பதிவு செய்த நாள்
23 ஏப்2018
00:42
தேவையில்லாத நிதி சாதனங்களில் முதலீடு செய்வது போன்ற தவறுகளை தவிர்க்க, வரிசேமிப்பு திட்டமிடலை முன்கூட்டியே மேற்கொள்வது சிறந்த வழி.
வரி சேமிப்பிற்கான முதலீடு செய்வதன் அவசியத்தை உணர்ந்திருந்தாலும் பெரும்பாலானோர் கடைசி நேரத்திலேயே இதற்கான திட்டமிடலை மேற்கொள்கின்றனர். வரி சேமிப்பு முடிவு களை தள்ளிப்போடுவதால், தவறான நிதி சாதனங்களை தேர்வு செய்யும் நிலை ஏற்படலாம்.
மேலும் தொடர்து ஆண்டுதோறும் இதே அணுகுமுறையை பின்பற்றுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என நிதி ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர். தேவையில்லாத நிதி சாதனங்களை வாங்கி வைத்திருப்பது மோசமானது, நிதி தவறுகளில் ஒன்றாக அமையும் என்கின்றனர். இத்தகைய பாதிப்பை தவிர்க்க, நிதியாண்டின் துவக்கமான ஏப்ரல் மாதமே வரி சேமிப்பு திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும்.
சரியான நேரம் :
நிதியாண்டின் துவக்கத்தில் நிதி திட்டமிடலை துவக்குவது ஏற்றதாக கருதப்படுகிறது. இதன் மூலம் தேவையான முதலீட்டு உத்திகளை வகுக்கலாம். வரி சேமிப்பு திட்டமிடல் என்பது ஒட்டுமொத்த நிதி திட்டமிடலின் ஒரு அங்கமாகவே அமைகிறது. வரி சேமிப்பு என்பது முதலீட்டின் மீது கிடைக்கும் ஒரு துணை பயன் மட்டுமே. எனவே முதலீட்டின் பயன் ஒட்டுமொத்த நோக்கில் பயன் தருவதாக இருக்க வேண்டும். வரி சேமிப்பு மட்டுமே போதுமானதல்ல.
எனவே நிதியாண்டின் துவக்கத்தில் இதற்கான திட்டமிடலை துவக்குவதே சரியாக இருக்கும். வரிசேமிப்பு திட்டமிடலில் முதலில் அறிய வேண்டிய விஷயம் வருமான வரிச்சட்டம், 80 சி பிரிவின் கீழ் விலக்கு கோர எவ்வளவு முதலீடு தேவை என்பதாகும். பி.எப். சேமிப்பு, தேசிய சேமிப்பு சான்றிதழ், வீட்டுக்கடனுக்கான வட்டி, பிள்ளைகள் கல்விச்செலவு உள்ளிட்டவை இதன் கீழ் வருகின்றன. பலரும், இந்த பிரிவின் கீழ் வரக்கூடிய முதலீட்டை ஏற்கனவே செய்திருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர். பி.எப் தொகை பிடிக்கப்படும் பட்சத்தில் அந்த தொகை போக மிச்சமுள்ள தொகையை மட்டுமே வரி சேமிப்பிற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கூடுதல் பலன் :
முன்கூட்டியே வரிசேமிப்பை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலம் அதன் மீதான கூடுதல் பலனை பெறுவதும் சாத்தியம். நிதியாண்டின் இறுதியில் முதலீடு செய்வதற்கு பதில் துவக்கத்திலேயே செய்வதன் மூலம் இது சாத்தியமாகிறது. பி.பி.எப்., போன்ற நீண்ட கால முதலீட்டில் இது அதன் முதிர்வு காலத்தில் இன்னும் கூடுதல் பலன் தருவதாக அமையும். மேலும் பல வரிசேமிப்பு முதலீடுகள் குறிப்பிட்ட லாக் இன் காலம் கொண்டவை. துவக்கத்திலேயே முதலீடு செய்தால் லாக் இன் காலம் முடிந்த பின் அவற்றில் இருந்து வெளியேறுவதும் இன்னும் விரைவாகும்.
வரி சேமிப்புக்கு, 80 சி பிரிவு தவிர வேறு பிரிவுகளும் உள்ளன. இவற்றின் கீழ் வரும் கழிவுகளை கண்டறிந்து அதற்கேற்ப திட்டமிடவும் போதிய அவகாசம் தேவை. முன்கூட்டியே திட்டமிடும் போது இது சாத்தியமாகிறது. மற்ற வாய்ப்புகளையும் கண்டறிந்து சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கடைசி நேரத்தில் வரிசேமிப்பு முதலீட்டை மேற்கொள்ளும் பதற்றத்தை தவிர்க்கலாம் என்பதோடு, அவசரத்தில் தவறான முடிவுகளை மேற்கொள்வதையும் தவிர்க்கலாம். சரியான முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்யவும் இது உதவும். வரிசேமிப்பிற்காக மட்டும் முதலிடு செய்யாமல் நிதி இலக்குகளுக்கு பொருத்தமான முடிவுகளை மேற்கொள்வதன் மூலம் வரி சேமிப்பு பலனையும் எளிதாக பெறலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|