பதிவு செய்த நாள்
12 மார்2018
00:59
மார்ச், 15ம் தேதி, வரும் நிதியாண்டுக்கான தமிழகத்தின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது? புதிய திட்டங்கள் ஏதும் இருக்குமா? முன்னேற்றம் தென்படுகிறதா?
நிதி நிலை அறிக்கையில், இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு. ஒன்று வரவு; மற்றது செலவு. வரவுகளை உயர்த்துவதில் தொடர் முயற்சிகளும், செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் தளரா முனைப்பும் இருந்தால் தான், வீடு மட்டுமல்ல, நாடும் செழிக்கும்.
வரவுகள் எப்படி உள்ளன?
சாண் ஏறினால், முழம் சறுக்கும் நிலை தான். மூன்று முக்கியமான வருவாய் இனங்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்.எழுதவே கூச்சமாக இருந்தாலும், தமிழகத்தின் அட்சய பாத்திரம், ‘டாஸ்மாக்’ தான். கடந்த ஆண்டு தீபாவளிக்குப் பின், மது வகைகளின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டன.
அதேசமயம், 1,000 கடைகளை அரசாங்கமே மூடியது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒட்டி, நெடுஞ்சாலைகளுக்கு அருகே இருந்த, 3,000த்துக்கும் மேற்பட்ட கடைகளும் மூடப்பட்டன.இந்நிலையில், விலை உயர்வால், டாஸ்மாக்கின் மொத்த வருவாயான, 26 ஆயிரத்து, 995 கோடி ரூபாயோடு, இன்னும், 2,250 கோடி ரூபாய் சேரும் என்பது எதிர்பார்ப்பு.
மொத்த மது விற்பனையில் இருந்து, 6,248 கோடி ரூபாய் சுங்க வரியும், 20 ஆயிரத்து, 747 கோடி ரூபாய், ‘வாட்’ வரியும் தமிழக அரசுக்கு கிடைக்கும்.இரண்டாவது, பத்திரப்பதிவுத் துறை வருவாய். 2016 – -17ம் நிதியாண்டில், புதிய வீடுகளும், அடுக்ககங்களும் கட்டப்படுவது குறைந்ததால், முத்திரைத்தாள் வருவாய் குறைந்தது. தற்போது நிலைமை இன்னும் மோசம். சென்னையில் மட்டும் கட்டி முடிக்கப்பட்டு, விற்கப்படாமல் இருக்கும் குடியிருப்புகள், 20 சதவீதம் என்கிறது ஓர் ஆய்வு. இன்னும் இரண்டு பாதிப்புகளும் சேர்ந்துள்ளன.
வரைமுறைப் படுத்தப்படாத மனைகளைப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டால், பத்திரப்பதிவு எண்ணிக்கையே சரிந்து போனது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டமும் (‘ரெரா’), ஜி.எஸ்.டி.,யும் கூட விற்பனைச் சரிவுக்கு முக்கிய காரணங்கள் ஆயின.
மூன்றாவது, பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் விற்பனை வரி. சென்ற ஆண்டு, தமிழக அரசு, இப்பொருட்களின் மீதான விற்பனை வரியை உயர்த்தியது. இதனால், வருவாய் சற்று உயர்ந்திருக்கலாம் என்பது எதிர்பார்ப்பு.
செலவினங்கள் என்னென்ன?
இலவசங்கள், மானியங்கள் ஆகியவற்றை விட்டுவிடுவோம். அது யானை பசி. அரசு ஊழியர்களுக்கான சம்பள செலவை மட்டும் எடுத்துக் கொள்வோம். வருவாய் செலவினத்தோடு ஒப்பிடும் போது, சம்பளத்துக்காக மட்டும் செலவிடப்படுவது, 27.76 சதவீதம்.ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தியதால், தமிழக அரசுக்கு கூடுதல் செலவு, 6,480 கோடி ரூபாய். ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பலன்களுக்கான தொகையும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, மிக அதிகம். வருவாய் செலவினத்தில், ஓய்வூதியம் மட்டும், 12.8 சதவீதம்.
தற்போது, பேருந்து ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புதிய சம்பள உயர்வால் ஏற்பட்டுள்ள செலவினத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்தச் செலவில், 65 ஆயிரம் போக்குவரத்து துறை ஓய்வூதியதாரர்களின் பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், விடுமுறைக்கான சம்பளங்கள் ஆகியவை சேர்க்கப்படவில்லை என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.மாநகராட்சி பணியாளர்களின் சம்பள உயர்வுக்கும் நிதி ஒதுக்கி வைக்க வேண்டும்.
மேலே சொன்னது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். நாம் நம் நிதி நிர்வாகத்தில் எப்படிச் சறுக்குகிறோம் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு இதுவே போதுமானது.இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தான், கவலை கொள்ள வைக்கிறது. மாநில மொத்த உற்பத்தியில், 3 சதவீதத்துக்கு மேல், நிதிப் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்பது, 14வது நிதிக் குழுவின் பரிந்துரை. ஆனால், சென்ற நிதியாண்டிலேயே, நம் மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை, அதைத் தாண்டிப் போய்விட்டது.
நம்மைப் போலவே பெரிய மாநிலமான, குஜராத்தின் நிதிப் பற்றாக்குறை, 2.5 சதவீதமாக இருக்க, மஹாராஷ்டிராவோ, 2.71 சதவீதத்தில் இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை, 3 சதவீதத்துக்கு மேல் இருக்கப்போவது உறுதி.வாங்கிய கடன்களுக்கான வட்டித் தொகையும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். சென்ற நிதியாண்டிலேயே, இது, மொத்த மாநில உற்பத்தியில், 13.8 சதவீதமாக உயர்ந்துவிட்டது. கர்நாடகத்தில் இது, 9.7 சதவீதம் தான்.
இன்னொரு கணக்கு, வருவாய் பற்றாக்குறை அல்லது உபரி. பெறப்படும் வருவாயில் இருந்து செய்யப்படும் செலவினங்களைக் கழிக்கும்போது கிடைக்கும் விகிதமே வருவாய் பற்றாக்குறை. அது கடந்த ஆண்டே, 1.2 சதவீதத்தைத் தொட்டுவிட்டது. அதாவது வரவு எட்டணா, செலவு பத்தணா.
பற்றாக்குறைகளுக்கு முக்கிய காரணம், மாநிலத்தில் செய்யப்படும் வளர்ச்சிப் பணிகளே என்று நியாயம் சொல்லப்படலாம். ஆனால், இன்னொரு விகிதத்தைப் பார்ப்போமா? அதற்குப் பெயர் மூலதனச் செலவுகள்.
மொத்த மாநில உற்பத்தியில், 2.5 சதவீதத் தொகையே மூலதனச் செலவுகளுக்கு பயன்பட்டுள்ளது. தெலுங்கானா, 5.1 சதவீத தொகையைச் செலவிட, கர்நாடகா, 3.2 சதவீத அளவுக்கு மூலதனச் செலவுகளுக்குப் பயன்படுத்தியுள்ளது.
கடன்காரர்கள்
மாநிலத்தின் நிதி நிலைமை கைமீறிப் போயிருப்பதற்கு முக்கிய காரணம், இலவசங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம். சென்ற ஆண்டே, தாதுமணல் விற்பனை, கிரானைட் விற்பனை ஆகியவற்றை அரசாங்கமே கையில் எடுத்துக்கொள்ளும், அதன் மூலம் வருவாய் பெருகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஒரே ஒரு நிம்மதி, ஜி.எஸ்.டி., அமல்படுத்தியதில் இழப்பு ஏற்பட்டால், அதை மத்திய அரசு, 100 சதவீதம் ஈடுசெய்யும் என்பது தான். அந்த வகையில், தமிழகத்துக்கு கொஞ்சம் நிதி கிடைக்கும்.இந்நிலையில், இந்த ஆண்டு, பள்ளிக்கல்வித் துறை, தொழில் துறை, சுகாதாரம் ஆகியவற்றில் புதிய திட்டங்கள் அறிவிப்பும், நிதி ஒதுக்கீடும் செய்யப்படலாம். ஆனால், இவை மேலும் பற்றாக்குறையை அதிகப்படுத்தவே செய்யும்.
நம் தோளில் சுமையை உயர்த்தவே செய்யும். நம் சுயசார்புத் தன்மையை குலைக்கவே செய்யும். நம் தலைமுறையை மட்டுமல்ல, அடுத்த தலைமுறையையும் கடன்காரர் கள் ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.
ஆர்.வெங்கடேஷ் பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|