பதிவு செய்த நாள்
15 ஏப்2018
00:10
கடந்த ஒரு மாதமாக, உலகமே கவலையாக பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு பிரச்னை, அமெரிக்கா – சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர் தான்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்நாட்டு நலனை பாதுகாக்க, உருக்கு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு, முறையே, 25 மற்றும், 10 சதவீதம் வரி விதித்து, வர்த்தக போருக்கு வித்திட்டார். அடுத்து, சீனாவில் இருந்து இறக்குமதியாகும், 1,300 பொருட்களுக்கு, 25 சதவீத சுங்க வரி விதித்தார்.இதற்கு பதிலடியாக சீனா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும், 128 பொருட்களுக்கு, 25 சதவீதம் வரை வரி விதித்தது.
இப்படி துவங்கிய வர்த்தக போரில் என்ன நடக்கும்; யாருக்கு நஷ்டம்; எப்படி முடிவுக்கு வரும் என, பார்ப்போம்.
கொதிப்பு
அமெரிக்கா, சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை விட, 370 பில்லியன் டாலர் அதிகமாக, சீனா, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது.இதனால் அதிகரித்துள்ள வர்த்தக பற்றாக்குறையால், அமெரிக்காவில் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு குறைவதாக கூறி, சீனாவிற்கு எதிராக, டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பதிலுக்கு சீனா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் வாகனம், விவசாயம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த, 128 பொருட்களுக்கு, 25 சதவீத சுங்க வரி விதித்துள்ளது.இதனால், குறிப்பாக அமெரிக்காவின், இல்லினாய்ஸ், இண்டியானா, கான்சாஸ், மின்னசோட்டா. வாஷிங்டன் ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஏனெனில், அவர்கள் சீனாவுக்கு அதிக அளவில், சோயா பீன், ஆப்பிள், செர்ரி உள்ளிட்ட பழங்கள், கொட்டைகள், பதப்படுத்தப்பட்ட ஜூஸ் வகைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கின்றனர்.
அதிக வரி காரணமாக, சீனாவிற்கான ஏற்றுமதி குறைந்தால், உள்நாட்டில் பொருட்களை விற்க நேரும்; இதனால் விலை குறைந்து, தாங்கள் பாதிக்கப்படலாம் என்பதால், அமெரிக்க விவசாயிகள் கொதிப்படைந்து உள்ளனர்.
சீன அதிபர், ஜீ ஜின்பிங், சுங்க வரி உயர்வால், உள்நாட்டில் விலை கூடிய பொருட்களுக்கு மானியம் வழங்கி, பாதிப்பை தவிர்க்கலாம். அதுபோல, அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களுக்கும், மானிய உதவி செய்யலாம்.காரணம், சீனாவிடம், 3 டிரில்லியன் டாலர், அதாவது, 195 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது.
கடந்த, 2008ல் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியின் போது, உள்நாட்டு பொருளாதாரத்தை துாண்டுவதற்கு, தன் உபரி இருப்பில் இருந்து, சீனா செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.டிரம்பிற்கு, அவரது குடியரசு கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘இப்படியே போனால், அடுத்த தேர்தலில் ஜெயிப்பது கடினம்; விவசாயத்தை எரித்து புதைக்கப் போகிறார் டிரம்ப்...’ எனக் கூற ஆரம்பித்துள்ளனர்.
சோயா பீன் விவசாயிகள், ‘நாங்கள் ஓட்டளித்த டிரம்பே எங்களுக்கு துரோகம் செய்வார் என நினைக்கவில்லை’ என்கின்றனர்.அமெரிக்கா போலன்றி, சீனா குறைவான பொருட்களுக்கு சுங்க வரி விதித்தாலும், டிரம்பிற்கு ஒரு, ‘டிரம்ப் கார்டு’ வைத்துள்ளது.அதாவது, டிரம்ப் கட்சி வெற்றி பெற்ற இடங்களில், அதிகம் உற்பத்தியாகும், சோயா பீன், கார், விமானம் ஆகிய துறைகள் சார்ந்த பொருட்களாக பார்த்து, அதிக வரி விதித்துள்ளது. இது, நேரடியாக டிரம்பை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு சுங்க வரியை உயர்த்தினால், இறக்குமதி குறைந்து, அமெரிக்காவில் உற்பத்தி கூடிவிடுமா என்றால், இல்லை என்று தான் கூற வேண்டும். காரணம், அங்கு உற்பத்தி செலவு அதிகம். அதனால், அங்கு பணவீக்கம் தான் அதிகரிக்கும்.சீனா, வர்த்தகத்தில் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பதில், உலக நாடுகளிடம் மாறுபட்ட கருத்து கிடையாது.
அமெரிக்காவிடமிருந்து தொழில்நுட்பங்களை சீனா வாங்கிக் கொள்ளும்; ஆனால், அமெரிக்க கம்பெனிகள், சீனாவில் தொழிற்சாலைகள் துவக்க நினைத்தால், அதற்கு முட்டுக்கட்டை போடும் என்பது தெரிந்ததே.
பாதிப்பில்லை
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில், ஒன்பதாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்காவிற்கு, 2 சதவீதம் அளவே உருக்கு ஏற்றுமதி செய்வதால், எந்த விதமான பெரிய பாதிப்பும் இல்லாமல் இந்தியா தப்பித்தது.
ஆனால், இந்தியா ஏற்றுமதி செய்யும் ஜவுளி, விவசாய பொருட்களுக்கு குறி வைத்தார் டிரம்ப். ‘ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா கொடுக்கும் மானியத்தை நிறுத்த வேண்டும். மானியம் காரணமாக, பொருட்களை குறைவான விலைக்கு விற்க முடிகிறது’என, உலக வர்த்தக கூட்டமைப்பிற்கு புகார் அனுப்பியுள்ளார்.
இந்த வர்த்தக போரை, ஒரு வாய்ப்பாக கருதி இந்தியா செயல்பட வேண்டும். அமெரிக்காவில், சீனப் பொருட்கள் வரத்து குறைவால் ஏற்படும் வெற்றிடத்தை, பல்வேறு பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.‘இந்த வர்த்தக போரில் வெற்றி பெறுவது எளிது’ என்கிறார் டிரம்ப். சீன அதிபர் ஜீ ஜின்பிங், ‘வர்த்தக போரை விரும்பவில்லை; ஆனால், வருவதை சமாளிக்க முடியும்’ என்று கூறியுள்ளார்.
டிரம்பின் எதிர்பார்ப்பு என்னவெனில், சீனா உட்பட அனைத்து நாடுகளும், அமெரிக்க பொருட்களை அதிகம் இறக்குமதி செய்ய வேண்டும் என்பது தான்.சீனாவிடம் இருந்து சில சலுகைகளை வாங்கி, அதை வெற்றி என்று கூறி, இந்த வர்த்தக போரை டிரம்ப் முடித்து விடுவார் என்று தான், வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இது போன்ற பல அதிரடிநடவடிக்கைகளை ஆரம்பித்து, உலகை நடுங்க வைப்பார் டிரம்ப். ஆனால், இறுதி வரை உறுதியாக நிற்காமல், பின்வாங்கி விடுவார். இது, பல சமயங்களில் நடந்திருக்கிறது. அவர் துவக்கிய வர்த்தக போரும், அப்படித்தான் ஆகும். பரஸ்பர பேச்சில், உடன்பாடு ஏற்படும். அதன் பின், ஜீ ஜின்பிங் உடன் டிரம்ப் கைகோர்த்து, விருந்து சாப்பிட்டாலும் சாப்பிடுவார். உலகம் பீதியில் ஆழ்ந்தது தான் மிச்சம் என்று இருக்கும்.
பங்கு சந்தைகள் சரிவு
குறைந்த விலையில் அதிகம் இறக்குமதியாகும் பொருட்களால், அவை சார்ந்த, அமெரிக்க நிறுவனங்களின் உற்பத்தி குறைந்துள்ளது.அதேசமயம், ‘அதிக வரி விதிப்பால், பொருட்கள் விலை உயர்ந்து, நுகர்வோர் பாதிக்கப்படுவர்’ என, ‘வால்மார்ட், அமேசான்’ நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. அமெரிக்க பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியும், பெரிதாக இருக்கிறது. இதன் தாக்கம், இதர நாடுகளிலும் எதிரொலிக்கிறது.
சேதுராமன் சாத்தப்பன்
பொருளாதார நிபுணர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|