பதிவு செய்த நாள்
24 மார்2018
00:41
வாஷிங்டன் – பெய்ஜிங் : அமெரிக்கா – சீனா ஆகியவை, பரஸ்பரம் இறக்குமதி செய்யும் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரியை உயர்த்த முடிவு செய்துள்ளதால், இரு நாடுகள் இடையே வர்த்தகப் போர் மூண்டுள்ளது. இது, சர்வதேச வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சுங்கவரி:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாக்க, சமீபத்தில், உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு, முறையே, 25 மற்றும், 10 சதவீதம் வரி விதித்தார். இது, அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளை பாதித்துள்ளது. இந்நிலையில், டிரம்ப் நேற்று முன்தினம், அமெரிக்க வர்த்தக துறை பிரதிநிதி ராபர்ட் லைட்தைசரிடம், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 1,300 பொருட்களுக்கு, குறைந்தபட்சம், ௬,000 கோடி டாலர் ஆண்டு வருவாய் அளவிற்கு, சுங்க வரி விதிக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், மிக முக்கிய தொழில்நுட்பங்களில், சீன நிறுவனங்கள் மேற்கொள்ளும், முதலீடுகளுக்கு, 60 நாட்களுக்குள்ளாக, கட்டுப்பாடு விதிக்கவும் ஆணையிட்டார். அதுமட்டுமின்றி, தொழில்நுட்ப உரிமங்களில், அமெரிக்க நிறுவனங்களை, சீனா வஞ்சித்து வந்துள்ளதை, உலக வர்த்தக அமைப்பிடம், ஆதாரங்களுடன் புகார் தருமாறும், அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
இதை தொடர்ந்து, ‘சீனாவின் கொள்கைகளால், அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யும் விதமாக, குறிப்பிட்ட சீனப் பொருட்களின் இறக்குமதிக்கு, 25 சதவீதம் வரி விதிக்கப்படும்ன்’ என, அமெரிக்க வர்த்தக துறை அறிவித்தது.
பதிலடி:
இந்த வகையில், விமானம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், இயந்திரங்கள் உள்ளிட்ட துறைகள் சார்ந்த பொருட்கள் இறக்குமதிக்கு, அதிக வரி விதிக்கப்பட உள்ளது. டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு, நேற்று சீனா பதிலடி தந்தது. அமெரிக்காவின், பன்றி இறைச்சி, மறுசுழற்சி அலுமினியம், ஸ்டீல் பைப்புகள், பழங்கள், ‘வைன்’ உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதிக்கு, 300 கோடி டாலர் வரை வரி விதிக்க ஆலோசித்து வருவதாக, சீனா அறிவித்தது. அத்துடன், உலக வர்த்தக அமைப்பில், அமெரிக்கா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலிப்பதாக, சீனா கூறியுள்ளது.
அமெரிக்கா தொடுத்துள்ள வர்த்தகப் போரை கண்டு அஞ்சவில்லை என்றும், அதேசமயம், பரஸ்பர வர்த்தகம் தொடர்பான எந்த பிரச்னைக்கும் மோதல் போக்கை கைவிட்டு, பேச்சு மூலம் தீர்வு காண விரும்புவதாகவும், சீனா தெரிவித்துள்ளது. இதனிடையே, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு, உள்நாட்டிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. ‘வரி விதிப்பால், பொருட்கள் விலை உயர்ந்து, நுகர்வோர் பாதிக்கப்படுவர்’ என, ‘வால்மார்ட், அமேசான்’ நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இந்த வர்த்தக போரில், பெரும்பாலும் இறக்குமதி பொருட்களை சார்ந்துள்ள அமெரிக்கா தான் அதிகம் பாதிக்கப்படும் என, பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
சர்வதேச வர்த்தகத்தில், இந்தியாவின் பங்கு மிகக் குறைவு என்பதால், பெரிய பாதிப்பு எதுவும் நேராது. ஆனால், பங்குச் சந்தையில் இருந்து சர்வதேச முதலீட்டாளர்கள் வெளியேறுவது குறித்து தான் நாம் கவலைப்பட வேண்டும்.
-அஜய் ஸ்ரீவத்சவா,சி.இ.ஓ., டைமன்சியன்ஸ் கன்சல்டிங்
எந்த நாடும், சர்வதேச வர்த்தகம் தொடர்பாக, தன்னிச்சையாக முடிவெடுக்கும்பட்சத்தில், அதற்குரிய பதிலை இந்தியா அளிக்கும். உலக நாடுகள், தீவிர சவால்களை சந்தித்து வரும் இவ்வேளையில், நாம் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்
-சுரேஷ் பிரபு, மத்திய வர்த்தக அமைச்சர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|