பதிவு செய்த நாள்
20 மார்2018
01:59
புதுடில்லி : பெட்ரோல், டீசல் விற்பனையில், தனியார் நிறுவனங்கள் இரு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளன.
இது குறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பார்லி.,யில் கூறியதாவது: பொதுத் துறையில், ஐ.ஓ.சி., – பி.பி.சி., – எச்.பி.சி., ஆகிய மூன்று நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இதில், 2002, மார்ச்சில், தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டு, அடுத்த மாதம், எரிபொருள் விலை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.
இதையடுத்து, ரிலையன்ஸ், எஸ்ஸார் மற்றும் ஷெல் நிறுவனங்கள், எரிபொருள் சில்லரை விற்பனையில் களமிறங்கின. துவக்கத்தில் ஆர்வமுடன் பெட்ரோல் நிலையங்களை திறந்தன. ஆனால், 2004 – -05ம் நிதியாண்டில், மத்திய அரசு, மீண்டும் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதனால், மானிய விலையில் எரிபொருள் விற்பனை செய்த, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களை சமாளிக்க முடியாமல், தனியார் நிறுவனங்கள் திணறின. அவற்றின் வர்த்தகம் குறைந்தது.
இந்நிலையில், 2010, ஜூனில், பெட்ரோல்; 2014, அக்டோபரில், டீசல் ஆகியவற்றின் மீதான விலை கட்டுப்பாடு முழுமையாக தளர்த்தப்பட்டது. இதன் விளைவாக, பெட்ரோல், டீசல் விற்பனையில், தனியார் நிறுவனங்களின் பங்கு, 2015 -– 16ல், முறையே, 3.5 மற்றும், 3.1 சதவீதமாக உயர்ந்து, மறு நிதியாண்டில், 5.3 மற்றும், 6 சதவீதமாக அதிகரித்தது.
நடப்பு 2017- – 18ம் நிதியாண்டில், பெட்ரோல் மற்றும் டீசலில், தனியாரின் பங்கு, முறையே, 6.8 மற்றும், 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வகையில், 2015- – 16ல், 5.8 லட்சம் டன்னாக இருந்த டீசல் விற்பனை, தற்போது, இரு மடங்கு உயர்ந்து, 11.9 லட்சம் டன்னாக ஏற்றம் கண்டுள்ளது. இதே காலத்தில், பெட்ரோல் விற்பனையும், இரு மடங்கு அதிகரித்து, 7.67 லட்சம் டன்னில் இருந்து, 15.9 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், பொதுத் துறை நிறுவனங்களின் டீசல் விற்பனை, 6.17 கோடி டன்னில் இருந்து, 5.82 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. பெட்ரோல் விற்பனை, 2.09 கோடி டன்னில் இருந்து, 2.19 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|