பதிவு செய்த நாள்
24 மார்2018
00:40
மக்களுக்கு குறைந்த செலவில் சேவை செய்யும் வகையில், உருவாக்கப்பட்ட மத்திய அரசின் டிஜிட்டல் பொது சேவை மையத்தில், தமிழகத்திற்கான திட்டங்களையும் அதிகளவு சேர்க்க வேண்டும் என, தொழில் முனைவர்கள் கோரியுள்ளனர்.
இந்திய அரசின், தேசிய மின்னணு திட்டத்தின் ஒரு பகுதியாக, பொது சேவை மையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் சேவைகள், இடைத்தரகர்கள் இன்றி மக்களுக்கு விரைவில் சென்று சேர, இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர்:
மத்திய அரசின் பலதரப்பட்ட சேவைகள் அனைத்தும், ஒரே இடத்தில் குறைந்த செலவில் மக்கள் பெறுவது இதன் சிறப்பம்சம். இத்திட்டம், பொது – தனியார் பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தொழில் முனைவோரை உருவாக்கி, அவர்கள் மூலம், சமுதாய மக்களின் தேவைகளின் அடிப்படையில் சேவை வழங்குவதே மத்திய அரசின் நோக்கம். இதற்கு, மத்திய அரசு கட்டணம் எதையும் பெறுவதில்லை.
மத்திய அரசின் பொது சேவை மையத்தை துவக்க, விண்ணப்பதாரர், அப்பகுதியைச் சேர்ந்த, 18 வயது நிரம்பிய, குறைந்த பட்ச கல்வித் தகுதியாக, 10வது படித்தவராக இருக்க வேண்டும். அடிப்படை ஆங்கிலம் மற்றும் கணினி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும். ‘ஆதார்’ கட்டாயம். இதற்கான இணையதளத்தில் பதிவு செய்தால், அதிகபட்சம் இரண்டு மாதத்தில் விண்ணப்பித்தவருக்கான அடையாள குறியீடு, ரகசிய பாஸ்வேர்ட் அனுப்பி வைக்கப்படும்.
பிரீமியம்:
அதன் மூலம், அந்தந்த பகுதி மக்களுக்கு, பான்கார்டு, பாஸ்போர்ட், தேசிய கல்வி இயக்கத்தின் சான்றிதழுடன் பட்டயப் பயிற்சி, வருமான வரி, எல்.ஐ.சி., உள்ளிட்ட, 17 காப்பீட்டு நிறுவனங்களில் பிரீமியம் செலுத்தும் வசதி ஆகியவற்றை பெறலாம். மேலும், ஓய்வூதியதாரர்களுக்கான உயிர்வாழ்வு சான்று, இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கான விண்ணப்பம், மத்திய அரசின் பிறப்பு – இறப்பு சான்று, ரயில் மற்றும் பஸ் டிக்கெட் போன்ற சேவைகளை மக்கள் பெறலாம். இம்மையம் மூலம், 2017 ஆக., வரை ஆதார் சேவைகள் அனைத்தும் இடம் பெற்றிருந்தன. பாதுகாப்பு கருதி, அதை மத்திய அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது.
இச்சேவையில், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்திற்கான சேவைகள் மட்டும் இடம் பெறவில்லை. இடம் பெற்றிருந்த ரேஷன் கார்டு அச்சடிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் அட்டை அச்சடிப்பு, வரி செலுத்துதல், மின் கட்டணம் உள்ளிட்ட பல சேவைகளை இதில் இணைக்க வேண்டும் என, தொழில் முனைவர்கள் கோரியுள்ளனர்.
முடக்கம்:
இது குறித்து அவர்கள் கூறியதாவது: ஆதார் உள்ளிட்ட பல சேவைகள், மத்திய அரசின் டிஜிட்டல் பொது சேவை மையத்தில் இடம் பெற்றிருந்தன. தற்போது அவை முடக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், தமிழகத்திற்கான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை அச்சிடுவது, ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட பல சேவைகளை இதில் வழங்கலாம். இதன் மூலம் குறைந்த செலவில் மக்களுக்கு எங்களாலும் சேவை வழங்க முடியும்.
சமீபத்தில் இத்தளத்தில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த காத்திருக்காமல் செல்லும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட, பாஸ்டேக் அட்டை வழங்கும் சேவை இணைக்கப்பட்டு உள்ளது. அதே போல் இன்சூரன்ஸ், ஜி.எஸ்.டி., பதிவு மற்றும் கணக்கு தாக்கல் செய்வது, ‘நீட்’ தேர்வுக்கான பதிவு உள்ளிட்ட பல சேவைகள் உள்ளன. இந்த சேவை குறித்து தமிழகத்தில் இன்னும் விழிப்புணர்வு ஏற்படும் பட்சத்தில், வேலையில்லா பட்டதாரிகள் பலர் பயனடைவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|