பதிவு செய்த நாள்
04 ஏப்2018
00:47
'ஏர்செல்' வாடிக்கையாளர்கள், 'நம்பர் போர்ட்டபிளிட்டி' வசதி மூலம், பி.எஸ்.என்.எல்., சேவைக்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களால், பெரும்பாலான வாடிக்கையாளர்களை, பி.எஸ்.என்.எல்., இழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.ஏர்செல் நிறுவனத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, சில மாதங்களாக, அதன் வாடிக்கையாளர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர்.
வாடகை பாக்கி
இதற்கு காரணம், பிற நிறுவனங்களின் டவரை வாடகைக்கு எடுத்திருந்த ஏர்செல், பல கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்தது தான். இதையடுத்து, ஒரு கட்டத்தில், ஏர்செல் சேவைகள் முடக்கப்பட்டன.அடுத்தகட்டமாக, மார்ச், 15ம் தேதியுடன் ஏர்செல் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, நம்பர் போர்ட்டபிளிட்டி எனும் பெயர்வு வசதி மூலம், பிற நிறுவனங்களுக்கு தங்கள் நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளுமாறு, வாடிக்கையாளர்களுக்கு ஏர்செல் நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது.
அதற்கான பிரத்யேக போர்ட்டல் எண்களை பெற்று, அதன் மூலம் வேறு நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் மாறத் துவங்கினர்.இதில், ஏர்செல் அனுப்பிய போர்ட்டல் கோடு மூலம், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு மாறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவின.பி.எஸ்.என்.எல்., சேவையில் இணைய விரும்பும், வாடிக்கையாளர்களின் போர்ட்டல் கோடு தவறு என, அதை ஏர்செல் நிறுவனம் தொடர்ந்து நிராகரித்தது; பலமுறை முயற்சி செய்தும் பலன் ஏதும் இல்லை.
புகார்
ஆனால், 'ஏர்டெல், வோடபோன்' போன்ற வேறு நிறுவனங்களுக்கு மாற, வேண்டுகோள் விடுக்கப்பட்டால், அவர்களது விண்ணப்பம் உடனடியாக ஏற்கப்பட்டு சேவை வழங்கப்படுகிறது.இது தொடர்பாக, தொலை தொடர்பு ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர், சத்தியபாலன் கூறியதாவது:
ஏர்செல் பிரச்னையால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு மாற விண்ணப்பித்தனர். ஆனால், போர்ட்டல் கோடு தவறு எனக் கூறி, அவற்றை நிராகரித்தது. தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் இல்லாததால், வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறிவிட்டனர்.
இது தொடர்பாக, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் அதிகாரிகள் முனைப்பு காட்டாததால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை, பி.எஸ்.என்.எல்., இழந்துள்ளது. இதற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புகார் குறித்து, பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் வெங்கடேசன் கூறியதாவது:ஏர்செல் வாடிக்கையாளர்கள், போர்ட்டலில் மாறுவதில், அனைத்து நிறுவனங்களுக்கும் சிக்கல்கள் இருந்தன. இதில், பி.எஸ்.என்.எல்.,க்கு அதிக பிரச்னைகள் இருந்தன.
இதில் ஏர்செல் நிறுவனத்துக்கும் பங்கு இருப்பதால், அவர்கள் மீது தொலைதொடர்பு துறையிடம் புகார் அளித்திருக்கிறோம்; அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|