பதிவு செய்த நாள்
23 மார்2018
02:40
புதுடில்லி : மத்திய அரசு, பட்டு வளர்ப்பு துறைக்கு என, ‘பட்டுத் தொழில் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த திட்டம்’ என்ற செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில், 2,161.88 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், நிறைவேற்றப்பட உள்ள இத்திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு, நேற்று ஒப்புதல் வழங்கியது.
இது குறித்து, மத்திய ஜவுளி துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறியதாவது: கடந்த, 2016- – 17ம் நிதியாண்டில், நாட்டின் பட்டு உற்பத்தி, 30 ஆயிரத்து, 348 டன்னாக இருந்தது. இதை, 2019 -– 20ல், 38 ஆயிரத்து, 500 டன்னாக உயர்த்த, பட்டுத் தொழில் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. பட்டுத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம், நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி, தரமான பட்டு வகைகளை உருவாக்கவும், பட்டு உற்பத்தியை பெருக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் இந்த திட்டம் உதவும். மேலும், சீனாவின் உயர்தர பட்டு இறக்குமதியை குறைத்து, அதற்கு நிகரான தரத்தில் உள்நாட்டில் பட்டு உற்பத்தி மேற்கொள்ள துணை புரியும்.
ஏற்கனவே, ‘ஹைபிரிட்’ தொழில்நுட்பம்; கோடை மற்றும் குளிர் காலம் என, இரு வகை தட்பவெப்ப நிலையில், பட்டுப் புழு வளர்ப்பதில், நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் மூலம், உயர் தரமான பட்டு உற்பத்தி செய்யப்படுவதால், 2013 -– 14ல், 7,000 டன்னாக இருந்த சீனப் பட்டு இறக்குமதி, 2016 -– 17ல், 3,700 டன்னாக குறைந்துள்ளது. இதே காலத்தில், உயர்தர பட்டு உற்பத்தி, 2,559 டன்னில் இருந்து, 5,266 டன்னாக உயர்ந்துள்ளது. இது, நடப்பு நிதியாண்டில், 6,200 டன்னாக அதிகரிக்கும்.
புதிய திட்டத்தின் மூலம், இந்த உற்பத்தியை, 2020ல், 8,500 டன்னாக அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர் வகை பட்டு உற்பத்தி, 2022ல், 12 ஆயிரம் டன்னை எட்டும்பட்சத்தில், அதன் இறக்குமதிக்கு, சீனாவை நாட வேண்டிய அவசியம் இருக்காது. தற்போது, 1 ஹெக்டரில், 100 கிலோ பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இது, பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் மூலம், 2019 – -20ல், 111 கிலோவாக அதிகரிக்கும். இத்துடன், தற்போது, 85 லட்சம் என்ற அளவில் உள்ள, பட்டு வளர்ப்பு துறையின் வேலைவாய்ப்பு, ஒரு கோடியாக உயரும்.
குறிப்பாக, பெண்களுக்கு வேலைவாய்ப்பையும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோரின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், இத்திட்டம் துணை புரியும். உயர்தர பட்டுப் புழு, பட்டுக் கூடு, கச்சா பட்டு ஆகியவற்றை உருவாக்க, பட்டுக் கூடு ஆய்வு மையங்கள் மற்றும் பட்டு பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்படும்.மொத்தத்தில், 2022ல், நாடு, பட்டு உற்பத்தியில் தன்னிறைவு பெற, இத்திட்டம் உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐந்து மாநிலங்கள்:
உலகில், பட்டு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. அடுத்துள்ள இந்தியாவில், 97 சதவீதம் கச்சா மல்பரி பட்டு வகைகள், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஜம்மு – காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய, ஐந்து மாநிலங்களில் உற்பத்தியாகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|