பதிவு செய்த நாள்
21 ஏப்2018
00:32
திருப்பூர் : டாலர், யூரோ உள்ளிட்ட அன்னிய பணத்தின் மதிப்பு உயர்வால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திருப்பூர் ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், உலகளாவிய வர்த்தகர்களிடம், ‘ஆர்டர்’ பெற்று, ஆடைகள் தயாரிக்கின்றன. ஆடைகளுக்கான விலை, அன்னிய பணத்தின் மதிப்பு அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கான ஆடைகளுக்கு, யூரோ மதிப்பிலும்; பிரிட்டன் நாட்டுக்கான ஆடைகளுக்கு, பவுண்டு மதிப்பிலும்; அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கான ஆர்டர்களுக்கு, அமெரிக்க டாலர் மதிப்பிலும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், அன்னிய பண மதிப்பில் ஏற்படும் திடீர் இறக்கம், ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; உயர்வு ஏற்பட்டால், லாபம் அதிகரிக்கும். நடப்பாண்டு ஜனவரி முதல், டாலர், யூரோ, பவுண்டு ஆகியவற்றின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
ஜனவரி மாதம், 63 ரூபாயாக இருந்த டாலர் மதிப்பு, தற்போது, 66 ரூபாயாகவும், 75 ரூபாயாக இருந்த யூரோ மதிப்பு, 81 ரூபாயாகவும், 85 ரூபாயாக இருந்த பவுண்டு மதிப்பு, 93 ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலர் விஜயகுமார் கூறியதாவது: நான்கு மாதங்களாக, டாலர், யூரோ, பவுண்டு ஆகியவற்றின் மதிப்பு உயர்ந்து வருவதால், ஆடைகளுக்கு கூடுதல் விலை பெற முடியும். டாலர் மதிப்பில் நிர்ணயிக்கும் போது, ஆடை ஒன்றுக்கு, 5 சதவீதம்; யூரோவில் பெறும் ஆர்டர்களுக்கு, 8 சதவீதம்; பவுண்ட்டில் நிர்ணயிக்கும்போது, 10 சதவீதம் வரை, கூடுதல் விலை கிடைக்கும்.
ஏற்றுமதியாளர்கள் பல இன்னல்களை சந்தித்து வரும் தருணத்தில், அன்னிய பணம் மதிப்பு உயர்வு, இத்துறையினருக்கு ஆறுதல் அளிக்கிறது. அடுத்த ஓராண்டுக்கு, அன்னிய பணம் மதிப்பு உயர்வு நிலை தொடரும் என, பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இதனால், ஏற்றுமதி துறை நன்கு வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|