பு உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும், கடன்ஒப்பந்தத்தில் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்றால், புகார் அளிக்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|