பதிவு செய்த நாள்
09 ஏப்2018
01:03
இருக்கும் வேலையையோ, அல்லது நடத்தும் தொழிலையோ விட்டுவிட்டு, முதலீட்டு துறைக்கு மாறிவிடலாமா என்ற எண்ண ஓட்டம் ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகத்தில் பரவலாக ஓங்கும்.சந்தையில் லாபம் ஈட்டுவது எளிதாக தோன்றும் நேரங்களில், இந்த எண்ண ஓட்டம் அதிகமாக வெளிப்படுவதுண்டு.
வேலைக்குப் போய் நாள் முழுவதும் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை, சில மணி நேரத்தில் ஒரு பங்கு வர்த்தகத்தில் எடுத்துவிடலாம் என்று பலருக்கு தோன்றும். ஆனால், இந்த எண்ணம் எத்தனை பேருக்கு பலித்தது என்று பார்த்தால், ஒரு கை விரல்கள் போதும்; எண்ணி முடிக்க.
பங்குகளை வாங்க கடன்
நடைமுறையில், பங்கு வர்த்தகர்கள் பணத்தை இழக்க சந்தைக்கு வருபவர்களாகத்தான் இருப்பார்கள். பங்கு வர்த்தக தொழில் அவர்களை வருவாய் இயந்திரங்களாக மட்டுமே பார்க்கிறது.
அவர்கள் இத்துறையில் இருக்கும் நேரத்தில், அவர்களிடம் எவ்வளவு வருவாய் ஈட்டலாம் என்றே பங்கு வர்த்தகத் துறை நோக்கும். இது பல வழிமுறைகளில் அரங்கேற்றம் செய்யப்படும்.‘மார்ஜின் பண்டிங்’ என்ற கடன் வசதி, மிக முக்கிய ஒரு தொழில் வழிமுறை. ஒருவர் கையில் பணம் குறைவாக இருப்பினும், அவர்கள் வசம் இருக்கும் பணம் மற்றும் பங்குகளை பகுதி பிணையாக வைத்துக்கொண்டு, மேலும் பங்குகளை வாங்க கடன் தருவார்கள்.
சந்தை உயர்ந்தால், வட்டிக்கு மிகையான லாபம் முதலீட்டாளரை சாரும். மதிப்பு குறையும்பட்சத்தில், அவர்கள் குறைபாட்டின் அளவிற்கு உரிய பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும்.
தொடர் சரிவு
அப்படிச் செய்யத் தவறினால், அவர்களின் பங்குகள், நிதி குறைபாட்டின் அளவுக்கு தகுந்தபடி, உடனடியாக விற்கப்படும். தொடர் சரிவு வரும் நேரங்களில், பெரும் நஷ்டத்தில் மூழ்கியே போவார்கள். தின வர்த்தகர்கள் பலரும் சந்திக்கும் முடிவு இதுதான். இருந்தும், ஒவ்வொரு காலகட்டத்திலும், புதிய வர்த்தகர்கள் தோன்றி இதே முடிவை சந்திப்பார்கள்.ஓய்வு பெற்றோர் பலரும் தங்கள் முழு பகல்பொழுதையும் பங்கு தரகர் அலுவகத்தில் இருக்கும் ஸ்க்ரீன் முன் கழிப்பது நமக்கு தெரிந்த ஒன்றே. ஆனால், பலரும் பொதுவெளியில் பேசாத சில விஷயங்களை இங்கு பேசவேண்டிய அவசியம் இருக்கிறது.
பங்குச் சந்தை என்பது தினமும் எளிதாக சம்பாதிக்கக் கூடிய இடம் இல்லை. மாறாக, பங்குச் சந்தையில், பணத்தை இழப்பது மிகச் சுலபம். ஒரு முதலீட்டாளர் என்ன செய்யவேண்டும் என்பதில் கவனம் காட்டுவதோடு, செய்யக்கூடாததை நன்கு புரிந்து கொள்ளவும் வேண்டும்.
மார்ஜின் முறை
முதலீட்டில், நடத்தையும் நாட்டமும் மிக முக்கியம். செய்யக்கூடாததை தெளிவாக அறிந்து, அவற்றை தவிர்க்க வேண்டும். மார்ஜின் முறையில் வர்த்தகம் செய்வது இதில் முதன்மையான ஒன்று.செய்யக் கூடாததை புரிந்து நடக்கும் ஒருவர், அடுத்து செய்ய வேண்டியதை கற்றுப் பழக வேண்டும். முதலீடுகள் அறிவுபூர்வமாக வழிநடத்தப்பட வேண்டியவை என்பதை மனமாற ஏற்க வேண்டும்.
வர்த்தகத்தை குறைத்துக்கொண்டு, பணத்தை எப்படி கவனமான முறையில் முதலீடு செய்யவேண்டும் என்ற தேடலில் இறங்க வேண்டும். இந்த தேடலில் வாசிப்பு, ஆய்வு, கருத்துப் பகிர்வு, பங்கு தேர்வுமுறை அறிதல் மற்றும், பொறுமை வளர்ப்பு முக்கியம். பண இழப்பை தவிர்க்க நெடுங்காலமாக செய்யும் இந்த பயிற்சி பெரிதும் உதவும். அதுவே, முதலீட்டு பாதையில் செல்ல விரும்புவோரின் ஆரம்பமாக இருக்க வேண்டும்.
ஷ்aயாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
பங்குச் சந்தை
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|