பதிவு செய்த நாள்
17 ஏப்2018
06:31
புதுடில்லி : வங்கி இடர்பாட்டு கடன் விதிமுறைகள் கடுமையாக உள்ளதாக, மத்திய அரசும், வங்கிகளும் தெரிவித்ததை அடுத்து, அவற்றை தளர்த்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வங்கிகளின் வாராக் கடன் சுமையைக் குறைக்க, ரிசர்வ் வங்கி, பிப்., 12ல், புதிய விதிமுறைகளை அறிவித்தது.அவற்றில், இடர்பாட்டு கடன் தவணையை திரும்பச் செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட, ‘கெடு’ குறித்து, மத்திய அரசும், வங்கிகளும் அதிருப்தி தெரிவித்தன.
இந்த விதிமுறைப்படி, இடர்பாட்டு கடன் தவணையைச் செலுத்த, ஒரு நாள் தவறினால் கூட, ஒரு நிறுவனத்தின் மீது, வங்கி, கடன் சீரமைப்பு நடவடிக்கையை துவக்கலாம்; அதில், 180 நாட்களுக்குள் தீர்வு காணத் தவறினால், திவால் நடவடிக்கை எடுக்கலாம். எனவே, ‘புதிய விதிமுறை காரணமாக, ஏராளமான சிறு, நடுத்தர நிறுவனங்கள் திவாலாக நேரிடும்; வேலைவாய்ப்புகள் உருவாவது குறையும்’ என, மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால், நிதி அமைச்சகத்திடம் தெரிவித்தார்.
ஆனால், ‘புதிய விதிமுறைகள், வங்கிகளின் வாராக் கடன் பிரச்னையை குறைத்து, அவற்றின் செயல்பாடுகளில் ஒழுங்குமுறையை ஏற்படுத்தும்’ என, பார்லி., குழுவிடம், ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தது. இதனால், மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே உரசல் உண்டானது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி, விதிமுறைகளை தளர்த்த உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையால், குறிப்பாக, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேற்கொண்டு, கடன் பெற முடியாத நிலையை உருவாக்கி விடும். வங்கிகளும், அவற்றுக்கு மீண்டும் கடன் வழங்காது.
அதனால், நிறுவனங்களின் வர்த்தகம், நிதியாதாரம் ஆகியவை பாதிக்கப்பட்டு, தன்னிச்சையாக திவால் நிலைக்கு ஆளாக நேரும். இதனால், மத்திய அரசு மற்றும் வங்கிகள் தரப்பில், ஒரு நாள், ‘கெடு’வை தளர்த்த, ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இடர்பாட்டு கடன் தவணை செலுத்த தவறுவோருக்கான கெடு, ஒரு நாளில் இருந்து ஒரு மாதமாக உயர்த்துவது குறித்து, ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.
இடர்பாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பாக, அனைத்து வங்கிகளின் இயக்குனர் குழுக்களின் கொள்கைகளை வெளியிட வேண்டும் எனவும், ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை தெரிவிக்கிறது.இது, வங்கி இயக்குனர் குழுக்களிடையே, மாறுபட்ட கொள்கைகள் உருவாக வழி வகுத்து, வங்கி அமைப்பின் கடன் மீட்பு நடவடிக்கையை பாதிக்கும் என்பதால், பொது கொள்கையை உருவாக்குவது குறித்தும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. அதனால், இந்த விதிமுறையிலும் மாற்றம் இருக்கும் என, தெரிகிறது.
சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பாதிப்பில்லாமலும், அதேசமயம், வாராக் கடனை குறைப்பதற்கான புதிய விதிமுறைகளின் தன்மையை நீர்த்து போகச் செய்யாத வகையிலும், ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு இருக்கும். இது குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகும் எனத் தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|