பதிவு செய்த நாள்
05 மார்2018
00:41
அமெரிக்காவில் இறக்குமதியாகும் உருக்குக்கு, 25 சதவீதமும், அலுமினியத்துக்கு, 10 சதவீதமும் சுங்க வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர், டொனால்ட் டிரம்ப் அறிவித்தவுடன், பல நாடுகளின் பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி. கூடவே, ‘வர்த்தக போர்கள் நல்லவை; அவற்றில் வெற்றி பெறுவதும் எளிது’ என, பேசியிருக்கிறார். இதற்கு, பல முக்கிய நாடுகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன.
டிரம்புக்கு என்ன ஆச்சு?
டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் அதிபர் ஆனது முதல், ‘அமெரிக்காவே முதலில்’ என்ற வர்த்தக கொள்கையை கடைபிடித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, உள்நாட்டில் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்ற வேண்டும்; தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என, முயற்சி செய்து வருகிறார். இதற்குத் தடையாக இருக்கக்கூடிய விஷயங்களை உடைத்து வருகிறார்.பின்னணிஅமெரிக்க உருக்கு மற்றும் அலுமினியத் துறையிலும் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. 2000ம் ஆண்டில், 112 மில்லியன் டன்னாக இருந்த உருக்கு உற்பத்தி, 2016ல், 86.5 மில்லியன் டன்னாகக் குறைந்து விட்டது. 1.35 லட்சம் பேர் வேலை செய்த இடத்தில் இப்போது, 83 ஆயிரம் பேர் மட்டுமே வேலை செய்கின்றனர்.
இதேபோல், அலுமினிய உற்பத்தியிலும் பெரும் சரிவு.முக்கிய காரணம், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியத்தின் விலை, மிகவும் குறைவு. அந்த இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தினால், உள்நாட்டுத் தொழில்கள் லாபகரமாகும் என்ற எண்ணத்தில், டிரம்ப், வரி விதிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.
யாருக்கு பாதிப்பு?
முதல் பாதிப்பு, அமெரிக்காவுக்கு அருகிலேயே இருக்கும் கனடாவுக்குத் தான். தன் உருக்கு உற்பத்தியில், 90 சதவீதத்தையும், அலுமினிய உற்பத்தியில், 41 சதவீதத்தையும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது, கனடா. இறக்குமதிக்கு வரி என்றவுடன், கனடா அலறுகிறது.இரண்டாவது இடத்தில் இருப்பது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள். அதற்கு அடுத்த நிலையில் தான், தென் கொரியா, மெக்சிகோ, பிரேசில், ஜப்பான், தைவான், சீனா, ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன.
ஆரம்பத்தில் இருந்தே, சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கையும் சீனாவுக்கு எதிரானது என, கருதப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. சீனாவின் உருக்கு உற்பத்தியில், 50 சதவீதத்திற்கு மேல், அவர்களுடைய தேவைக்கே பயன்படுகிறது.
ஏன் இந்த நடவடிக்கை?
ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் கூட, அமெரிக்க மோட்டார் சைக்கிளான, ‘ஹார்லி டேவிட்சன்’ பைக் மீது, 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இப்போது, அது பாதியாகக் குறைக்கப்பட்டு இருந்தாலும், இன்னமும் இதனால், அமெரிக்க அரசுக்கு எந்தவிதமான பலனும் இல்லை.
ஆனால், அமெரிக்காவில் இறக்குமதியாகும் பிற நாட்டுப் பொருட்களுக்கு இறக்குமதி வரியே இல்லை அல்லது சிறிய அளவில் இருக்கிறது. இத்தகைய வர்த்தக ஏற்றத்தாழ்வு, அவரைக் கடுப்படித்துவிட்டன. அதன் விளைவு தான், உருக்கு மற்றும் அலுமினியத்தின் மீதான வரி.
இதனால் என்ன பலன்?
இனிமேல் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் உருக்கு, அலுமினியத்தையே அமெரிக்க நிறுவனங்கள் வாங்க வேண்டியிருக்கும். அதனால், அங்கே உற்பத்தி பெருகும், வேலைவாய்ப்புகள் பெருகும் என்பது எதிர்பார்ப்பு.ஆனால், இப்படி நடந்ததேஇல்லை என்பது தான் அமெரிக்க சரித்திரம் நமக்கு உணர்த்துகிறது. ரொம்ப துாரம் போக வேண்டாம்.
கடந்த, 2002ம் ஆண்டு, அப்போது அதிபராக இருந்த, ஜார்ஜ் புஷ், இறக்குமதி செய்யப்பட்ட உருக்கு மீது வரி விதித்தார். உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் அப்போதும் காரணம். இதனால், உற்பத்தி சற்றே உயர்ந்தது என்னவோ உண்மை. ஆனால், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மிக அதிகம்.விலை அதிகமாக இருந்த காரணத்தால், பல நிறுவனங்கள், அமெரிக்க உருக்கை வாங்க மறுத்தன. விளைவு, மொத்த தேவையே சரிந்து போனது; அதனால், வேலைவாய்ப்புகளும் குறைந்து போயின. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வேலைகள் பறிபோயின. வேறு வழியில்லாமல், இந்த வரி, 2003ம் ஆண்டு இறுதியில் திரும்பப் பெறப்பட்டது.
அமெரிக்க டயர் நிறுவனங்களைக் காப்பாற்ற, 2009ல், அப்போதைய அதிபர், பராக் ஒபாமா, இறக்குமதி செய்யப்படும் சீன டயர்கள் மீது வரி விதித்தார். வழக்கம் போல், கொஞ்சம் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்ற முடிந்தது. ஆனால், வழக்கம் போல், விலை அதிகம் என்பதால், உற்பத்தியே சரிந்து போனது. காப்பாற்றப்பட்ட வேலைகளை விட, மொத்தத்தில் இழந்த வேலைகளே அதிகமானது. வேறு வழியில்லாமல், இந்த வரியும் பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
அமெரிக்கா, முற்றிலும் வெளிநாட்டு உற்பத்தி பொருட்களைப் பயன்படுத்துவதால், அங்கே விலைகள் சற்று மலிவாக இருக்கின்றன.அமெரிக்க உருக்கையும், அலுமினியத்தையும் பயன்படுத்தத் துவங்கினால், அங்கே விற்கும் குளிர்பானங்கள் முதல், கார்கள் வரை அனைத்தின் விலையும் உயர்ந்துவிடக் கூடும். தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பான நடவடிக்கை இது என, அமெரிக்க பொருளாதார வல்லுனர்களே எச்சரிக்கின்றனர்.
எதிர்ப்பலை
அமெரிக்காவுக்குள் நடப்பது ஒருபக்கம் இருக்கட்டும். சர்வதேச அளவில் இத்தகைய, ‘தற்காப்பு நடவடிக்கைகள்’ ஏற்படுத்தும் தொடர் விளைவுகள் தான் முக்கியமானவை. சர்வதேச நிதியமும், உலக வர்த்தக அமைப்பும், இதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி எச்சரித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்கிறது. கனடா அதிபரோ, இது அநியாயம், ஏற்க முடியாது என மிரட்டுகிறார்.
பல பங்குச் சந்தைகள்
உடனடியாக பெரும் சரிவைக் கண்டன. உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி நிறுவன பங்குகள் அடி வாங்கியுள்ளன. இவையெல்லாம் இன்னும் சில நாட்களில் சரியாகிவிடக்கூடும்.ஆனால், அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை தான், அனைத்து நாடுகளையும் கவலை கொள்ள வைத்துள்ளது. ஒவ்வொரு நாடும், ‘தற்காப்பு நடவடிக்கை’க்குள் இறங்கினால், அப்புறம் எப்படி சுதந்திரமான பொருளாதாரமும், வளர்ச்சியும் ஏற்படும்; ஒவ்வொரு நாடும் பதிலடி கொடுக்கத் துவங்கினால், சுமுக உறவுகள் பாதிக்கப்படாதா?
வர்த்தகம் மோதலால் வளர்வதில்லை; அது, இணக்கத்தின் மீது கட்டமைக்கப்படுவது. இதை, அமெரிக்க அதிபர் டிரம்ப் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|