பதிவு செய்த நாள்
12 மார்2018
00:43
வரி சேமிப்பு தொடர்பான முதலீட்டை மேற்கொள்வதை கடைசி நேரத்திற்கு தள்ளிப்போடுவது, தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கலாம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது தொடர்பான வரி சேமிப்பு ஆவணங்களை சரி பார்த்து, திரட்டி வைப்பதற்கான நேரம் இது. ஆனால் பலரும், வரி சேமிப்பு தொடர்பான முதலீட்டையும் கடைசி நேரத்தில் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இத்தகைய பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என, நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர். நிதியாண்டின் துவக்கத்திலேயே வரி சேமிப்பை திட்டமிட்டு, அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும் என்கின்றனர்.துவக்கத்திலேயே திட்டமிடலை மேற்கொள்ளும் போது, சரியான முடிவுகளை மேற்கொள்ளலாம் என்பதோடு, போதிய நிதியும் கைவசம் இருக்கும் வாய்ப்புள்ளது. மேலும், முதலீட்டின் பலனை துவக்கத்தில் இருந்தே பெறலாம்.
சிறந்த தேர்வுகள்
வரி சேமிப்பின் பலனை பெற, பி.எப்., – பி.பி.எப்., மியூச்சுவல் பண்ட், யூலிப்கள் என பலவிதமான முதலீடுகளை நாடலாம். ஆரம்பத்திலேயே மேற்கொள்ளும் போது, இவற்றில் இருந்து பொருத்தமானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், கடைசி நேர அவசரத்தில் மேற்கொள்ளும் போது, தேவைக்கு அதிகமான காப்பீடு திட்டங்கள் அல்லது மியூச்சுவல் பண்ட் திட்டங்களை வைத்து இருக்கும் தேவை ஏற்படலாம்.
பொதுவாக காப்பீடு திட்டங்களை முதலீடு நோக்கில் அணுகாமல், அவை தரும் வாழ்க்கை பாதுகாப்பிற்காக அணுகுவதே பொருத்தமாக இருக்கும். ஆனால், வரி சேமிப்பை மனதில் கொண்டு காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்யும் போது, ஊதியத்தின் கணிசமான பகுதி பிரீமியம் செலுத்துவதற்காக செலவிடப்படும் நிலை ஏற்படலாம். இது போன்ற தவறுகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.
இதே போல, சரியாக திட்டமிடாமல் வரி சேமிப்பிற்காக என்று மியூச்சுவல் பண்ட் திட்டங்களை வாங்கி குவிப்பதையும் தவிர்த்து, நிதி இலக்கிற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும்.அதே போல, நாம் பலவித தேவைக்காக கடன் வசதியை நாடுகிறோம். வீட்டுக் கடன், வாகன கடன், கல்விக் கடன், தனிநபர் கடன் என, பலவிதமான கடன்களை பெறும் நிலை இருக்கலாம். வீட்டுக் கடனுக்கான வட்டி மீது வரிச் சலுகை கோர முடியும்.
ஆனால், மற்ற கடன்களை சரியாக நிர்வகிக்காமல் விட்டால், அது சேமிப்பை பாதிக்கலாம். அவசரத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக சேமிப்பில் கைவைப்பது சரியான உத்தியாக இருக்காது.
நீண்ட கால நோக்கு
அதே போல, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்து உள்ளவர்கள், டிவிடெண்ட் வாய்ப்பு இருந்தால் அதை பயன்படுத்திக்கொள்ள முற்படுகின்றனர். ஆனால், டிவிடெண்ட் தொகை முதலீட்டுடன் சேர்ந்து இருப்பதே நீண்ட கால நோக்கில் பலன் அளிக்கும். அதிலும் தற்போது, டிவிடெண்ட் வருமானத்திற்கு வரி பொருந்தும் என்பதால், இந்த வாய்ப்பை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
மேலும், வரி சேமிப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட, இ.எல்.எஸ்.எஸ்., திட்டத்தின், ‘லாக் இன்’ காலம் முடிவடைந்து விட்டாலும், அவற்றை உடனே விலக்கிக் கொள்ள வேண்டும் என அவசியமில்லை. முதலீட்டை தொடர்வது நீண்ட கால நோக்கில் கூடுதல் பலன் அளிக்குமா என, பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும்.
வரி சேமிப்பு முதலீட்டில் கடைசி நேர தவறுகளை தவிர்ப்பதில் கவனமாக இருப்பதோடு, வரும் ஆண்டுகளில் முன்கூட்டியே திட்டமிடுவதே பொருத்தமாக இருக்கும் என்பதை உணர வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|